You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தாலிபன்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவு: அசாமில் 14 பேர் கைது

தாலிபன்கள் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே...

    இன்றைய இந்த நேரலையில் இணைந்திருந்த பிபிசி தமிழ் நேயர்களுக்கு நன்றி. நாளை மீண்டும் ஒரு நேரலையில் சந்திப்போம். இந்த இரவு இனியதாகட்டும்.

  2. 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.935 கோடி முறைகேடு - காங்கிரஸ் புகார்

    100 நாள் வேலைத் திட்டம் என்று பரவலாக அறியப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டப் பணிகளில் ரூ.935 கோடி முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்திய அரசே இதற்குப் பொறுப்பேற்கவேண்டும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது என்கிறது பி.டி.ஐ. செய்தி முகமை.

  3. பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள்: தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

    தமிழ்நாடு அரசு திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகள், எந்தெந்த வகுப்புகளுக்கு எப்படி திறக்கப்படும் என்பது தொடர்பாக முக்கியமான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இது தொடர்பான முழுமையான செய்திக்கு இங்கே சொடுக்கவும் .

  4. தாலிபன் ஆட்சியை இலங்கை ஏற்கக்கூடாது - ரணில் விக்ரமசிங்க

    ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சியை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், இலங்கை முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

    தாலிபன், ஆப்கானிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றியுள்ளமை குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

    இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலை அடைவதாக இலங்கை அரசு தரப்பு கூறுகிறது.

    பயங்கரவாதிகளுக்கு தாலிபன்கள், ஒரு மத்திய நிலையமாக இருப்பார்களாயினும், அதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

  5. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் திட்டம் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் எதிர்ப்பு

    அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழ்நாடு அரசு பல்வேறு ஜாதியினரையும் பணிக்கு அமர்த்தியுள்ளது கண்டனத்துக்குரியது என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் தெரிவித்துள்ளார்.

    கோயில்களில் ஆகம விதிப்படியே பூஜைகள் நடக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

    கோயில் நடைமுறைகளில் மாற்றம் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார்.

  6. சைகோவ் டி: கொரோனா வைரசுக்கான முதல் டி.என்.ஏ தடுப்பூசி

    டி.என்.ஏ-வை அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டு அனுமதி வழங்கி இருக்கிறது இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு.

    மூன்று டோஸ்களைக் கொண்ட சைகோவ் டி கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்களில் 66 சதவீதத்தினருக்கு, அறிகுறியை வெளிப்படுத்தும் நோயில் இருந்து பாதுகாப்பு கிடைத்தது என கெடிலா ஹெல்த்கேர் நிறுவனம் கூறுகிறது.

  7. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வரவுள்ளவர்கள்

    ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவதற்காக காபூல் விமான நிலையத்தின் வெளியே காத்திருந்த சுமார் 150 இந்தியர்கள் தாலிபன்களால் அருகில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் விசாரிக்கப்பட்டு, மீண்டும் விமான நிலையத்திற்குள் வந்துள்ளனர் என்று தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக இந்திய ஊடகமான என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

    அவர்கள் கடத்தப்பட்டதாக வரும் செய்திகளை தாலிபன் அமைப்பு மறுத்துள்ளதாகவும், விரைவில் இந்தியா திரும்புவார்கள் என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

  8. மலேசியாவுக்கு புதிய பிரதமர் பதவியேற்பு

    மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராகப் பதவியேற்றுள்ளார் இஸ்மாயில் சப்ரி யாகூப். கடந்த ஒன்றரை மாதங்களில் மலேசிய அரசியல் களம் அடுத்தடுத்துப் பல்வேறு திருப்பங்களை சந்தித்துள்ளது.

    இவ்வாறு நடக்கும் என்றோ, நாட்டை வழிநடத்தும் பொறுப்புக்கு தாம்வருவோம் என்றோ இஸ்மாயில் சப்ரி மட்டுமல்ல, அவரது சக அரசியல் தலைவர்களும், மலேசிய மக்களும் கூட எதிர்பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தற்போது அதுதான் நடந்திருக்கிறது.

  9. அசாமில் தாலிபன்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட 14 பேர் கைது

    அசாமில் தாலிபன்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசை மேற்கோள் காட்டி தெரிவிக்கிறது பி.டி.ஐ. செய்தி முகமை.

  10. அக்டோபர் முதல் ஒரு கோடி டோஸ் சைகோவ்-டி

    இந்திய அரசு அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கியுள்ள சைகோவ்-டி கொரோனா தடுப்பு மருந்தை அக்டோபர் மாதம் முதல் ஒரு கோடி டோஸ் தயாரிக்க முடியும் என்று நம்புவதாக அதை உருவாக்கியுள்ள சைடஸ் காடில்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பெரியவர்கள் மற்றும் 12 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த சைகோவ்-டி தடுப்பு மருந்துக்கு இந்திய அரசு நேற்று அனுமதி வழங்கியது.

    இந்திய அரசின் உயிர் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன் இந்தத் தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக்கின் கோவேக்சின் மருந்துக்கு அடுத்து இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து இதுவாகும்.

  11. திரைக்கலைஞர் சித்ரா மாரடைப்பால் காலமானார்

    தமிழ், மலையாளத் திரையுலகில் 80களின் பிற்பகுதியிலும் 90களிலும் பிரபலமாக விளங்கிய சித்ரா மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 56. தமிழ்த் திரைப்பட

    உலகில் 1980களின் பிற்பகுதியிலும் 90களிலும் பிரபல நடிகையாக விளங்கியவர் சித்ரா. அவள் அப்படித்தான் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். சின்னப்பூவே மெல்லப்பேசு, மனதில் உறுதி வேண்டும், ஊர்க்காவலன், என் தங்கச்சி படிச்சவ திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரபலாக அறியப்பட்டவர் சித்ரா.

    1991ல் வெளியான சேரன் பாண்டியன் திரைப்படமும் அதற்கு அடுத்த ஆண்டே வெளியான பொண்டாட்டி ராஜ்ஜியம் திரைப்படமும் அவருக்கு பெரும் புகழைத் தேடித்தந்தன. 1996வரை தொடர்ந்து தமிழில் நடித்த சித்ரா, அதற்குப் பிறகு 2001ல் கோபாலா கோபாலா படத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றினார்.

    சித்ரா நடித்த நல்லெண்ணெய் விளம்பரம் ஒன்று மிகப் பிரபலமானதால், இவர் நல்லெண்ணெய் சித்ரா என்றே அழைக்கப்பட்டார். தமிழைப் போலவே மலையாளத் திரைப்படங்களிலும் 1970களின் மத்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2000ங்களின் துவக்கம்வரை 100க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருந்தார்.

    கேரளாவின் கொச்சியை சொந்த ஊராகக் கொண்டிருந்த சித்ரா, விஜயராகவன் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதிக்கு மகாலக்ஷ்மி என்ற மகள் இருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் வசித்துவந்த சித்ராவுக்கு வெள்ளிக்கிழமை இரவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

  12. 85 இந்தியர்களை காப்பாற்றிய இந்திய விமானப் படை

    இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சி-130 ஜே என்கிற போக்குவரத்து விமானம் இன்று காலை 85 இந்தியர்களோடு காபூல் நகரத்தில் இருந்து புறப்பட்டது.

    தற்போது அவ்விமானம் எரிபொருளை நிரப்பிக் கொள்ள தஜிகிஸ்தான் நாட்டில் தரையிரங்கி உள்ளது.

    இந்திய அரசு அதிகாரிகள், ஆஃப்கானில் இருந்து இந்தியர்கள் மீள உதவிக் கொண்டு இருக்கிறார்கள் என ஏ.என்.ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

  13. டெல்லியில் கடும் மழை - ஆரஞ்சு எச்சரிக்கை கொடுத்திருக்கும் வானிலை மையம்

    இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த சில மணி நேரங்களாக பெய்த கன மழை காரணமாக சாலைகளில் வெள்ளப் பெருக்கு எற்பட்டு இருக்கிறது.

    கடும் காற்றோடு மழை பெய்ததால், டெல்லியின் முக்கிய சாலைகளில் மரங்கள் வீழ்ந்திருப்பதாகவும், பல இடங்களில் மழை நீர் வடியாமல் பாதசாரிகள் சிரமப்படுவதாகவும் ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

    மேற்கொண்டு டெல்லியில் இடியுடன் கூடிய கன மழை பெய்யலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுத்திருக்கிறது.

  14. ஆப்கனிஸ்தானில் இருந்து மக்களை காப்பாற்றும் போது உயிரிழப்பு ஏற்படலாம் - பைடன்

    தாலிபன் ஆளும் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை கொத்து கொத்தாக மீட்கும் போது, அதில் அபாயங்கள் இல்லாமல் இல்லை என கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

    வெள்ளை மாளிகையில் பேசிய அவர், இதுவரை அமெரிக்கா 13,000 பேரை ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்டிருப்பதாகவும், இது வரலாற்றிலேயே மிகப் பெரிய மற்றும் மிக சிரமமான மீட்புப் பணி என்றும் கூறியுள்ளார்.

    அமெரிக்காவுக்கு வர விரும்பும் எந்த ஒரு அமெரிக்கரையும் நாங்கள் அவர்களது வீட்டுக்கு அழைத்து வந்து சேர்ப்போம்” என பைடன் கூறினார்.

    இந்த மீட்புப் பணி மிகவும் ஆபத்தானது. இதனால் நம் ஆயுதப் படையினருக்கு ஆபத்து ஏற்படலாம். இந்த மீட்புப் பணி மிகவும் நெருக்கடியான சூழலில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பைடன் கூறியுள்ளார்.

  15. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய நேரலைப் பக்கத்தை தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் விக்னேஷ். அ மற்றும் கெளதமன் முராரி.