சிவாஜி கணேசன் பிறந்த நாள்: டூடுள் வெளியிட்ட கூகுள் நிறுவனம்

தமிழின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக கொண்டாடப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 93-வது பிறந்த நாளை ஒட்டி கூகுள் நிறுவனம் தனது தேடுபொறி பக்கத்தில் அவருக்கு டூடுள் வெளியிட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. அக்டோபர் 1ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    பிபிசி நேயர்களுக்கு வணக்கம்,

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. பழைய வாழ்க்கைக்கு திரும்பும் ஆஸ்திரேலியர்கள்

    ஆஸ்திரேலியா

    பட மூலாதாரம், EPA

    ஆஸ்திரேலியா, நவம்பர் மாதம் தொடங்கி தனது சர்வதேச எல்லைகளை திறக்க முடிவு செய்துள்ளது.

    கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியா பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஆஸ்திரேலிய குடிமக்கள் நாட்டைவிட்டு வெளியேறவும் தடை விதித்தது.

    இது கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த பெரிதும் உதவியது ஆனால் மக்களிடையே பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

    பலர் தங்களின் குடும்பங்களை விட்டு நீண்டநாள் பிரிய வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

    “ஆஸ்திரேலியர்களுக்கு தங்களின் வாழ்வை திரும்பி அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் மக்கள் அவர்கள் வசிக்கும் மாநிலங்களின் தடுப்பு மருந்து விகிதம் 80 சதவீதமாக இருந்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

    அதேபோல வெளிநாட்டு பயணிகளுக்கு உடனடியாக அனுமதில்லை. இருப்பினும் அதுகுறித்து யோசித்து வருவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

  3. சிவாஜி கணேசன்: சீதை வேடத்தில் நடித்தது முதல் அமெரிக்க நகரில் மேயரானது வரை

    சிவாஜி 93வது பிறந்த நாளை ஒட்டி கூகுள் நிறுவனம் வெளியிட்ட டூடுள்.

    பட மூலாதாரம், Google

    படக்குறிப்பு, சிவாஜி 93வது பிறந்த நாளை ஒட்டி கூகுள் நிறுவனம் வெளியிட்ட டூடுள்.

    கடந்த நூற்றாண்டு தமிழ்த் திரையுலகை ஆட்சி செய்த ஆளுமை, நடிப்பின் இலக்கணம் என்று போற்றப்படும், சிவாஜி கணேசன் 93-வது பிறந்த நாள் இன்று.

    அவர் திரைவெளியையும், உலகையும் விட்டு நீங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றைக்கு கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டுக் கொண்டாடும் அளவுக்கு அவர் தமிழ்த் திரையுலகின் மீது செலுத்திய செல்வாக்கு சக்தி மிக்கதாக இருந்தது.

    அந்த நடிகர் திலகத்தின் வாழ்வைக் கடந்து சென்ற சில சுவாரசியமான நிகழ்வுகளை தொகுத்து அளித்திருக்கறது பிபிசி தமிழ்.

    எடுத்துக் காட்டாக அவர் நடித்த சீதை கதா பாத்திரம் பற்றியும், அவரை ஒரு நாள் முதல்வராக்கி கௌரவித்த அமெரிக்க நகரைப் பற்றியும் உங்களுக்குத் தெரியுமா?

  4. உள்ளாட்சித் தேர்தல்: அரசு வாக்குறுதியும், நீதிபதிகள் உத்தரவும்

    தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் நடக்கவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், மத்திய போலீஸ் படையினரை பாதுகாப்புக்கு அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில தேர்தல் ஆணையத்திடம்அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மனு அளித்திருந்தார். இந்த மனுவை பரிசீலிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், `மாவட்டத்தில் 20 சதவீத வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா மற்றும் இணையதள நேரலைவசதிகள் ஏற்படுத்தப்படும்' என தெரிவிக்கப்பட்டது. மேலும், ` ஸ்டிராங்க் ரூம், வாக்கு எண்ணிக்கை மையங்கள் அடையாளம் காணப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். சிக்கலான மற்றும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் மட்டும் வீடியோ பதிவு செய்யப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து, அ.தி.மு.க தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ` மாவட்டத்தில் 20 சதவீத வாக்குச்சாவடிகள் மட்டுமல்லாமல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் இணையதள நேரலை வசதிகளைச் செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையங்கள், ஸ்டிராங்க்ரூம்கள் குறித்த விவரங்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

    மேலும், ` வாக்குச்சாவடிகளில் தொடர்ந்து வீடியோ பதிவு செய்ய வேண்டும். ஸ்ட்ராங் ரூம்களுக்கு உள்ளேயும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். தேர்தல் பார்வையாளர்களின் விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்' எனவும் வலியுறுத்தினார். இதற்குப் பதில் அளித்த தமிழ்நாடுஅரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், `ரகசியமாக செயல்படக்கூடிய தேர்தல் பார்வையாளர்களை அடையாளப்படுத்த முடியாது. வாக்கு எண்ணிக்கை மையத்திலும், ஸ்ட்ராங்க் ரூம்களுக்கு வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால், உள்ளே பொருத்த வேண்டிய அவசியமில்லை' எனவும்வாதிட்டார். இருப்பினும், ` முடிந்தளவு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

    அரசுத் தரப்பு பதிலை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். பின்னர், 100 சதவிகித இடைவிடாத வீடியோ பதிவுக்கு நடவடிக்கை எடுப்பதாக அரசுத்தரப்பில் ஒப்புதல் அளித்ததை பதிவு செய்த நீதிபதிகள், இதே நடைமுறைகளைப் பின்பற்றி அரசால் தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக தெரிவித்தனர்.மேலும் அனைத்து ஒன்றியங்களிலும் கூடுதல் தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், `எந்தப் புகாருக்கும் இடம் தராத வகையில் அதிகாரிகள் நியாயமான முறையில் தேர்தல் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்' என அறிவுறுத்தினர்.

  5. பிரதமர் மோதியை சந்திக்கும் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி

    சரண்ஜித் சிஹ் சன்னி.

    பட மூலாதாரம், CHARANJIT SINGH CHANNI

    படக்குறிப்பு, சரண்ஜித் சிஹ் சன்னி.

    டெல்லி வந்துள்ள பஞ்சாபின் புதிய காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்கிறார்.

    பஞ்சாபில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், காங்கிரசில் சூறாவளியாக வீசிக்கொண்டிருக்கிறது. சில நாள்களுக்கு முன்புதான் பதவி இழந்த பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், டெல்லி வந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அமரிந்தர் சிங் பாஜகவில் சேருவாரா என்ற பேச்சும் எழுந்தது. ஆனால், தாம் பாஜகவில் சேரப்போவதில்லை என்றும், ஆனால், காங்கிரசில் இருந்து வெளியேறப்போவதாகவும் அமரிந்தர் சிங் கூறினார்.

  6. சிவாஜி பிறந்த நாள் விழா போக்குவரத்து நெரிசல்: நீதிபதி வண்டி நிறுத்தப்பட்டதற்கு கண்டனம்

    சென்னையில் நடிகர் சிவாஜிகணேசன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் வந்ததால் டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    அந்த நேரத்தில் நீதிமன்றம் சென்றுகொண்டிருந்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

    நீதிபதியை 25 நிமிடம் தடுத்து நிறுத்தியதற்கு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, உள்துறை செயலாளர் பிரபாகர் காணொலி காட்சி மூலம் ஆஜராகி வருத்தம் தெரிவித்தார்.

  7. சிவாஜி கணேசன் பிறந்த நாளை ஒட்டி டூடுள் வெளியிட்ட கூகுள்

    Sivaji doodle.

    பட மூலாதாரம், Google

    படக்குறிப்பு, டூடுள்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த நாளை ஒட்டி அவரை கௌரவிக்கும் வகையில் டூடுள் வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.

    கூகுள் தேடுபொறி பக்கத்தில் முக்கிய நிகழ்வுகள், நபர்களை நினைவுகூறும் வகையில் வெளியிடப்படும் படங்களே டூடுள் என்று அழைக்கப்படுகின்றன.

    அந்த குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட படங்கள் கூகுள் தேடுபொறி பக்கத்தில் கூகுள் பெயரோடு சேர்த்து டிசைன் செய்யப்பட்டிருக்கும்.

    இன்று வெள்ளிக்கிழமை தமிழின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக கொண்டாடப்படும் சிவாஜி கணேசன் பிறந்த நாளை ஒட்டி அவரது படத்தை டூடுளாக வெளியிட்டுள்ளது கூகுள்.

  8. எக்ஸ்போ 2020 துபாயில் தொடங்கியது

    190க்கும் மேற்பட்ட உலக நாடுகள் தங்கள் கண்டுபிடிப்புகள், கலாசார நடவடிக்கைகள் போன்றவற்றைக் காட்டும் வகையில் திட்டமிடப்பட்ட துபாய் எக்ஸ்போ 2020 தற்போது தொடங்கியுள்ளது.

    கடந்த ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றால் இந்நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டது. கட்டடக் கலை, கலை, கலாச்சாரம், வணிகம், தொழில்முனைவு, கண்காட்சி, உணவு, தொழில்நுட்பம், கலை நிகழ்ச்சிகள், ஆட்டோமொபைல் என பல துறை சார்ந்த விஷயங்கள் இந்த எக்ஸ்போவில் உள்ளதாக துபாய் எக்ஸ்போ 2020 வலைத்தளம் குறிப்பிடுகிறது.

    இந்த நிகழ்வு நேற்று (செப்டம்பர் 30, வியாழக்கிழமை) இரவு தொடங்கியது. மார்ச் 2022 வரை இந்த கண்காட்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக துபாய் அரசு சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையும் நன்றாக இருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அடுத்த ஆறு மாத காலத்துக்குள் 2.5 கோடி பார்வையாளர்களை இந்த கண்காட்சி ஈர்க்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள்.

    ஆனால் பகுப்பாய்வாளர்களோ, உலகம் முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் இருப்பதால், இந்த இலக்கை அடைய போராட வேண்டி இருக்கும் என கூறுகின்றனர்.

  9. விமானத்தை தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணையை பரிசோதித்த வட கொரியா

    விமானத்தை தாக்கி அழிக்கும் புதிய ரக ஏவுகணையை வியாழக்கிழமை பரிசோதித்ததாக வட கொரியா கூறியுள்ளது.

    கடந்த ஒரு மாத காலத்துக்குள் வட கொரியா நடத்திய நான்காவது ஏவுகணை பரிசோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஏவுகணை சிறப்பாக செயல்பட்டதாகவும், அதில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் வட கொரியாவின் அரசு ஊடகமான கே சி என் ஏ குறிப்பிட்டுள்ளது.

    கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்கும் போதும், வட கொரியா தன் ஆயுத மேம்பாட்டை குறைக்கும் எண்ணத்தில் இல்லை என்பதையே சமீபத்தைய ஆயுத பரிசோதனைகள் காட்டுகின்றன. தென் கொரியா உடனான ஹாட்லைன் தொடர்பை மீண்டும் ஏற்படுத்த வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் விருப்பம் தெரிவித்திருந்தார்.

    இப்படிப்பட்ட ஏவுகணை பரிசோதனைகள் நிலையற்றதன்மை மற்றும் பாதுகாப்பின்மையை உருவாக்குவதாக அமெரிக்காவின் உள்துறை செயலர் அந்தோனி ப்ளிங்கன் கூறினார். ஆனால் வடகொரியாவோ தற்காப்புக்கு ஆயுதங்கள் தேவை என கூறியுள்ளது.

    மேலும் அமெரிக்காவும், தென் கொரியாவும் இந்த விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதாகவும் வட கொரியா கூறிவருகிறது.

  10. வணக்கம் நேயர்களே!

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்புடைய இன்றைய செய்திகளை இந்த நேரலைப் பக்கத்தில் பகிர்கிறோம். எங்களுடன் இணைந்திருங்கள்.