இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது
வணக்கம்.
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. நேரலைப்பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருந்தமைக்கு நன்றி.
இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்.
- இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்தது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் சந்தித்தனர்.
- மத்தியப் பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
- மாநில மின் உற்பத்திக் கழகங்கள் நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டும் என்று இந்திய மின்சாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய நண்பர் பாஸ்கரராமன் என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது.
- இலங்கையில் முள்ளிவாய்க்கால் போர் நினைவேந்தல் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், இலங்கை நெருக்கடியை பயன்படுத்தி உள்நாட்டு, வெளிநாட்டு குழு அழுத்தம் தர முயற்சிப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
- இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதல்கட்ட நிவாரணப் பொருட்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணையதளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி






