தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழ் மொழியில் அர்ச்சனை நடைபெறும் என்றும் அர்ச்சகர் பயிற்சி பெற விரும்பும் பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்றும் அதற்கான பயிற்சியை அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
''ஏற்கனவே கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் வசதி இருந்தாலும், அதனை தற்போது மேலும் ஊக்குவிக்கப்படும். கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகரின் பெயர் மற்றும் தொடர்பு எண் கொண்ட பலகை வைக்கப்படும். எந்த கோயில்களில் அர்ச்சகர் பற்றாக்குறை இருக்கிறதோ, அங்கெல்லாம் உடனே காலியிடங்கள், பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும். திமுக பொறுப்பேற்ற கடந்த 35 நாட்களில், ஒன்பது முக்கிய முடிவுகளை கொண்ட ஆணைகளை இந்ததுறை வெளியிட்டுள்ளது. மேலும் துறையின் பணிகளை சிறப்புடன் நடத்த வேண்டிய முயற்சிகளை விரைந்து செய்துவருகிறோம்,''என்றார்.
''திருக்கோயில் பணியாளர்களை நேரடியாக அரசு விளம்பரம் செய்து பணியிடங்களை நிரப்புவது, அரசு தேர்வாணையம் மூலம் பணியாளர்களை நியமிப்பது என பலகோணங்களை விவாதித்தோம். பணி நிரந்தரம் செய்யப்படவேண்டிய நபர்கள் எவ்வளவு நபர்கள் என விரிவாக பேசியிருக்கிறோம். விரைவாக ஆலோசித்து காலியிடங்களை நிரப்பும் வேலைகளை ஈடுட்டப்பட்டுள்ளோம்.''என்றார் அமைச்சர் சேகர்பாபு.
''கொரோனா காரணமாக சில கோயில்களில் நான்கு கால பூசை, ஒரு கால பூசை மட்டுமே நடைபெறுகிறது. கொரோனா பரவல் குறைவதை பொறுத்து, கொரோனா சோதனை செய்து அர்ச்சகர்கள் முழுமையாக பணியாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்கீழ்,அடுத்த 100 நாட்களில், அனைத்து சாதியினர் அர்ச்சகராக இருப்பார்கள் என உறுதி அளித்தார்.