You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜிநாமா

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார். சட்டப் பேரவையில் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜிநாமா

    மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார்.

    மகாராஷ்டிரா சட்டப் பேரவையில் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.

    ஃபேஸ்புக் நேரலையில் பேசிய அவர், தனது முடிவுக்காக சிவசேனை தொண்டர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

    முதலமைச்சர் பதவியுடன் சட்ட மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்வதாக அவர் அறிவித்தார்.

    "ஜனநாயகத்தில் எண்களைக் காட்ட தலைகள் எண்ணப்படுகின்றன. எனக்கு அதில் ஆர்வம் இல்லை. இந்த விளையாட்டுகளை நான் விளையாட விரும்பவில்லை. நாளை அவர்கள் சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரேவின் மகனை வீழ்த்தியதாகச் சொல்வார்கள்." என்று அவர் கூறினார்.

    சோனியா காந்தி மற்றும் சரத் பவார் ஆகியோருக்கு தனது உரையின்போது உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்தார்.

    உச்ச நீதிமன்றம் இன்று எந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தாலும், அதை நாங்கள் மதிக்கிறோம், பின்பற்றுவோம் என்று கூறினார்.

    முன்னதாக மகாராஷ்டிரா சட்டப் பேரவையில் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

    முன்னதாக வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சட்டப் பேரவையைக் கூட்ட மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷயாரி உத்தரவிட்டிருந்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சிவசேனை மூத்த தலைவர் சுரேஷ் பிரபு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    தற்போது உத்தரவ் தாக்கரே ராஜிநாமா செய்திருக்கும் நிலையில் நாளை சட்டப் பேரவையில் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடப்பது சந்தேகத்துக்கு உள்ளாகியிருக்கிறது

  2. வாட்ஸ்அப்பில் பாலியல் தொல்லை: பிளஸ் 2 மாணவிகள் புகாரால் ஆசிரியர் கைது

    சென்னையில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை முகப்பேரில் இயங்கி வரும் அரசுப் பள்ளி ஒன்றின் வேதியியல் ஆசிரியர் ஒருவர், மாணவிகளும் பாலியல் தொல்லை தரும் வகையில் பேசுவதாக மாவட்ட குழந்தைகள் நலக் குழுவுக்குப் புகார்கள் வந்துள்ளன. அப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவிகளிடம் வாட்ஸ்அப்பில் ஆசிரியர் ஸ்ரீதர் தவறாக உரையாடியதாகக் கூறப்படுகிறது.

    இதுதொடர்பான வாட்ஸ்அப் ஆதாரங்கள், ஆடியோ பதிவுகள் ஆகியவற்றையும் குழந்தைகள் நலக் குழுவினரிடம் இரண்டு மாணவிகளின் பெற்றோர் அளித்தனர். இதனையடுத்து, அரசுப் பள்ளிக்கே நேரடியாக வந்து குழந்தைகள் நலக் குழுவினர் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா காரணமாக ஆன்லைனில் வகுப்புகள் நடந்தபோது, சில மாணவிகளை இலக்காக வைத்து பாலியல் தொல்லை தரும் வகையில் ஆசிரியர் ஸ்ரீதர் பேசியதையும் அதிகாரிகள் தங்களின் நேரடி விசாரணையில் உறுதி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், வகுப்பறையிலேயே பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் சில மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வாட்ஸ்அப் உரையாடல்களும் வெளியானது.

    இந்நிலையில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்டக் குழந்தைகள் நலக் குழுவினர் புகார் அளித்தனர். இதனையடுத்து, ஆசிரியர் ஸ்ரீதரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  3. குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியில் சேர நோட்டீசை விநியோகம் செய்த கல்லூரி முதல்வர்

  4. மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் மற்றும் ஒஸ்மானாபாத் நகரங்களின் பெயர்கள் மாற்றம்

    மகாராஷ்டிராவில் அவுரங்காபாத், உஸ்மானாபாத் மற்றும் நவி மும்பை விமான நிலையங்களின் பெயரை மாற்ற அம் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மும்பையில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதலை அளிக்கப்பட்டுள்ளது.

    தற்போது அவுரங்காபாத் நகருக்கு சம்பாஜி நகர் என்றும், உஸ்மானாபாத் நகருக்கு தாராஷிவ் என்றும், நவி மும்பை விமான நிலையத்திற்கு டிபி பாட்டீல் சர்வதேச விமான நிலையம் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

  5. கருமுட்டை விற்பனை செய்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி

    ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை தாயே விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் இதுவரை பெண்ணின் தாயார் அவரது இரண்டாவது கணவர், இடைத்தரகர் மற்றும் ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொடுத்தவர் என ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட சிறுமியின் தாய் இந்திராணி அவருடைய இரண்டாவது கணவர் சையத் அலி மற்றும் இடைத்தரகர் மாலதி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில் சிறுமி காப்பகத்தில் கழிவறைகளை சுத்தம் செய்யும் மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் இதை அடுத்து அவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

    இது தொடர்பாக ஈரோடு அரசு மருத்துவமனை வந்த மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சரவணன் சிறுமியிடம் தீவிர விசாரணை நடத்தினார் .

    பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது நல்ல நிலையில் உள்ளார் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துவிடுவார்கள். பயமுறுத்துவதற்காகவே பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். ஏனென்றால் அந்த சிறுமியின் அப்பா, அம்மா இந்த பிரச்சினை தொடர்பாக சிறையில் உள்ளனர்." என்று தெரிவித்தார்.

    "சிறுமிக்கு ஏற்கனவே நாங்கள் கவுன்சிலிங் கொடுத்துள்ளோம் இருந்தபோதிலும் அந்த சிறுமி வீட்டிற்கு செல்லவேண்டும் என்ன நிலைபாட்டிலேயே இருந்துள்ளார். அதோடு ஏற்கனவே அந்த சிறுமி மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். 24 மணிநேர கண்காணிப்புக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்வதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்" என அவர் தெரிவித்தார்.

  6. நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தது எப்படி?

  7. சர்வதேச அளவில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளமாக இந்தியா உள்ளது இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

    கல்லூரி கனவு என்ற பெயரில் பிளஸ்2 படித்து முடித்துவிட்டு மேல்படிப்பு என்ன படிக்கலாம் என்ற நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இஸ்ரே முன்னாள் தலைவர் சிவன், ஆகியோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பதிலளித்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சந்திராயன் விண்வெளிக்கு அனுப்புவதில் சில குறைகள் உள்ளன அந்த குறைகளை சரி செய்யும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த குறைகள் சரி செய்யப்பட்ட பின்னர் விரைவில் இஸ்ரோ சந்திராயன் அனுப்பப்படும் என்றார்.

    மேலும் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்து அதற்காக சுமார் 2700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது இதில் 80% பணிகள் முடிவு பெற்றுள்ளன மேலும் குலசேகரப்பட்டினத்தில் இருந்து சிறிய ரக ராக்கெட் ஏவப்பட உள்ளது.

    சர்வதேச அளவில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளமாக இந்தியா உள்ளதால் குலசேகரபட்டிணத்தில் சிறிய ரக ராக்கெட் ஏவப்படும் நிலம் கையகப்படுத்தப்பட்ட பின் மண் பரிசோதனை செய்யப்பட்டு விரைவில் ராக்கெட் ஏவுதளம் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

  8. நூபுர் ஷர்மா vs முகமது ஜுபைர்: ஒரே பிரிவில் வழக்கு - வெவ்வேறு நடவடிக்கை ஏன்?

  9. ஆகஸ்டு 6ம் தேதி இந்திய துணை குடியரசுத் தலைவர் தேர்தல்

    இந்திய துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வருகின்ற ஆகஸ்டு 6ஆம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    தற்போது இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராக உள்ள வெங்கய்ய நாயுடுவின் பதவிக் காலம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இத்தகைய சூழலில், இந்தியாவின் 16ஆவது துணை குடியரசுத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 5ஆம் தேதி தொடங்கும் எனவும் துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ளது எனவும் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  10. "சனாதனத்தின் மூலமே பூமியில் உள்ள அனைத்து விதமான உயிர்களையும் காப்பாற்ற முடியும்" தமிழ்நாடு ஆளுநர்

    அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் ஒருங்கிணைந்து வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயண பீடத்தில் நடத்திய பாலாறு பெருவிழா இன்று நடைபெற்றது.

    இந்த விழாவில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, "நதிகளை நாம் பாதுகாக்க, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நதிகளை நாம் தெய்வங்களாக வணங்க வேண்டும்.

    2016இல் பிரதமர் நரேந்திர மோதி, காற்றாலை மற்றும் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பு திட்டத்தை துவக்கி வைத்தார். ஆரம்பத்தில் பல நாடுகள் ஆர்வம் காட்டவில்லை. தற்போது 100 நாடுகள் இந்த திட்டத்தில் இணைந்து இருக்கிறார்கள்.

    2025க்குள் 100 ஜிகா வாட்ஸ் மரபுசாரா எரிசக்திக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் 2021 செப்டம்பர் மாதத்திலேயே அதை அடைந்து விட்டோம். தற்போது, 2030க்குள் 500 ஜிகா வாட் மின் உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சனாதனத்தின் மூலமே பூமியில் உள்ள அனைத்து விதமான உயிர்களையும் நதிகளையும் காப்பாற்ற முடியும். இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்கள். இதுதான் சனாதனம். பூமியை ஒரு ஆதாரமாகப் பார்க்க கூடாது. அதை வணங்க வேண்டும். காலநிலை மாற்றம் உலகத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அடுத்த 30 - 40 ஆண்டுகளுக்குள் சிறிய தீவுகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

    கார்பன் வெளியேற்றத்தால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்து நீரை வழிபட்டு வருகிறேன். ஆதிகாலம் முதல் பஞ்ச பூதங்களை வணங்கி வருகிறோம். சிலப்பதிகாரத்தில் அரசன் கூட குளங்களை வெட்டி பாதுகாக்க வேண்டும் என இளங்கோவடிகள் சொன்னது போல, ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்ரித் சரோவர் என்ற திட்டத்தை பிரதமர் செயல்படுத்தி வருகிறார்.

    இந்த திட்டத்தின் மூலம் 2023 ஆகஸ்ட் மாதத்துக்குள் 50 ஆயிரம் குளங்களை வெட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அடுத்து வரும் 25 ஆண்டுகள் மிக முக்கியமான ஆண்டுகள். 2047ஆம் ஆண்டுக்குள் ஏரிகளின் மேலாண்மையில் நாம் உலக நாடுகளுக்கு தலைமை நாடாகத் திகழ வேண்டும். அதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என பேசியுள்ளார்.

  11. “ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவிற்கு அழைக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர் தம்பி சூர்யா” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு

  12. ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்ப்பு நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

    "ரயில்வே துறையில் பல லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கும் ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்ப்பது போல சில வருடங்களுக்கு மட்டும் ஆள் எடுக்கும் நிலையை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரி திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ. துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசை கண்டித்தும், ரயில்வே துறையில் உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப கோரியும், அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் கோஷமிட்டனர்.

    இதுகுறித்து எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் வீரசேகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அக்னிபத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் ரயில் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்" என எச்சரித்தார்.

    இந்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது அக்னிபத் திட்டத்தின் கீழ், சுமார் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ராணுவ வீரர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு தற்போது அதற்காக இந்தியா முழுவதும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வருகின்றன.

  13. எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை என்ன நிலையில் உள்ளது?

  14. சூர்யா, கஜோலுக்கு 'ஆஸ்கர்ஸ்' அகாடமியில் உறுப்பினராக அழைப்பு - சுவாரசிய தகவல்கள்

  15. நூபுர் ஷர்மாவை கண்டித்து இஸ்லாமிய இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

    இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் பழனி பேருந்து நிலையம் முன்பு நூபுர் ஷர்மாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பழனி டவுன் முஸ்லிம் தர்மபரிபாலன சங்கம், பழனி தாலுகா ஜமாஅத், பழனி தாலுகா உலமா சபை மற்றும் இஸ்லாமிய இயக்கங்களைச் சார்ந்த இளைஞர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    நபிகள் நாயகம் குறித்து இழிவுபடுத்தும் கருத்துக்களை தெரிவித்த பாஜக முன்னாள் உறுப்பினர் நூபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜின்டால் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

  16. உதய்பூரில் கன்ஹையா லால் படுகொலை தொடர்பாக என்.ஐ.ஏ விசாரிக்க உத்தரவு

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கன்ஹையா லால் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் எந்தவொரு அமைப்பின் தலையீடோ அல்லது சர்வதேச அளவிலான ஏதாவது தொடர்பு உள்ளதா என்று முழுமையாக விசாரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில், நேற்று மாலை தையல்கடை நடத்தி வரும் ஒருவரை கடைக்குள் புகுந்த இருவர் கத்தியால் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  17. எம்.எல்.ஏ. வைத்திலிங்கத்துக்கு கொரோனா தொற்று

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும் ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து அவர், தனது சென்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

  18. தலை வெட்டிக்கொல்லப்பட்ட நபர்; பிரதமர் மோதிக்கும் மிரட்டல் - ராஜஸ்தானில் நேற்று நடந்தது என்ன?