தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஆலை ஆதரவாளர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதாகவும், நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும், இதனால் மக்களுக்கு உடல் நலக் கோளாறுகள் ஏற்படுவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் நீண்டகாலம் போராடிவந்தனர். 2018 மே மாதம ்நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து தமிழ்நாடு அரசு அந்த ஆலையை மூடியது. கொரோனா வைரசின் இரண்டாவது அலையின்போது ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க, ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வந்தது. இதையடுத்து அந்த ஆலையைத் திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறை சிக்கல் தீர்ந்த நிலையில் மீண்டும் ஆலை மூடப்பட்டுள்ளது.
அதே நேரம், இந்த ஆலையைத் திறக்கவேண்டும் என்று மறுபுறம் ஒரு சாரார் கோரி வருகின்றனர்.
இந்தப் பின்னணியில், ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை ஆதரவாளர்கள் இன்று தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர். "ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பட்ட காலத்திலிருந்து மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறது. 2018 போராட்டத்திற்கு பிறகு ஆலை மூடப்பட்டிருந்த நிலையிலும் சமூக வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள் மற்றும் சுயதொழில் பயிற்சி போன்ற பல நன்மைகள் பெண்களுக்கு கிடைத்து வந்தது. ஆனால் தற்போது அந்த செயல்பாடுகளும் தடைபட்டிருப்பதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்" என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின் வேலையின்றி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு கிடைக்கும் மரியாதை ஆதரவாளர்களுக்கு கிடைப்பதில்லை. எதிர்ப்பாளர்களை அழைத்து கருத்துக்களை கேட்பது போல் ஆலை ஆதரவாளர்ளை அழைத்து கருத்து கேட்கவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.