You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

போராட்டக்காரர்களை வன்முறை கொண்டு ஒடுக்கும் தாலிபன்: கண்டனம் தெரிவித்த ஐநா

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் போராட்டக்காரர்களை வன்முறையை கொண்டு ஒடுக்குவது குறித்து ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு வணக்கம்!

    இத்துடன் இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. போராட்டக்காரர்களை வன்முறை கொண்டு ஒடுக்கும் தாலிபன்: கண்டனம் தெரிவித்த ஐநா

    ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் போராட்டக்காரர்களை வன்முறையை கொண்டு ஒடுக்குவது குறித்து ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது.

    சமீபத்திய போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரை தாலிபன் இயக்கத்தினர் கொன்றுள்ளதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.

    ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றிய பிறகு பெண்கள் தங்களின் உரிமை குறித்த பேரச்சத்தில் உள்ளனர்.

    இதனால் பெண்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் போராட்டக்காரர்களை தாலிபன்கள் தடிகள், சாட்டை மற்றும் வெடி மருந்துகளை கொண்டு ஒடுக்குகிறது என ஐநா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை பிரயோகிப்பதை தாலிபன்கள் நிறுத்த வேண்டும். தங்கள் உரிமைகளுக்காக அமைதியாக போராடுபவர்களையும், போராட்டங்கள் குறித்து செய்தி வழங்கும் பத்திரிகையாளர்களை கைது செய்வதையும் தாலிபன்கள் கைவிட வேண்டும் என ஐநாவின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

  3. பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கு மக்கள் மலைகளுக்கு தப்பி ஓடுகின்றனர்

    ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றிவிட்டாலும் தாலிபன்களின் கைக்குள் வராமல் இருந்த ஆப்கனின் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கையும் தாங்கள் கைப்பற்றிவிட்டதாக தாலிபன்கள் தெரிவித்திருந்தனர்.

    இருப்பினும் தாலிபன் எதிர்ப்பு இயக்கத்தினர் அதனை மறுத்தனர். மாகாணத்தின் கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்களிலும் தாங்கள் இருப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

    இதற்கிடையில் பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் சண்டைக்கு மத்தியில் சிக்கியுள்ளனர். பலர் அங்கிருந்து தப்பித்து சுற்றியுள்ள மலைகளுக்கு சென்றுவிட்டதாக பஞ்ச்ஷீர் மக்கள் தெரிவித்ததாக டோலோ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    சண்டையில் தங்கள் மகனை இழந்த ஒரு குடும்பம் அங்கு மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது ஆனால் அங்கு நிலைமை வழக்கம்போல இருப்பதாக தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இரண்டாவது விமானம்

    காபூல் விமான நிலையத்திலிருந்து இரண்டாவது பயணிகள் விமான நிலையம் விமானம் கத்தார் தலைநகர் தோஹாவை நோக்கி புறப்பட்டது.

    அந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் அல்லது எந்த நாட்டை சேர்ந்தவர்கள் இருந்தனர் என்பது தெளிவாக தெரியவில்லை.

    முன்னதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு நாட்டை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் வியாழனன்று தோஹா வந்தடைந்தனர்.

    காபூல் விமான நிலையத்தை மீண்டும் இயக்கும் பணியில் தாலிபன்களுக்கு கத்தார் அதிகாரிகள் உதவி வருகின்றனர்.

    இந்நிலையில் வழக்கமான பயணிகள் விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.

  5. இலங்கையில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம்

    இலங்கையில்நடப்பில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இம்மாதம் 21ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்,இம்மாதம் 06 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் 13ஆம் தேதி வரை ஊடரங்குச் சட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது 21 ஆம் தேதி வரை, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் நாட்டில் தொடர்ச்சியாக ஒரு மாதத்துக்கும் மேல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது..

  6. 'ஆப்கானிஸ்தான் மக்கள் அனைவரும் சில மாதங்களில் வறுமையில் வீழ நேரலாம்'

    ஆப்கானிஸ்தான் மக்கள் அனைவரும் சில மாதங்களில் வறுமையில் வீழ நேரலாம் என்று மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் கூறியதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி கூறுகிறது.

    தாலிபன் வெற்றிக்கு முன்பேகூட, ஆப்கானிஸ்தானின் 4 கோடி மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு மனிதாபிமான உதவி தேவைப்பட்டது என்று ஐ.நா. கூறுகிறது.

    தாலிபனின் புதிய அரசை பலப்படுத்தாமல் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும் என்று மனிதாபிமான உதவி நிறுவனங்கள் ஆலோசனை செய்கின்றன.

    சர்வதேச நிதி அமைப்பில் இருந்தும், வெளிநாட்டு உதவிகளில் இருந்தும் தற்போது ஆப்கானிஸ்தான் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியின் 900 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துகள் மேற்கத்திய நாடுகளில் முடக்கப்பட்டுள்ளன.

    இதனிடையே, நிதியுதவிகள் நிறுத்தப்பட்டதால், 2000 சுகாதார நிலையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் இந்த வாரம் எச்சரித்திருந்தது.

    இதனால், பல லட்சம் ஆப்கானியர்களுக்கு சுகாதார வசதிகள் கிடைக்காமல் போகலாம் என்று அஞ்சப்படுகிறது.

  7. பைடன் - ஷி ஜின்பிங் உரையாடல்

    கடந்த ஏழு மாதங்களில் முதன்முறையாக சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேசியுள்ளார்.

    இருநாடுகளுக்கும் மத்தியில் இருக்கும் போட்டி சண்டையாக மாறிவிடக் கூடாது என்பதை உறுதி செய்யும் பொறுப்பு இருநாடுகளுக்கும் உள்ளது என்பதை இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்ததாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

    ஜோ பைடன் பதவியேற்ற பிறகு இருநாட்டு தலைவர்களும் இரண்டாம் முறையாக பேசி கொள்கிறார்கள்.

    சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே இருக்கும் உறவு, உளவுப் பார்த்தல், வர்த்தகம் மற்றும் கொரோனா பெருந்தொற்றின் உருவாக்கம் ஆகிய காரணங்களால் மோசமான நிலையில் உள்ளது.

  8. ரவி சாஸ்திரி இருக்கும்போது தோனியை பிசிசிஐ அழைத்தது ஏன்?

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி T20 அணியை வழிநடத்துவார் என்று பிசிசிஐ தெரிவித்தது ஏன்?

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டி ரத்து

    இந்தியா - இங்கிலாந்து இடையே இன்று தொடங்குவதாக இருந்த ஐந்தாவது மற்றும் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடப்பதாக இருந்த இந்த டெஸ்போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் ஆலோசனை செய்த பிறகு, ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    கொரோனா பரவல் தொடர்பாக இந்திய வீரர்கள் சிலர் ஆடுவதற்குத் தயக்கம் காட்டி வந்தனர். ஏற்கெனவே இந்தியப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் போட்டி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

    இந்தத் தொடரின் நான்காவது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

  10. தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டுவந்த பாஜகவினர், சேலத்தில் பரபரப்பு

    சேலத்தில் தடையை மீறி விநாயகர் சிலையை பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் ஊர்வலமாக எடுத்து வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இன்று விநாயகர் சதுர்த்தி. ஆனால், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்கள் கூட அனுமதிப்பது தொற்றுப் பரவலுக்கு வழி வகுக்கும் என்றுகூறி, பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அரசு தடை விதித்துள்ளது.

    இந்த தடையை எதிர்த்து, சேலம் எல்லை பிடாரி அம்மன் கோவில் பகுதியில் பாஜக, இந்து முன்னணி சார்பாக விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. போலீசார் அதைத் தடுத்தனர்.

    உடனே இந்து அமைப்பினர் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் முன்பு சிலை வைத்து, மாலை அணிவித்து பூஜைகள் நடத்தினர்.

    போலீஸ் தடுப்பை மீறி பிறகு விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அவர்கள் முற்பட்டனர். இதனால் காவல்துறையினருக்கும் சிலை எடுத்து வந்தவர்களுக்கும் வாக்குவாதம் மற்றும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து இந்து முன்னணி சேலம் மண்டலத் தலைவர் சந்தோஷ்குமார் காவல்துறையினரிடம் சிலையை தனது கடைக்கு எடுத்துச் செல்வதாகக் கூறினார்.

    இதை தொடர்ந்து காவல்துறையினர் சிலையை எடுத்து செல்ல ஒரு நபரை மட்டும் அனுமதித்தனர். இதனால் இப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இந்து முன்னணி சேலம் மண்டல தலைவர் சந்தோஷ்குமார் கூறும்போது, வழக்கமாக விநாயகர் சதுர்த்தியன்று எல்லைப்பிடாரி அம்மன் கோயில் அருகே உள்ள பீடத்தில் வைத்துதான் மூன்று நாட்கள் பிள்ளையாரை வழிபடுவோம்.

    தற்போது அனுமதி மறுத்து உள்ளதால் சிலையை நாங்கள் எங்கள் கடைக்கு எடுத்துச் செல்கிறோம் ஊர்வலமாக செல்ல வில்லை என்றார்.

  11. தாலிபன் ஆட்சியில் வெளிநாட்டினருடன் ஆப்கனில் இருந்து வெளியேறிய முதல் விமானம்

    அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு தாலிபன்கள் கட்டுப்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்தின் வழியாக முதல் முறையாக வெளிநாட்டுக்கு பயணிகள் அனுப்பப் பட்டுள்ளனர்.

    கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் கத்தார் தலைநகர் தோஹாவுக்கு இந்தப் பயணிகள் அழைத்து வரப்பட்டனர்.

    இதில் 113 பேர் இருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இவர்களில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் குடிமக்கள் அடங்குவார்கள்.

    அண்மையில் கத்தாருக்குச் சென்றிருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கென், ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்பதற்கு உதவும்படி கேட்டுக் கொண்டார்.

    கனடாவைச் சேர்ந்த 43 பேரும், நெதர்லாந்தைச் சேர்ந்த 13 பேரும் மீட்கப்பட்டிருப்பதாக அந்தந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

    கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி தாலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, 1.24 லட்சம் பேர் அங்கிருந்து விமானங்கள் மூலமாக அழைத்து வரப்பட்டனர். வெளியேறுவதற்கான கெடு ஆகஸ்ட் 31-ஆம் தேதி முடிந்த பிறகும் பலர் அங்கு சிக்கியிருந்தனர்.

  12. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பகுதியில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம். மணிகண்டன்.