ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைக்கும் வேட்கையுடன் இந்திய மகளிர் ஹாக்கி அணி பிரிட்டன் அணியை எதிர்த்து ஆடி வருகிறது.
பாதி நேர ஆட்டம் முடிந்த நிலையில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
முதல் கால்பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆனால் இரண்டாவது காற்பகுதி தொடங்கியதுமே பிரிட்டன் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
பிரிட்டன் வீராங்கனை அடித்த பந்து இந்திய வீராங்கனை தீப் கிரேஸின் மட்டையில் பந்து கோலுக்குச் சென்றது.
அடுத்த சில நிமிடங்களில் பிரிட்டன் மற்றொரு கோலை அடித்து வலுவான நிலைக்குச் சென்றது.
இதற்குப் பதிலடி தரும் வகையில் 25-ஆவது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்தது. அடுத்த நிமிடத்திலேயே மற்றொரு கோலை அடித்து 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலைக்குச் சென்றது. இந்த இரு கோல்களையும் குர்ஜித் கவுர் அடித்தார்.
பாதி நேர ஆட்டம் முடிய ஒன்றரை நிமிடம் இருந்த நிலையில் இந்திய அணி மற்றொரு கோலை அடித்த 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலைக்குச் சென்றது.
அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பிரிட்டன் அணியுடன் இந்திய மகளிர் அணி ஆடி வருகிறது.
1980ஆம் ஆண்டு முதல் இந்திய பெண்கள் ஹாக்கி அணி, டோக்யோ உட்பட மூன்று ஒலிம்பிக் போட்டிகளில்தான் இதுவரை பங்கேற்றிருக்கிறது. அதிலும் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய மகளிர் அணி மோதுவது இதுவே முதல்முறையாகும்.
டோக்யோ ஒலிம்பிக் லீக் சுற்றில் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தாலும் அடுத்தடுத்த இரு போட்டிகளில் வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது இந்திய அணி.
காலிறுதியில் வலுவான ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்து சாதனை படைத்தது
கடந்த ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் பிரிட்டனுடன் 1-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதற்குப் பழிதீர்த்துக் கொள்ளும் முனைப்பில் இந்திய வீராங்கனைகள் களமிறங்கியுள்ளனர்.