You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கீயவில் வீடுகள், ஷாப்பிங் மையங்களில் குண்டுவீசி தாக்குதல்: புகைப்படங்கள்

யுக்ரேன் தலைநகர் கீயவில் பெரும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நன்றி நேயர்களே...

    இன்றைய நேரலைப் பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. மீண்டும் புதிய நேரலை பக்கம் நாளை காலை தொடங்கும்.

    இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

    • 132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் மற்றும் விபத்தில் உயிரிழந்தோர் குறித்த விவரங்கள் தெளிவாக தெரியவரவில்லை.
    • யுக்ரேன் தலைநகர் கீயவின் பொடில்ஸ்கி மாவட்டத்தில் ஷாப்பிங் மையம் மற்றும் சில வீடுகள் மீது ஷெல் தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
    • கீயவ் நகரில் உள்ளூர் நேரம் 20:00முதல்புதன்கிழமை 07:00 மணிவரை ஊரடங்கு உத்தரவை அந்நகர மேயர் அறிவித்துள்ளார்.
    • ரஷ்ய படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட மேரியோபோல் நகரத்தில் ரஷ்யா போர் குற்றங்களில் ஈடுபடுவதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். அந்நகரத்தின் மையப்பகுதி வரை தீவிர சண்டை நடைபெற்று வருகிறது.
    • மேரியோபோல் நகரத்தில் மோசமான சூழ்நிலை தொடர்ந்து வருகிறது. தீவிரமான குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு மத்தியில், மின்சாரம், உணவு, தண்ணீர் இன்றி 3,00,000 பேர் சிக்கியுள்ளனர். மேலும், 90 சதவீத கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
    • மேரியோபோல் நகர மக்கள் சரணடைந்தால், துறைமுகத்தைவிட்டு பாதுகாப்பான பாதையில் செல்லலாம் என, ரஷ்யா இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதனை ஏற்க யுக்ரேன் மறுத்துவிட்டது.
    • யுக்ரேனில் ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து இன்று மீண்டும் ரஷ்ய பங்குசந்தை திறக்கப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதார தடைகள் காரணமாக, உணவு பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வசிப்போர் எதிர்கொண்டுள்ளனர்.
    • கடந்த வாரம் பிரிட்டன் அமைச்சர்களுக்கு வந்த வதந்தி தொலைபேசி அழைப்புகளுக்குப் பின் ரஷ்ய அதிபர் மாளிகை இருப்பதாக நம்பப்படுவதாக, பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
  2. சுற்றிவளைத்த ரஷ்யப் படை, பணிய மறுக்கும் யுக்ரேன் படை

    யுக்ரேனின் மேரியோல் நகரத்தை ரஷ்யப் படைகள் சுற்றிவளைத்துள்ளன.

    ஆயினும் கெடு விதிக்கப்பட்டதையும் தாண்டிய யுக்ரேன் படைகள் சரணடைய மறுத்து வருகின்றன.

    துறைமுகநகரான மேரியோபோலில் மூன்று புறத்தையும் ரஷ்யப்படைகள் சுற்றி வளைத்துவிட்டன. கடலோரப் பகுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது.

    இந்த நகரத்தில் இன்னும் 3 லட்சம் பொதுமக்கள் சிக்கியிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

    உள்ளூர்நேரப்படி இன்று மாலைக்குள் யுக்ரேனிய படைகள் சரணடைய வேண்டும் என்று ரஷ்யப் படைகள் கெடுவிதித்திருந்தன. ஆனால் யுக்ரேன் படைகள் சரணடையவில்லை. இதனால் பெரும் தாக்குதல் நடக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

  3. யுக்ரேனில் இன்று இதுவரை என்ன நடந்தது?

    இந்த நேரலைப் பக்கத்தில் இப்போதுதான் இணைந்தீர்களா? யுக்ரேனில் இன்று இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதை இங்கே வழங்குகிறோம்:

    • யுக்ரேன் தலைநகர் கீயவின் பொடில்ஸ்கி மாவட்டத்தில் ஷாப்பிங் மையம் மற்றும் சில வீடுகள் மீது ஷெல் தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
    • கீயவ் நகரில் உள்ளூர் நேரம் 20:00முதல்புதன்கிழமை 07:00மணிவரைஊரடங்கு உத்தரவை அந்நகர மேயர் அறிவித்துள்ளார்.
    • ரஷ்ய படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட மேரியோபோல் நகரத்தில் ரஷ்யா போர் குற்றங்களில் ஈடுபடுவதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். அந்நகரத்தின் மையப்பகுதி வரை தீவிர சண்டை நடைபெற்று வருகிறது.
    • மேரியோபோல் நகரத்தில் மோசமான சூழ்நிலை தொடர்ந்து வருகிறது. தீவிரமான குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு மத்தியில், மின்சாரம், உணவு, தண்ணீர் இன்றி 3,00,000 பேர் சிக்கியுள்ளனர். மேலும், 90 சதவீத கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
    • மேரியோபோல் நகர மக்கள் சரணடைந்தால், துறைமுகத்தைவிட்டு பாதுகாப்பான பாதையில் செல்லலாம் என, ரஷ்யா இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதனை ஏற்க யுக்ரேன் மறுத்துவிட்டது.
    • யுக்ரேனில் ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து இன்று மீண்டும் ரஷ்ய பங்குசந்தை திறக்கப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதார தடைகள் காரணமாக, உணவு பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வசிப்போர் எதிர்கொண்டுள்ளனர்.
    • கடந்த வாரம் பிரிட்டன் அமைச்சர்களுக்கு வந்த வதந்தி தொலைபேசி அழைப்புகளுக்குப் பின் ரஷ்ய அதிபர் மாளிகை இருப்பதாக நம்பப்படுவதாக, பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
  4. சீனா போயிங் 737 எம்யூ5735 விபத்து: உயிரிழந்தோருக்கு துருக்கி அரசு இரங்கல்

    சீன விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு துருக்கி அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.

    132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் விவரம் குறித்தும் விபத்துக்கான காரணம் குறித்தும் இன்னும் தெளிவாக தெரியவரவில்லை. ஆனால், விபத்தில் யாரும் உயிர்பிழைத்ததற்கான அடையாளம் ஏதும் இல்லை என, நிகழ்விடத்தில் உள்ள மீட்புக்குழுவினரிடமிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், துருக்கி வெளியுறவு துறை அமைச்சகம், இவ்விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் சீன அரசு மற்றும் அந்நாட்டு மக்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. ஜெயலலிதா மரணம்: ஓபிஎஸ்ஸிடம் நடந்த 5 மணிநேர விசாரணை

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு, இன்று காலை தனது வழக்கறிஞர் குழுவுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார்.

    அப்போது, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்கள் என்ன மாதிரியான சிகிச்சைகளை வழங்கினர் என்பது குறித்தும் ஆணையம் கேள்வியெழுப்பியதாகத் தகவல் வெளியானது. `

    “ஜெயலலிதாவுக்கு சர்க்கரை குறைபாடு தவிர இதர நோய்கள் இருப்பது குறித்து தனக்குத் தெரியாது”என ஓபிஎஸ் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், விசாரணையின் முழு விவரங்கள் வெளியாகவில்லை.

    இதன்பின், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஓபிஎஸ்ஸிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட காலத்தில் சிசிடிவி அகற்றப்பட்டது உள்பட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. விசாரணையின் நடுவே, மின்தடையால் குறுக்கு விசாரணையை தொடர்வதில் சிரமம் நீடித்தது.

    இதையடுத்து, நாளை மீண்டும் விசாரணை நடக்கவுள்ளதாகவும் ஓபிஎஸ் ஆஜராக இருப்பதாகவும் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

    முன்னதாக, சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் ஆணையம் முன்பு இன்று ஆஜரானார். அப்போது, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் இளவரசியும் அங்கு இருந்ததால் அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    ஓரிரு முறை மட்டுமே ஜெயலலிதாவைப் பார்த்ததாகவும் அதுவும் கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்ததாகவும், இளவரசி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஆணையத்தின் விசாரணைக்குப் பிறகு வெளியில் வந்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ”நாளை விரிவாகப் பேசுகிறேன்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து, நாளை விசாரணை நிறைவுற்ற பிறகு ஓ.பன்னீர்செல்வம் அளித்த வாக்குமூலம் தொடர்பான முழு விவரங்களும் வெளிவரலாம் எனக் கூறப்படுகிறது.

  6. உத்தராகண்ட் மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் தேர்வு

    உத்தராகண்ட் மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற உத்தராகண்ட் மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, அம்மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைத்தது.

    அம்மாநில முதல்வர் யார் என்ற விவரம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், உத்தராகண்ட் மாநில முதல்வராக, புஷ்கர் சிங் தாமி இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கதிமா தொகுதியில் போட்டியிட்ட புஷ்கர் சிங் தாமி, காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர கப்ரியிடம் தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதேபோன்று, கோவா மாநிலத்தில் பாஜக வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில், அம்மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் மீண்டும் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  7. 132 பேருடன் சென்ற சீன விமானம் விபத்திற்கு உள்ளானது எப்படி?

  8. சீனா போயிங் 737 எம்யூ5735 விபத்து: பிரதமர் மோதி துயரம்

    சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமான விபத்து அறிந்து தான் மிகுந்த துயரம் அடைந்ததாக, இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

    132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் விவரம் குறித்தும் விபத்துக்கான காரணம் குறித்தும் இன்னும் தெளிவாக தெரியவரவில்லை. ஆனால், விபத்தில் யாரும் உயிர்பிழைத்ததற்கான அடையாளம் ஏதும் இல்லை என, நிகழ்விடத்தில் உள்ள மீட்புக்குழுவினரிடமிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்த விபத்தால் தான் வருத்தமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, நரேந்திர மோதி தன் ட்விட்டர் பக்கத்தில், “132 பேருடன் பயணித்த MU5735விமானம், சீனாவின் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து, மிகவும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் என்னுடைய பிரார்த்தனைகள்” என தெரிவித்துள்ளார்.

  9. கீயவில் வீடுகள், ஷாப்பிங் மையங்களில் குண்டுவீசி தாக்குதல்: புகைப்படங்கள்

    யுக்ரேன் தலைநகர் கீயவில் ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து பெரும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில், வீடுகள் மற்றும் ஷாப்பிங் மையங்களில் நடைபெற்ற தாக்குதல்களும் அடங்கும்.

  10. பெற்றோர்கூட இல்லாமல் நடந்த யுக்ரேன் வீரரின் இறுதிச்சடங்கு

      • எழுதியவர், ஜோயல் கன்டர்
      • பதவி, பிபிசி செய்திகள், லூவிவ்

    போரில் உயிரிழந்த யுக்ரேன் வீரர் டிமிட்ரோ கோடென்கோவின் உடல், நிலத்தில் கிடத்தப்பட்டிருந்தபோது அவருடைய குடும்பத்தினர் யாரும் அங்கு இல்லை.

    அவருடைய இறப்புக்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக எழுப்பபப்ட்ட குண்டு முழக்கங்களை அவருடைய பெற்றோர்கள் கேட்கவில்லை. அவருடைய உடலுக்கு மேலே பொருத்தப்பட்டிருந்த மரச்சிலுவையில் சுற்றப்பட்டிருந்த ரிப்பன், காற்றில் படபடத்த சத்தத்தையும் அவர்கள் கேட்கவில்லை.

    கோடென்கோவின் பெற்றோர்கள் சுமியில் 600 மைல்கள் (960 கிமீ) தொலைவில் உள்ளனர். அவர்களுடைய மகன் லூவிவில் அன்றைய தினம் புதைக்கப்பட்டதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

    யுக்ரேனின் பல நகரங்களில் ரஷ்யாவின் தொடர் தாக்குதலால், உயிரிழந்த யுக்ரேன் வீரர்கள் சிலரின் உடல்கள் அவர்களது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவில்லை. அவர்களுடைய குடும்பத்தினர் ஷெல் தாக்குதலுக்கு மத்தியில் சிக்கியுள்ளதால், உயிரிழந்த தங்கள் குடும்பத்தினரின் இறுதிச்சடங்கில் அவர்களால் கலந்துகொள்ள முடியவில்லை.

    கோடென்கோ புதைக்கப்பட்டபோது, அவர் அறிந்த முகங்களில் ஒன்று மட்டும் கல்லறையில் இருந்தது. அவர், கோடென்கோவின் பள்ளி கால நண்பர் வாடிம் யாரோவென்கோ.

    “அவருடைய வீட்டிலிருந்து மிக தொலைவில் என் நண்பர் புதைக்கப்பட்டதை நான் பார்த்தேன்” என அவர் கூறினார்.

  11. இலங்கை பொருளாதார நெருக்கடி - விலைவாசி உயர்ந்தது ஏன்? - ஓர் எளிய விளக்கம்

    இலங்கைக்கு மூன்று வழிகளில் அதிகமான பணம் வருகிறது. ஒன்று தேயிலை, இரண்டாவது ஆடை உற்பத்தி மூன்றாவது சுற்றுலா. இதை மூன்று 'டி' என்கிறார்கள். பொருளாதாரத்தில் இந்த மூன்று துறைகள்தான் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன.

    இந்த வழக்கத்தை உடைத்தது 2020-ஆம் ஆண்டில் வந்த கொரோனா. 2020 மார்ச் மாதம் முதல் இலங்கையும் அண்டை நாடுகளும் சர்வதேச விமானச் சேவைகளை நிறுத்தின. நாடும் முடங்கியது. பொருளாதாரத்தின் தூண்களாக இருந்த தேயிலை, ஆடை உற்பத்தி, சுற்றுலாத் துறை ஆகிய அனைத்தும் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டன.

    இந்த மூன்றைத் தவிர வேறு எந்த நிரந்த வருமானமும் இல்லாத இலங்கை, படிப்படியாகப் பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கியது.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, போயிங் 737-800 ரக விமானங்களை இயக்க தடை: ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

    132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 7.8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    இதனிடையே, விபத்துக்குள்ளான போயிங் 737-800 ரக விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அந்த விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  13. சமீப ஆண்டுகளில் நடந்த மோசமான விமான விபத்துகள்

    132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளானது. சமீப ஆண்டுகளில் நிகழ்ந்த மோசமான விமான விபத்துகள் குறித்து இங்கே வழங்குகிறோம்.

    2021

    கடந்த ஜனவரி 9ஆம் தேதி ஸ்ரீவிஜயா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, ஜாவா கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், அந்த விமானத்தில் பயணித்த 62 பேரும் உயிரிழந்தனர்.

    2020

    மே 22 அன்று, 91 பயணிகள் மற்றும் விமானக்குழுவை சேர்ந்த 8 பேருடன் பயணித்த ஏர்பஸ் ஏ320 ரக விமானம், பாகிஸ்தானின் கராச்சியில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறைந்தது 2 பேர் மட்டுமே இந்த விபத்தில் உயிர்பிழைத்தனர்.

    2019

    மார்ச் 10 அன்று, எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்த போயிங் 737 மேக்ஸ் ரக விமானம், அடிஸ் அபாபா பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 157 பேரும் இதில் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்கள் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

    2018

    அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜீயர்ஸில் ஏப்ரல் 11 அன்று, ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் விமானக்குழுவை சேர்ந்த 10 பேர் உட்பட பயணித்த 257 பேரும் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களுள் பெரும்பாலானோர், ராணுவத்தினரும் அவர்களின் குடும்பத்தினருமாவர்.

    2017

    2017ஆம் ஆண்டில் எந்தவொரு விமான விபத்தும் நடைபெறவில்லை.

    2016

    டிசம்பர் 25 அன்று, கருங்கடலில் ரஷ்ய ராணுவ விமானமான Tu-154 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த 92 பேரும் உயிரிழந்தனர். சிரியாவில் ரஷ்ய படையினருக்காக கலைநிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், ராணுவத்தினர் இவ்விபத்தில் உயிரிழந்தனர்,.

  14. சீனா போயிங் 737 விமானம்: விபத்து நிகழ்ந்த இடம் எது?

    132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளானது. இந்நிலையில், அந்த விமானம் விபத்துக்குள்ளான இடம் குறித்து தெரியவந்துள்ளது. குவாங்சி மாகாணத்தின் டெங்ஸியான் மாவட்டத்தின் லங்னானில் அமைந்துள்ள மொலாங் கிராமத்தில் விபத்து ஏற்பட்டதாக, உள்ளூர் அவசரசேவை பிரிவு அதிகாரிகள் தெரிவித்ததாக, சிஜிடிஎன் ஊடகம் தெரிவித்துள்ளது.

  15. போரை நிறுத்த விரும்பும் 9 வயது யுக்ரேன் சிறுமி - யார் இவர்?

  16. இந்தியாவில் கொரோனா நான்காம் அலை எப்போது தொடங்கும்? வல்லுநர்கள் சொல்வது என்ன?

      • எழுதியவர், ஆ. விஜயானந்த்
      • பதவி, பிபிசி தமிழ்

    இந்தியாவில் கொரோனா நான்காவது அலை விரைவில் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். `தமிழ்நாட்டில் தொடக்கம் முதலே ஒமிக்ரான் 1, 2 ஆகியவை இணைந்தே பாதிப்பை ஏற்படுத்தியதா என்பது தெரிந்தால் நான்காம் அலை வருவதை எளிதாகக் கணிக்கலாம்,' என்கின்றனர் மருத்துவத்துறை வல்லுநர்கள்.

  17. மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும்: மதிமுகவினர் இடையே வாக்குவாதம்

    மதிமுகவை தாய்கழகமான திமுகவுடன் இணைக்க வேண்டும் என, மூன்று மாவட்ட மதிமுக செயலாளர்கள் தெரிவித்ததால், கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    சிவகங்கை மதிமுக அலுவலகத்தில் இன்று கட்சி செயல்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன், “வைகோ வாரிசு அரசியலுக்கு எதிராக மதிமுகவை ஆரம்பித்துவிட்டு தனது வாரிசை பதவியில் அமர வைத்துள்ளார். இருபத்தி எட்டு ஆண்டு காலம் கட்சியில் உழைத்தவர்களுக்கு மதிமுக மதிப்பு கொடுக்கவில்லை, மறைமுக பேரம்பேசி மதிமுகவை திமுகவுடன் இணைக்க முயற்சி நடந்து வருகிறது என குற்றம்சாட்டினார்.

    இதனிடையே, மதிமுகவை பிளவுபடுத்த முயற்சிப்பதாககூறி, முன்னாள் தேர்தல் பணிக்குழு செயலாளர் பாலுச்சாமி, மாவட்ட துணைசெயலாளர் சார்லஸ், நகரச் செயலாளர் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் கட்சி அலுவலத்தில் இருந்து வெளியேறி முழக்கமிட்டனர்.

    இதன் காரணமாக அங்கு பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

  18. சீனா ஈஸ்டர்ன் விமானம் போயிங் 737 எம்யூ5735 விபத்து: 132 பேரின் நிலைமை என்ன?

    132 பேருடன் பயணித்த சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளானது. இந்நிலையில், ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் கருப்பு – வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது.

    மொத்தமாக 450 வன தீயணைப்புப்படையினர் விபத்து நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளதாக, சிஜிடிஎன் ஊடகம் தெரிவித்துள்ளது.

    இவர்களுள் 300 பேர் மாலை 6.30 மணியளவிலும், 150 பேர் இரவு 10.30 மணியளவிலும் நிகழ்விடத்திற்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமானத்தில் பயணித்த 132 பேரின் நிலைமை என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

  19. உலக வன தினம்: கடலில் விடப்பட்ட 150 ஆமை குஞ்சுகள்

    உலக வன தினத்தையொட்டி தனுஷ்கோடி ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் இருந்து 150 ஆமை குஞ்சுகள் கடலில்விடப்பட்டது.

    ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் ஆமைகள் முட்டையிடுவது வழக்கம். இந்தாண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை 15,500 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பொறிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று உலக வன தினத்தையொட்டி தனுஷ்கோடி பொறிப்பகத்தில் வைக்கப்பட்டடிருந்த முட்டைகளில் இருந்து பொறிக்கப்பட்ட 150ஆமைக்குஞ்குசுகள் வனத்துறையினரால் கடலில் விடப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவியர் கலந்துகொண்டு ஆமை முட்டையிடுவது மற்றும் குஞ்சு பொறிப்பது குறித்து வனத்துறையினரிடம் கேட்டறிந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து அரிச்சல்முனை கடற்கரை வரை ஆமைகள் முட்டையிட்டுச் சென்றுள்ளதா? என்பதை கண்டறிய வனத்துறையின் வேட்டைத் தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி பகுதியில் எம்.ஆர்.சத்திரம்,கோரி, கம்பிப்பாடு உள்ளிட்ட இடங்களில் ஆமைகள் இட்டுச் சென்ற 15,500 ஆமை முட்டைகள் வனத்துறையின் மூலம் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு, எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கடல் ஆமை முட்டை குஞ்சு பொறிப்பகத்தில் பாதுகாப்பாக மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்தன.

    இதில், 52 நாட்களுக்குப்பின் நேற்று மாலை தனுஷ்கோடி முகுந்தராயர்சத்திரம் பொறிப்பகத்தில் முட்டையில் இருந்து 150 ஆமை குஞ்சுகள் வெளி வந்தது. இன்று உலக வன தினத்தையொட்டி மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பக வனத்துறை அதிகாரிகள், மாவட்ட கூடுதல் ஆட்சியர் மாணவ, மாணவியர் முன்னிலையில், தனுஷ்கோடி தெற்கு கடல் பகுதியில் ஆமை குஞ்சுகளை பாதுகாப்பாக விட்டனர்.

    கடற்கரை மணலில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள் அனைத்தும் சிறிது நேரத்தில் மெதுவாக ஊர்ந்தபடி சென்று தனுஷ்கோடி கடலில் நீரில் நீந்தி ஆழமான பகுதியை நோக்கி சென்றன.

    “இதுநாள் வரை ஆமை முட்டைகள் மற்றும் ஆமை குஞ்சுகளை புத்தகத்தில் மட்டும்மே பார்த்துள்ளோம், இன்று உலக வனதினத்தையொட்டி ஆமை முட்டைகளில் இருந்து பொறிக்கப்பட்ட ஆமை குஞ்சுகளை நேரடியாக பார்த்தது மிகவும் மகிழ்ச்சி” என, மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

  20. வந்துகொண்டிருக்கும் செய்தி, சீன போயிங் 737 விமான விபத்து: தற்போது என்ன நடக்கிறது?

    சீனாவில் 132 பேருடன் விமானம்நொறுங்கி விபத்துக்குள்ளான செய்தியில், மேலதிக தகவல்களை சீன அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

    சீனாவின் வடகிழக்கு நகரமான யீச்சூனில் கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற விமான விபத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் விமான விபத்து இதுவாகும்.

    MU5735 விமானம் குன்மிங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி பகல் 1:15க்கு (05:15 GMT) புறப்பட்டு குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் மதியம் 03:07-க்கு குவாங்சோவை அடைந்திருக்க வேண்டும்.

    இந்த விமானத்தில் 123 பயணிகள், 9 விமானக்குழுவினர் என, 132 பேர் பயணித்தனர்.

    தற்போது நிகழ்விடத்திற்கு மீட்புக்குழுவினர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்து தொடர்பாக, சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடர்புகொள்ள இயலவில்லை.

    இந்த விபத்து தொடர்பாக, தீயணைப்பு அதிகாரி ஒருவர் ‘குளோபல்’ டைம்ஸ்’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “25 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 117 தீயணைப்புப் படையினரை விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பியுள்ளோம். ஆனால், அந்த பகுதி மிகவும் தொலைதூரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியாகும். எனவே, தீயணைப்பு வாகனங்கள் அந்த பகுதியை அடைய முடியவில்லை. தீயணைப்புப் படையினர் நடந்தே அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்” என தெரிவித்தார்.

    விபத்துக்குள்ளான போயிங் 737 ரக விமானம் சுமார் ஆறரை ஆண்டுகளாக இயங்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமானத்தில் மொத்தமாக 162 இருக்கைகள் உள்ளன. இதில், 12 பிசினஸ் வகுப்பு இருக்கைகள் மற்றும் 150 பொருளாதார வகுப்பு இருக்கைகள் ஆகும்.