You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

`கோழிகளிடமிருந்து தள்ளி இருங்கள்` - பாக்டீரியா தொற்றால் அமெரிக்காவில் எச்சரிக்கை

அமெரிக்காவில் சால்மோனெல்லா என்ற வகை பாக்டீரியா தொற்று பரவி வருவதால் தாங்கள் வளர்க்கும் கோழிகளை முத்தமிடவோ அல்லது தடவிக் கொடுக்கவோ வேண்டாம் என அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இலங்கையில் கருப்பு பூஞ்சை தொற்று

    கருப்பு பூஞ்சை எனப்படும் கிருமி தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் இந்த தொற்றுக்குள்ளானவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.இந்த கிருமி தொற்றானது, எவ்வாறு இலங்கைக்குள் பரவியது என்பது தொடர்பில் ஆராயப்படுவதாக அந்த சங்கம் கூறுகின்றது.

  2. `இந்திய வகை` என குறிப்பிடும் பதிவுகளை நீக்க வேண்டும் - இந்திய அரசு

    சமூக ஊடக நிறுவனங்கள் கோவிட் – 19-இன் `இந்திய வகை` என குறிப்பிடும் பதிவுகளை நீக்க வேண்டும் என இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இந்த வகை வைரஸை உலக சுகாதார நிறுவனம்B.1.617என்று வகைப்படுத்தியுள்ளது. எனவே இதை `இந்திய வகை` என்று கூறுவது தவறானது என இந்திய ஐடி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இம்மாதிரியாக புவியியல் குறியீடாக பிரிட்டன், பிரேசில் வகை கொரோனா வைரஸ் என குறிப்பது வழக்கம்.

    இந்தியா கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கையாண்டவிதம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    கடந்த மாதம் டிவிட்டரில் அரசை விமர்சிக்கும் பதிவுகளை நீக்க வேண்டும் என டிவிட்டர் நிறுவனத்திற்கு ஆணையிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    “சமூக ஊடகங்களில் `இந்திய வகை` கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி வருவதாக ஒரு தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறானது” என தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  3. 'கோழிகளிடமிருந்து தள்ளி இருங்கள்' - அமெரிக்காவில் பரவும் பாக்டீரியா தொற்று

    அமெரிக்காவில் சால்மோனெல்லா என்ற வகை பாக்டீரியா தொற்று பரவி வருவதால் தாங்கள் வளர்க்கும் கோழிகளை முத்தமிடவோ அல்லது தடவிக் கொடுக்கவோ வேண்டாம் என அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் 43 மாகாணங்களில் இந்த வகை தொற்றால் 163 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சுகாதார அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    இந்த தொற்று கோழிகளிடமிருந்து பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    “பறவைகளை முத்தமிடுவதையோ அல்லது தடவிக் கொடுப்பதையோ தவிருங்கள், அது உங்கள் வாய்க்குள் கிருமியை பரப்பி உங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்” என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

    கோழி அல்லது வாத்துப் பண்ணைகளிலிருந்து இந்த பாக்டீரியா பரவுவதாகவும், பறவைகள் சுத்தமாக காணப்பட்டாலும் கிருமி பரவும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இது பறவைகள் உலாவும் மற்றும் வாழும் இடங்களில் எளிதில் பரவும் ஆபத்துடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தொற்று காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். பலர் சிகிச்சை இல்லாமலும் குணமடைந்துவிடுவர் ஆனால் இந்த தொற்று தீவிரமாகத் தாக்கப்பட்டால் இறப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது.

    அமெரிக்காவில் இந்த தொற்றால் ஒவ்வொரு வருடமும் 10 லட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். 420 பேர் உயிரிழக்கின்றனர்.

  4. தமிழ்நாட்டில் தளர்வு இல்லாமல் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

    எதற்கெல்லாம் அனுமதி? புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

  5. ஏர் இந்தியாவின் டேட்டா சர்வரில் சைபர் தாக்குல் – திருட்டுப்போன வாடிக்கையாளர்கள் தகவல்கள்

    தனது தகவல் சர்வரில்சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதனால் உலகம் முழுவதும் உள்ள 4.5 மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவல் திருட்டு முதலில் பிப்ரவரி மாதம் ஏர் இந்தியா நிறுவனத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டது.

    வாடிக்கையாளர்களின் கடவுச்சீட்டு, பயணச்சீட்டு தகவல்கள் மற்றும் க்ரெடிட்கார்ட் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

    இருப்பினும் இலக்கு வைக்கப்பட்ட சர்வரில் வாடிக்கையாளர்களின் கிரெடிட்கார்டில்உள்ள சிவிவி அல்லது சிவிசி எண்கள் சேமிக்கப்படவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்பது தெரியவில்லை.

    2011ஆம் ஆண்டு ஆகஸ்டு 26 தேதி முதல் 2021ஆம் ஆண்டு 20ஆம் தேதி வரை பதியப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    தற்போது ஏர் இந்தியா தனது வாடிக்கையாளர்களை, தங்களது வலைத்தள கணக்கின் கடவுச் சொல்லை மாற்ற வேண்டும் எனக் கோரியுள்ளது.

  6. பிறந்து இரண்டே நாட்கள் ஆன குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை

    இலங்கையில் பிறந்து இரண்டே நாட்களே ஆன குழந்தைக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக்கூடிய சூழலில் இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.

    இலங்கைஅவிசாவளை பகுதியைச் சேர்ந்த கர்ப்பணித் தாய் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

    இந்த குழந்தையை ஈன்றெடுத்த தாய்க்குகோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,குறித்த இரட்டை குழந்தைகள் மற்றும் தாய் ஆகியோர் உடனடியாக முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு பிறந்த குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இரத்தத்தில் உரிய வகையில்ஆக்சிஜன் இருக்கவில்லை எனகுழந்தைகள் நல மருத்துவர்கள்தெரிவித்த நிலையில்,அந்தகுழந்தைக்குபரிசோதனைகள்மேற்கொள்ளப்பட்டன.

    இவ்வாறு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் குழந்தைக்கு பிறப்பிலேயே இதய நோய் உள்ளமையும் அது உடனடியாகஅறுவை சிகிச்சைமூலம் சீர் செய்யப்பட வேண்டியதென்றும் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து,குறித்த குழந்தை பொரள்ளை ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

    பொரள்ளை ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில்,விசேட இதயஅறுவைசிகிச்சை நிபுணர்மருத்துவர்சிதம்பரநாதன் முகுந்தன் தலைமையிலான குழுவினால் அன்றிரவே ஏழு மணித்தியாலங்கள்அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த குழந்தை ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் தளர்வுகளின்றி ஒரு வாரகாலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

    தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஏற்கனவே சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு மே 24ஆம் தேதி வரை அமலில் உள்ள நிலையில், கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில், தற்போது மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இன்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார் பின் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர் குழுவினருடன் ஆலோசனைகளை மேற்கொண்ட பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  8. இந்தியாவில் 20,66,285 பேருக்கு கொரோனா பரிசோதனை

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,57,299 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,194 கோவிட்-19 காரணமாக இறந்துள்ளனர்.

    இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 20,66,285 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.

    அரசு தகவலின்படி இதுவரை இந்தியாவில் 2,62,89,290 பேர் கொரோனா பாதிப்பு உண்டாக்கியுள்ளது. 2,95,525 பேர் இறந்துள்ளனர்.

  9. திடீரென கலைக்கப்பட்ட நேபாள நாடாளுமன்றம்

    கொரோனா வைரஸ் பரவலுக்கு நடுவே நேபாள நாட்டின் குடியரசு தலைவர் பித்யா தேவி பண்டாரி அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார்.

    காபந்து அரசின் பிரதமராக இருக்கும் கே.பி. ஷர்மா ஒலி, எதிர்க் கட்சித் தலைவர்ன் ஷேர் பகதூர் தூபா ஆகிய இருவருமே குடியரசுத் தலைவர் விதித்த காலக்கெடுவான வெள்ளிக்கிழமைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க இயலவில்லை.

    நவம்பர் 12 மற்றும் நவம்பர் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தலைமையிலான அமைச்சரவை 202 டிசம்பரிலேயே நாடாளுமன்றத்தைக் கலைக்கப் பரிந்துரை செய்தது.

    ஆனால் இம்முடிவை, அரசமைப்புச் சட்டதுக்கு எதிரானது என்று கூறி பிப்ரவரி மாதத்தில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

    கொரோனா இரண்டாம் அலையால் அங்கு தினமும் 8,000-க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உண்டாகிறது .

  10. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டின் 3ஆம் ஆண்டு

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018இல் நடந்த போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 15 பேரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று, அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து இறந்தவர்களின் உறவினர்கள், மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    சுற்றுச்சூழல் விதிமீறலுக்காக தமிழ்நாடு அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தற்போதைய கொரோனா நெருக்கடியால், செயற்கை ஆக்சிஜன் பயன்பாட்டுக்கு மட்டும் தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.

  11. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 120 வயது பாட்டி

    ஜம்மு - காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தில் இருக்கும் தூது எனும் ஒரு தொலைதூர கிராமத்தில் 120 வயதாகும் தோலி தேவி எனும் மூதாட்டி கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார்.

    வயது குறைவாக உள்ளவர்களே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அச்சம் நிலவும் சூழ்நிலையில் 120 வயதாகும் தோலி தேவி தடுப்பூசி எடுத்துக்கொண்டது பரவலான பாராட்டைப் பெற்று வருகிறது.

    ஜம்மு- காஷ்மீர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்களை அமைக்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

    பிறருக்கு முன்னுதாரணமாக தோலி தேவி கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதைப் பாராட்டி கௌரவிக்கும் விதமாக, இந்திய ராணுவத்தின் வடக்கு மண்டலத்தின் தலைவர் லெஃப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே. ஜோஷி, வெள்ளியன்று மூதாட்டியின் வீட்டுக்கு சென்று, அவரைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார்.

    தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் தமக்கு உடல் உபாதை எதுவும் உண்டாகவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார் தோலி தேவி பாட்டி.

  12. தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளை அதிகரித்துக் காட்டிய மோசடி அம்பலம்

    வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் மாதிரிகளை தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாகக் காட்டி, தமிழகத்தில் கொரோனா அதிகரித்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாக Medall ஆய்வகத்திற்கு தமிழக பொது சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  13. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    சர்வதேச அளவிலும், இந்திய மற்றும் இலங்கை அளவிலும், தமிழ்நாட்டிலும் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உங்களுக்கு இந்தப் பக்கத்தில் செய்தியாகத் தொகுத்து வழங்குகிறோம்.