வந்துகொண்டிருக்கும் செய்தி, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜிநாமா
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார்.
மகாராஷ்டிரா சட்டப் பேரவையில் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் நேரலையில் பேசிய அவர், தனது முடிவுக்காக சிவசேனை தொண்டர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
முதலமைச்சர் பதவியுடன் சட்ட மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்வதாக அவர் அறிவித்தார்.
"ஜனநாயகத்தில் எண்களைக் காட்ட தலைகள் எண்ணப்படுகின்றன. எனக்கு அதில் ஆர்வம் இல்லை. இந்த விளையாட்டுகளை நான் விளையாட விரும்பவில்லை. நாளை அவர்கள் சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரேவின் மகனை வீழ்த்தியதாகச் சொல்வார்கள்." என்று அவர் கூறினார்.
சோனியா காந்தி மற்றும் சரத் பவார் ஆகியோருக்கு தனது உரையின்போது உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம் இன்று எந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தாலும், அதை நாங்கள் மதிக்கிறோம், பின்பற்றுவோம் என்று கூறினார்.
முன்னதாக மகாராஷ்டிரா சட்டப் பேரவையில் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
முன்னதாக வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சட்டப் பேரவையைக் கூட்ட மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷயாரி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சிவசேனை மூத்த தலைவர் சுரேஷ் பிரபு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தற்போது உத்தரவ் தாக்கரே ராஜிநாமா செய்திருக்கும் நிலையில் நாளை சட்டப் பேரவையில் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடப்பது சந்தேகத்துக்கு உள்ளாகியிருக்கிறது