You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு

இந்தியா, இலங்கை, தமிழ்நாடு மற்றும் சர்வதேச அளவிலான முக்கியச் செய்திகளை பிபிசி தமிழின் இந்த சிறப்பு நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு

    கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.

    இன்று நடைபெற்ற 44ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    வென்டிலேட்டர் மாஸ்குகள், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், பைபாப் இயந்திரம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டிவரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    கருப்பு பூஞ்சை தொற்று நோய்க்கான சிகிச்சையில் பயன்படும் ஆம்போடெரிசின் மருந்துக்கான ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டுள்ளது.

    ரெம்டிசிவிர் மருந்துக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    சானிடைசர், வெப்பநிலை சோதிக்கும் கருவி ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

  2. பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

    தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழ் மொழியில் அர்ச்சனை நடைபெறும் என்றும் அர்ச்சகர் பயிற்சி பெற விரும்பும் பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்றும் அதற்கான பயிற்சியை அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

    ''ஏற்கனவே கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் வசதி இருந்தாலும், அதனை தற்போது மேலும் ஊக்குவிக்கப்படும். கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகரின் பெயர் மற்றும் தொடர்பு எண் கொண்ட பலகை வைக்கப்படும். எந்த கோயில்களில் அர்ச்சகர் பற்றாக்குறை இருக்கிறதோ, அங்கெல்லாம் உடனே காலியிடங்கள், பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும். திமுக பொறுப்பேற்ற கடந்த 35 நாட்களில், ஒன்பது முக்கிய முடிவுகளை கொண்ட ஆணைகளை இந்ததுறை வெளியிட்டுள்ளது. மேலும் துறையின் பணிகளை சிறப்புடன் நடத்த வேண்டிய முயற்சிகளை விரைந்து செய்துவருகிறோம்,''என்றார்.

    ''திருக்கோயில் பணியாளர்களை நேரடியாக அரசு விளம்பரம் செய்து பணியிடங்களை நிரப்புவது, அரசு தேர்வாணையம் மூலம் பணியாளர்களை நியமிப்பது என பலகோணங்களை விவாதித்தோம். பணி நிரந்தரம் செய்யப்படவேண்டிய நபர்கள் எவ்வளவு நபர்கள் என விரிவாக பேசியிருக்கிறோம். விரைவாக ஆலோசித்து காலியிடங்களை நிரப்பும் வேலைகளை ஈடுட்டப்பட்டுள்ளோம்.''என்றார் அமைச்சர் சேகர்பாபு.

    ''கொரோனா காரணமாக சில கோயில்களில் நான்கு கால பூசை, ஒரு கால பூசை மட்டுமே நடைபெறுகிறது. கொரோனா பரவல் குறைவதை பொறுத்து, கொரோனா சோதனை செய்து அர்ச்சகர்கள் முழுமையாக பணியாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்கீழ்,அடுத்த 100 நாட்களில், அனைத்து சாதியினர் அர்ச்சகராக இருப்பார்கள் என உறுதி அளித்தார்.

  3. ''கோவிஷீல்டு தடுப்புசியால் காந்தமாக மாறிவிட்டேன்’’

    கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு தனது உடல் காந்தம் போல மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார் நாசிக்கை சேர்ந்த ஒரு நபர்.

  4. மேட்டூர் அணை திறப்பு

    காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று காலை தமிழக முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.

    காவிரி டெல்டா குறுவைப் பாசனத்திற்காக மேட்டூர் அணை 88 ஆவது ஆண்டாக இன்று திறக்கப்பட்டது.

  5. தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு - புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

    தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கொரோனா பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.

    இது தொடர்பாக முதலமைச்சர் விடுத்திருக்கும் அறிக்கையில், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  6. ஜி7 மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோதி

    பிரிட்டனில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் காணொளி வாயிலாக கலந்து கொள்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி. உலகை மீண்டும் வலுவாக கட்டி அமைப்பது, ஒன்றாக கட்டி அமைப்பது மற்றும் சுற்றுச் சூழலை மனதில் வைத்து மேம்படுத்துவது, ஆகிய தலைப்புகளில் கீழ் நடைபெறும் நிகழ்வில் அவர் கலந்து கொண்டு பேசுவார்.

  7. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் 719 மருத்துவர்கள் மரணம்

    இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் 719 மருத்துவர்கள் மரணம்

    இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் வீரியம் சற்று குறைந்து வருகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 84,332 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இது 70 நாட்களில் இல்லாத அளவிற்கு குறைவான எண்ணிக்கை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 4,0012 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், முதல் அலையை விட இரண்டாம் அலையில் இந்தியாவில் அதிக மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    மொத்தம் 719 மருத்துவர்கள் கொரோனாவின் இரண்டாம் அலையில் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கழுகம் தெரிவித்துள்ளது.

    அதிகபட்சமாக பிகாரில் 111 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அடுத்த இடத்தில் டெல்லியில் 109 மருத்துவர்களும், உத்தரப்பிரதேசத்தில் 79 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்தில் 32 மருத்துவர்களும், புதுவை ஒரு மருத்துவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  8. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!

    இந்தியா, இலங்கை, தமிழ்நாடு மற்றும் சர்வதேச அளவிலான முக்கியச் செய்திகளை பிபிசி தமிழின் இந்த சிறப்பு நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    கொரோனா தொடர்பான முக்கிய செய்திகளும், கட்டுரைகளும் இந்த நேரலை பக்கத்தில் பகிரப்படும்.