கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பத்து தினங்களாக அவ்வப்போது மழைபெய்து வந்ததால் மாவட்டத்தின் முக்கிய அணைகளான பேச்சிபாறை , பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கபட்டு வந்தது.
இந்நிலையில் வெள்ளிகிழமை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை நீடித்ததால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது இதனால் அணைகள் நிரம்பியதை தொடர்ந்து அணைகளில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கபட்டது.
இதனால் கோதையாறு , பரளியாறு , தாமிரபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் திக்குறிச்சி, குழித்துறை , வைக்கலூர்,காஞ்சாம்புரம் , முஞ்சிறை,மங்காடு போன்ற பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் அப்பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் முகாம்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
குழித்துறை மேல்புறம் சாலை , அருமனை களியல் சாலை , மங்காடு புதுகடைசாலை , திக்குறிச்சி ஞாறாம்விளை சாலை , உள்ளிட்ட சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் சாலைகள் துண்டித்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வாழை, மரிச்சினி, ரப்பர் உள்ளிட்ட சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.