நன்றி நேயர்களே!
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.
பிபிசி தமிழின் பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுப்பு நடத்துவதன் மூல காரணமாக அல்-காய்தா நடத்திய இந்தத் தாக்குதல் அமைந்தது.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.
பிபிசி தமிழின் பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
இஸ்ரேல் சிறை ஒன்றில் இருந்து இந்த வார தொடக்கத்தில் தப்பிய ஆறு பாலத்தீனர்களில் நான்கு பேர் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்களில் இருவர் சனிக்கிழமை அதிகாலை கார் நிறுத்தம் ஒன்றில் பதுங்கி இருந்த போது பிடிக்கப்பட்டனர் என்றும் மற்ற இருவர் வெள்ளிக்கிழமை அன்று நாசரேத் நகரின் அருகே பிடிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது இஸ்ரேல் காவல்துறை.
மேற்குக் கரையில் உள்ள நகரான ஜெனின் எனும் நகரிலுள் அல்-அக்சா தியாகிகள் படையின் முன்னாள் தளபதி சக்காரியா ஜூபெய்தியும் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவராவார். மீதமுள்ள மூவர் 'இஸ்லாமிய ஜிகாத்' எனும் அமைப்பினர் ஆவர்.
கடந்த திங்களன்று இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள கில்போ சிறைச்சாலையில் இருந்து ஆறு பேர் தப்பிய பின் அவர்களுக்கான தேடுதல் வேட்டை தொடங்கியது.
செப்டம்பர் 11 தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. நான்கு விமானத் தாக்குதல்கள் அடுத்தடுத்து நடந்தது எப்படி என்று விவரிக்கிறது இந்தக் காணொளி.
செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல் குறித்து எண்ணற்ற புரளிகள் பரவி வருகின்றன. அவை குறித்த பிபிசியின் சிறப்பு காணொளி.
சீன தொழிலதிபர் ஜாக் மா வெற்றி நடை போட்டுக்கொண்டிருந்தார். அவரது நிறுவனமான 'அலிபாபா'வின் சார்பு நிதி நிறுவனமான 'க்ரூபோ ஹார்மிகா' 2020 நவம்பரில் ஹாங்காங் மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட இருந்தது.
க்ரூபோ ஹார்மிகாவின் மதிப்பு, சுமார் 34.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படி பட்டியலிடப்படுவது அலிபாபாவின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் கடைசி சில நிமிடங்களில் நிலைமை மாறியது.
செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல்களின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அமெரிக்கா முழுவதும் நடைபெற்று வருகின்றன.
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுப்பு நடத்துவதன் மூல காரணமாக அல்-காய்தா நடத்திய இந்தத் தாக்குதல் அமைந்தது.
சுமார் 3000 பேர் கொல்லப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஆறு இடங்களில் அலுவல்பூர்வ மௌன அஞ்சலிகள் நடக்கின்றன.
குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி பதவி விலகியுள்ளார்.
தம்மைப் போன்ற ஓர் எளிய தொண்டர் குஜராத் முதல்வராக பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்காக அவர் தனது கட்சியான பாஜகவுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
தனது பதவிக் காலத்தில் குஜராத்தின் வளர்ச்சிப் பாதையில் மேலும் சிறிது வளர்ச்சியைக் கூட்ட பாடுபட்டதாகவும், பிரதமர் மோதியின் வழிகாட்டுதலில் இந்த வளர்ச்சிப் பயணம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சனிக்கிழமை மாலை ஆளுநரை சந்தித்து தனது விலகல் கடிதத்தை அவர் அளித்தார்.
அவரது விலகல் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, பாஜக-வில் பொறுப்புகள் மாறிக்கொண்டே இருக்கும் என்றும் அதுதான் அந்த கட்சியின் சிறப்பு என்றும் அவர் கூறினார்.
புதிய முதல்வரின் கீழ் ஆட்சி புதிய உற்சாகத்துடன் நடக்கும் என்றும் அவர் கூறினார். யாருடைய தலைமையில் சட்ட மன்றத் தேர்தலை கட்சி எதிர்கொள்ளும் என்று கேட்டபோது, "பிரதமர் மோதியின் தலைமையில்" என்று அவர் பதில் அளித்தார்.
புதிய உத்வேகத்தோடு கட்சியின் அமைப்பில் பணியாற்ற தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஐந்து மாதங்களில் பாஜக தாம் ஆட்சியில் இருக்கும் 4 மாநிலங்களில் முதல்வர்களை மாற்றியுள்ளது.
கர்நாடக முதல்வராக இருந்த பி.எஸ்.எடியூரப்பா மாற்றப்பட்டு அவருக்கு பதில் பசவராஜ் பொம்மை முதல்வராக்கப்பட்டார்.
அசாம் முதல்வராக இருந்த சரபானந்த சோனோவால், சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு மாற்றப்பட்டு அவருக்குப் பதில் மூத்த அமைச்சராக இருந்த ஹிமாந்த பிஸ்வா சர்மா முதல்வராக்கப்பட்டார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் மட்டும் கடந்த சில மாதங்களில் இரண்டு முறை முதல்வர்களை மாற்றியது பாஜக. தீரத்சிங் ராவத், திரிவேந்திர சிங் ராவத் ஆகிய இருவர் அடுத்தடுத்து மாற்றப்பட்டு புஷ்கர் சிங் தாமி முதல்வராக்கப்பட்டார்.
நியூயார்க் நகரத்தில் நடந்து வரும் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி, இந்திய நேரப்படி நாளை (12 செப்டம்பர் 2021, ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சுமார் 1.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
அதில் பிரிட்டனைச் சேர்ந்த 18 வயதான எம்மா ரடுகனுவும், கனடாவைச் சேர்ந்த 19 வயதான லேலா ஃபர்னாண்டஸும் மோதவிருக்கிறார்கள். ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரராக இருந்த தந்தைக்கும் ஃபிலிப்பைன்ஸ் வம்சாவளியைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர் லேலா. அவரின் அதிவேக இடது கை சர்வ்களை வர்ணனையாளர்கள் உச்சி முகர்ந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
5 அடி 6 அங்குளம் (168 சென்டி மீட்டர்) உயரமுள்ள இவர், முன்னாள் சாம்பியன் நயோமி ஒசாகாவை தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் டென்னிஸ் தரவரிசையில் 73ஆவது இடத்தில் இருந்த லேலா, அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில், தரவரிசையில் 17ஆவது இடத்தில் இருந்த ஏஞ்சலிக் கெர்பர் மற்றும் 5ஆவது இடத்தில் இருந்த எலினா ஸ்விடோலினா ஆகியோரையும் தோற்கடித்துள்ளார்.
லேலா ஃபர்னாண்டஸ் அமெரிக்க ஒப்பன் டென்னிஸில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பதை வாழ்த்தி, “அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஒரு கனடியர் விளையாடவிருக்கிறார்” என கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்விட் செய்துள்ளார். ப்ரூக்ளின் நெட்ஸ் என்பிஏ கூடைப்பந்து அணியின் பிரபல பயிற்றுநர் ஸ்டீவ் நாஷ், கடந்த வாரம் லேலாவின் ஆட்டத்தைக் காண வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டீவ் நாஷ் தன் ஆட்டத்தைக் காண வந்தது, தனக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது என தன் அரை இறுதி போட்டிக்குப் பிறகு கூறினார் லேலா. லேலாவுக்கு பயிற்சியளித்த அவரது தந்தை கனடாவில் தன் இளைய மகளோடு இருக்கிறார், அவரது தாய் தான் அமெரிக்க ஓப்பன் தொடருக்கு உடன் வந்திருக்கிறார்.
“என் அம்மா என்னோடு இருப்பது என் அதிர்ஷ்டம் என்று கருதுகிறேன். அவர் என்னை எப்போதும் ஊக்குவிப்பார், எப்போதும் என்னோடு மகிழ்ச்சியாக இருப்பார்” என்று கூறியுள்ளார் லேலா. “எல்லாமே எங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டிருப்பது, மகிழ்ச்சியாக இருக்கிறது” எனவும் பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார் லேலா.
19 வயதான லேலா அமெரிக்க ஓப்பன் தொடரில் விளையாடுவதற்கு முன் வென்ற மிகப் பெரிய போட்டியே மான்ட்ரே ஓப்பன் தொடர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இடது கை ஆட்டக்காரரான லேலா, வலது கை ஆட்டக்காரரான எம்மா ரடுகனுவை எதிர்கொள்ளவிருக்கிறார். டென்னிஸ் உலகத்தில் 150ஆவது இடத்தில் இருந்த ஒரு வீரரும், 73ஆவது இடத்தில் இருந்த மற்றொரு வீரரும் அமெரிக்க ஒப்பன் போன்ற மிகப் பெரிய மற்றும் முக்கியமான தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியத் தலைநகர் டெல்லியில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. நகரப் பேருந்துகள் தேங்கிய நீரில் நீந்திச் செல்வது போன்ற நிலை உருவாகியுள்ளது.
இந்த கனமழையால், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.
விமானங்கள் வரிசையாக நிற்கிற இடத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்கும் காட்சிகள் காணொளிகளாகவும், புகைப்படங்களாகவும் வெளியாகியுள்ளன.
அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டத்தில் திக்லிபூர் என்ற இடத்தில் இருந்து 137 கி.மீ. தொலைவில் இன்று காலை 8.50க்கு 4.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, காலை சுமார் 6 மணி அளவில் உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் என்ற இடத்துக்கு அருகில் 4.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமைதியாக நடக்கும் போராட்டங்களை தாலிபன்கள் கொடூரமாக நசுக்குவதற்கு ஐ.நா. அவை கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தலைமையிலான மேற்குலகப் படைகள் சமீபத்தில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறின. அவர்கள் விலகத் தொடங்கியதில் இருந்தே தாலிபன்கள் நாட்டின் பல பகுதிகளைப் பிடிக்கத் தொடங்கிவிட்டனர். ஆகஸ்ட் 15ம் தேதி அவர்கள் தலைநகர் காபூலையும் அதிபர் மாளிகையையும் கைப்பற்றினர்.
விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்கப் படையினர், அமெரிக்க, ஐரோப்பிய நாட்டினர் மற்றும் ஆதரவாளர்கள் கணிசமாக வெளியேற்றப்பட்ட நிலையில் கடந்த மாத இறுதியில் முழுவதுமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சியில் தங்கள் உரிமை பாதிக்கப்படும் என்று அஞ்சிய பெண்கள் உள்ளிட்ட பிரிவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இத்தகைய சமீபத்திய போராட்டங்களில் 4 பேர் தாலிபன்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. தெரிவித்தள்ளது.
போராட்டக்காரர்கள் மீது லத்தி, தடி, துப்பாக்கி குண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு போராட்டக் காரர்களை தாலிபன்கள் தாக்கியதாக ஐ.நா. தமது அறிக்கையில் குறிப்பிடுகிறது.
"அமைதியான முறையில் கூடுவதற்கு உள்ள உரிமையை பயன்படுத்துவோர், இந்த போராட்டங்களைப் பற்றி செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் போன்றவர்களை கைது செய்வது, அவர்கள் மீது வன்முறையை ஏவுவது போன்றவற்றை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று தாலிபன்களை கேட்டுக்கொள்கிறோம்," என்று ஐ.நா. பெண் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக ஏழ்மையான நாடுகளுக்கு நவம்பர் மாதம் பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடக்கவுள்ள COP26 பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் சங்கடங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 20 நாடுகள் பிரிட்டனின் கோவிட் சிவப்புப் பட்டியலில் இருப்பவை.இதனால், மாநாட்டுக்கு வரும் பிரதிநிதிகள் ஓட்டலில் தனிமைப்படுத்தப்படவேண்டும். திரும்பி வந்த பிறகும் தங்கள் பிரதிநிதிகள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக் காட்டும் அந்த நாடுகள் இரண்டு வார காலம் நடக்கும் மாநாட்டுக்காக தங்கள் பிரதிநிதிகள் மொத்தம் 7 வார காலம் விலகி இருக்க நேரும் என்று குறிப்பிடுகின்றன.
பசிபிக் தீவுகளில் இருந்து வரும் விமானங்கள் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டன என்றும், விமானத்தில் இருந்து மாறி வருவதற்கான இடங்கள், குடியிருப்போர் அல்லாதவர்களை அனுமதிப்பதில்லை என்றும் அந்த நாடுகள் சுட்டிக்காட்டுகின்றன.
வளர்ச்சியில் பின்தங்கிய 46 நாடுகளைக் கொண்ட லீஸ்ட் டெவலப்புடு கன்ட்ரிஸ் (LDC) குழு இந்த ஆட்சேபனைகளை பகிர்ந்துகொண்டுள்ளது.
இது தவிர, பிரிட்டனின் பயணத் தடைப் பட்டியலில் உள்ள ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, நேபாளம் ஆகியவையும் ஆட்சேபனை தெரிவித்துள்ள நாடுகளின் பட்டியலில் அடக்கம்.
இன்று தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் பிற உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம். எங்களோடு இணைந்திருங்கள்.