வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் ஒரு சிங்கம் கொரோனாவால் உயிரிழப்பு

வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஆண் சிங்கம் ஒன்று உயிரிழந்துள்ளது. ஏற்கனவே இதே நோயால் பெண் சிங்கம் ஒன்று உயிரிழந்த நிலையில் இது இரண்டாவது உயிரிழப்பாகும்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கோவிஷீல்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி டோஸ் இடைவெளி: இந்திய அரசு, ஆலோசனை குழு முரண்பட்ட தகவல்

    இலங்கை

    பட மூலாதாரம், Getty Images

    கோவிஷீல்டு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் இரண்டு டோஸ்களுக்கு இடையிலான கால இடைவெளியை அதிகரிப்பதற்கு இந்திய அரசு எடுத்த முடிவு, அறிவியல் தரவுகளின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் எடுக்கப்பட்டது என்று இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    ஆனால், இந்த முடிவை எடுக்க ஒப்புக்கொண்டதாக அமைச்சர் கூறும் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் இதை மறுத்துள்ளனர்.

    ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா செனீகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசி இந்தியாவில், சீரம் இன்ஸ்ட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் கோவிஷீல்டு என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் இதுவரை சுமார் 26 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 90 சதவிகிதம் கோவிஷீல்டு தடுப்பூசிதான் வழங்கப்பட்டுள்ளது.

  2. Toxic madan 18+ யூடியூபர் 'பப்ஜி' மதனின் மனைவி கைது - ஆபாசமாகப் பேசிய பெண்ணின் குரல்

    PUBG

    பட மூலாதாரம், TWITTER

    யூடியூபில் ஆபாச வார்த்தைகளுடன் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை நேரலை செய்த விவகாரத்தில் தேடப்பட்டுவரும் மதன் என்ற நபரின் மனைவியை காவல்துறை கைதுசெய்துள்ளது.

    பப்ஜி மதனை சென்னை நகரக் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்த போதும் அவர் வராத நிலையில், சேலத்திலிருந்த அவரது வீட்டிலிருந்து அவரது தந்தை, மனைவி ஆகியோர் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

    அவர்களிடம் மதனின் யூடியூப் சேனல் இயங்கும் விதம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின்போது, ஆபாச வார்த்தைகளுடன் மதன் பேசிவந்த 'டாக்சிக் மதன் 18+' என்ற யூடியூப் சேனலின் நிர்வாகியாக அவரது மனைவியே இருந்துவந்ததை காவல்துறையினர் அறிந்தனர்.இது தொடர்பாக விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்

  3. வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் ஒரு சிங்கம் கொரோனாவால் உயிரிழப்பு

    VANDALUR

    பட மூலாதாரம், TWITTER

    வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஆண் சிங்கம் ஒன்று உயிரிழந்துள்ளது. ஏற்கனவே இதே நோயால் பெண் சிங்கம் ஒன்று உயிரிழந்த நிலையில் இது இரண்டாவது உயிரிழப்பாகும்.

    சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது அண்ணா உயிரியல் பூங்கா. இங்கு உள்ள சிங்கங்களில் சில, கொரோனா தொற்றால் சமீபத்தில் பாதிக்கப்பட்டன.

    கடந்த வாரம் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பெண் சிங்கம் ஒன்று கடந்த வாரம் உயிரிழந்தது. மேலும் எட்டு சிங்கங்கள் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

    இந்த நிலையில், இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்த பத்மநாபன் என்ற 12 வயதான ஆண் சிங்கம் இன்று காலையில் உயிரிழந்தது. இந்த சிங்கத்திற்கு நோய் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்த சிங்கத்தின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்குநோய்கள் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

    அந்த ஆய்வு மையம் கடந்த மூன்றாம் தேதி அனுப்பிய அறிக்கையில், இந்த சிங்கத்திற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதிலிருந்து இந்த சிங்கத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

    சென்னை வண்டலூரியில் 602 ஹெக்டேர் பரப்பளவில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பூங்காவில் 160 இனங்களைச் சேர்ந்த 1,500 உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக பூங்காமூடப்பட்டிருப்பதால் விலங்குகளையும் பறவைகளையும் ஊழியர்கள் பராமரித்து வந்தனர்.

    இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி கொரோனா தொற்றால் நீலா என்கின்ற ஒன்பது வயது பெண் சிங்கம் உயிரிழந்தது. தொடர்ந்து 11 சிங்கங்களுக்கு நடந்த பரிசோதனையில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, சிவசங்கர் "பாபா" கைது: தமிழகம் அழைத்துச் செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி

    SIVASANKAR BABA

    பட மூலாதாரம், SPECIAL ARRANGMENT

    சென்னையில் பாலியல் தொந்தரவு வழக்குகளில் ஆன்மிகவாதியாக தன்னை அழைத்துக் கொள்ளும் சிவசங்கர் என்கிற சிவசங்கர் பாபாவை தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    டெல்லியில் உள்ள குடியிருப்பில் கைது செய்யப்பட்ட அவர், சாகேத் நீதிமன்றத்தில் சில நிமிடங்களுக்கு முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

    இதையடுத்து, அவருக்கு எதிரான வழக்குகளை நீதிமன்றத்தில் விளக்கிய தமிழக காவல்துறையினர், அவரை சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த டிரான்ஸிட் காவல் கோரினர்.

    இதையேற்று அவரை சென்னைக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அவரை இன்று மாலையை சென்னை புறப்படும் விமானத்தில் அழைத்து வர காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  5. தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நாளை டெல்லி பயணம்

    STALIN

    பட மூலாதாரம், TWITTER

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் சந்தித்துப் பேசவுள்ளார்.

    தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக அவர் வியாழக்கிழமை டெல்லி செல்கிறார்.

    இதையொட்டி சென்னையில் இருந்து காலை 7 மணிக்கு செல்லும் அவர் 10 மணிக்கு டெல்லியை அடைகிறார். நாளை மாலை 5 மணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதியை அவர் சந்தித்துப் பேசுகிறார். தமது டெல்லி பயணத்துக்கா தனி விமானத்தை பயன்படுத்துகிறார் ஸ்டாலின்.

    இந்த பயணத்தின்போது இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோரையும் அவர் சந்தித்துப்பேசவுள்ளார். டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை பிற்பகலில் சென்னை திரும்ப ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

  6. ட்விட்டருக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எதிர்வினை - நள்ளிரவு வழக்கு பற்றி ட்விட்டர் என்ன சொல்கிறது?

    RAVISHANKAR PRASAD

    பட மூலாதாரம், RAVISHANKAR PRASAD

    உத்தர பிரதேசத்தின் காஸியாபாதில் முதியவர் தாக்கப்படுவதாக வெளியான காணொளி சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், அது தொடர்பாக ட்விட்டர், காங்கிரஸ் தலைவர்கள் சிலர், பத்திரிகையாளர்கள் மீது அம்மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நடவடிக்கை சர்ச்சையாகியிருக்கிறது.

    ஏற்கெனவே இந்திய அரசு அறிமுகப்படுத்திய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு உடன்படும் விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலையீட்டை ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்கள் நாடியுள்ளன. இந்த நிலையில், அந்த விதிகளை ட்விட்டர் மீறியதாக அதன் மீது உத்தர பிரதேச காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  7. தமிழ்நாட்டிலும் பாஜக அலை வீசும்: எல்.முருகன்

    TAMIL NADU

    புதுச்சேரியை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பாஜக அலை வீசும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி சபாநாயகராக மணவெளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவரது பதவியேற்பு விழா புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்.முருகன், சபாநாயகராக பதவியேற்ற செல்வத்தை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    இதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்திகளை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எ‌ல்.முருகன், புதுச்சேரியை போன்று தமிழகத்திலும் பாஜக அலை வரும் என்று தெரிவித்தார்.

    "தமிழ் மண்ணான புதுச்சேரியில் சபாநாயகராக செல்வத்திற்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மண்ணில், தமிழ்நாட்டில் பாஜக வரவே முடியாது, தாமரை மலராது என்று சொன்னவர்களுக்கு மத்தியில் இன்று புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் ஆட்சிக்கு வந்துள்ளது. பாஜகவை சேர்ந்தவர் புதுச்சேரி சபாநாயகராக வந்துள்ளார். மேலும் தமிழகத்திலும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளனர். ஆகவே தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பாஜக மிக பெரிய வளர்ச்சியடைந்துள்ளது. பாஜகவும் ‍ தாமரையும் எங்கே இருக்கிறது என்று கேட்டவர்களுக்கு, பாஜக இங்கே இருக்கிறது என்பது தான் எனது பதில்," என்றார்.

    தமிழ் மண்ணான புதுச்சேரியில் உள்ள பாஜக அலை வந்தது போல, தமிழகத்திலும் வரும் என்று கூறினார் எல்.முருகன்.

    "தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்துள்ள சூழலில், மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது பாஜகவின் நிலைபாடாக உள்ளது. குறிப்பாக இன்றைய முதல்வர் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது அவரே மதுக்கடைகளை மூடவேண்டும், மதுபான தொழிற்சாலைகளை மூட வேண்டும் என்று மக்களிடம் சொல்லியே திமுக இந்த தேர்தலில் வென்றுள்ளது. ஆகையால் அவர்களுடைய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்," என்று வலியுறுத்தினார் முருகன்.

    தமிழகத்தில் கருத்துக்கள் சொல்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதெல்லாம் முழுமையாக கண்டிக்கத்தக்கது, தமிழகத்தில் அனைத்து சாதியினரும் ஏற்கனவே பல கோயில்களில் அர்ச்சகர்களாக இருக்கின்றனர். அதேபோன்று தமிழகத்தில் தமிழ் மொழியில் பல கோயில்களில் அர்ச்சனை செய்யப்படுகிறது. அதேபோல பெண்களும் பல கோயில்களில் அர்ச்சகர்களாக இருக்கின்றனர். ஆனால் தற்போது திராவிட முன்னேற்றக் கழகம் புதியதாக புரட்சி செய்வது போல சொல்வது தவறானது," என்று கூறினார் முருகன்.

    தமிழகத்தில் தற்போது சிறுமிகள் பாலியல் தொடர்பான பல்வேறு புகார்களும், சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. அண்மையில் இந்த சர்ச்சை தொடர்பாக சிவசங்கர் பாபா என்பவர் தலைமறைவாக இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எல்.முருகன், "குற்றவாளிகள், தனிநபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இந்த குற்றம் நடைபெற்றதற்காக நிர்வாகத்தை குறை சொல்வது ஏற்புடையதாக இல்லை," என்று தெரிவித்தார்.

    TAMIL NADU
  8. தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநதியாக ஏ.கே.எஸ். விஜயன் பொறுப்பேற்றார்

    Tamil Nadu

    பட மூலாதாரம், AKS VIJAYAN

    தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் பொறுப்பேற்றுள்ளார்.

    டெல்ில சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு அரசின் விருந்தினர் இல்லத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில் தமிழக அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்க டெல்லி வரவுள்ளார். அதற்கு முன்னதாக, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பொறுப்பேற்றுள்ள ஏ.கே.எஸ். விஜயன், முதல்வரின் டெல்லி வருகைக்கான ஏற்பாடுகளை தமது முதல் பணியாக தொடங்கியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு விரைவில் பயணம்

    ரஜினி

    பட மூலாதாரம், RAJINIKANTH

    நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ` கொரோனா பரவல் காரணமாக சில பரிசோதனைகளை ரஜினியால் மேற்கொள்ள முடியவில்லை. மருத்துவர்களின் அறிவுறுத்தல் காரணமாகவே அவர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. என்ன நடக்கிறது?

    ``தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இரண்டாம் அலையின் வேகம் சற்று தணிந்து வருகிறது. அதேநேரம், தனது உடல்நலத்தில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஜினி கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா செல்வது தொடர்பான திட்டமிடுதலில் இருந்தார். ஆனால், அவ்வாறு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று வருவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. தற்போது அவரது பயணத் திட்டம் உறுதியாகி விட்டது" என்கின்றனர் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் சிலர்.

  10. புதுச்சேரி சபாநாயகராக பாஜக சட்டமன்ற உறுப்பினர் செல்வம் போட்டியின்றி தேர்வு

    இந்தியா புதுச்சேரி

    புதுச்சேரி சபாநாயகராக பாஜக சட்டமன்ற உறுப்பினர் செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

    இதையடுத்து முதல்வராக ரங்கசாமியும், தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணனும் அடுத்தடுத்து பதவியேற்றனர். இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணியில் யாரை சபாநாயகராக தேர்வு செய்வது என கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக இழுபறி நீடித்தது.

    இறுதியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவை சேர்ந்த மணவெளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வத்தை சபாநாயகர் பதவிக்கு முன்னிறுத்தினர்.

    இதற்கிடையில் கடந்த வாரம் சபாநாயகர் தேர்தல் குறித்து சட்டபேரவை செயலர் அறிவித்தார். இதையடுத்து நேற்று முன் தினம் சபாநாயகர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

    இதில் பாஜக சார்பில் சபாநாயகர் மணவெளி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் முதல் சட்டமன்ற கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.

    இந்த கூட்டத்தை சட்டப்பேரவையைத் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்தார். முதலாவதாக சபாநாயகர் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட அவர், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் செல்வம் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

    தொடர்ந்து சட்டமன்ற மரபுப்படி சபாநாயகர் செல்வத்தை முதல்வர் ரங்கசாமி, எதிர்கட்சித் தலைவர் சிவா (திமுக) ஆகியோர் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். புதுச்சேரி வரலாற்றில் பாஜகவை சேர்ந்த ஒருவர் சட்டப்பேரவை சபாநாயகராக பொறுப்பேற்பது இதுவே முதன்முறை.

  11. அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி ரூ.20,000 கோடி நன்கொடை

    ஸ்காட்

    பட மூலாதாரம், Getty Images

    அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கென்ஸி ஸ்காட் மக்கள் தொண்டுக்காக மேலும் 20 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

    இது தொடர்பாக தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள மெக்கென்ஸி ஸ்காட் "நெடுங்காலமாக பணமே கிடைக்காத, கவனிக்கப்படாத" மக்களுக்கு இந்தப் பணத்தை அளிப்பதாகக் கூறியுள்ளார்.

    இந்தப் பணத்தைப் பயன்படுத்துவதற்கு இனப்பாகுபாட்டுக்கு எதிராகப் பணியாற்றும் 286 அமைப்புகளைத் தேர்வு செய்திருப்பதாகவும் ஸ்காட் குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது உலகின் பெரும் பணக்காரப் பெண்மணிகளில் ஸ்காட்டும் ஒருவர். அவரிடம் இருக்கும் பணத்தின் பெரும்பகுதி அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸை 2019-ஆம் ஆண்டு விவகாரத்து செய்யும்போது அவருக்குக் கிடைத்தது.

    கடந்த டிசம்பரில் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தொண்டு நிறுவனங்களுக்கு அவர் நன்கொடை வழங்கினார்.

    ஏராளமான நன்கொடை வழங்கினாலும் இன்னும் அவர் உலகின் 22-ஆவது பணக்காரராக இருப்பதாக ஃபோர்ப்ஸ் இதழ் கூறுகிறது. அவரது சொத்து மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்.

  12. காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல், இஸ்ரேல் - பாலத்தீனம்: காசா மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்

    காசா

    பட மூலாதாரம், Getty Images

    பாலத்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினரின் இலக்குகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது

    புதன்கிழமை அதிகாலை முதல் காசா நகரில் குண்டுகள் வெடிக்கும் சத்தத்தைக் கேட்க முடிந்தது.

    செவ்வாய்க்கிழமையன்று காசா பகுதியில் இருந்து வெடிபொருள்களைக் கொண்ட பலூன்கள் இஸ்ரேலை நோக்கி பறக்கவிடப்பட்டன. இதில் பல இடங்களில் தீப்பற்றியதாக இஸ்ரேலிய தீயணைப்புத் துறை கூறுகிறது.

    கடந்த மே 21-ஆம் தேதிக்குப் பிறகு இந்தப் பிராந்தியத்தில் நடக்கும் பெரிய மோதலாகும் இது.

    காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காசா இயக்கத்தின் எச்சரிக்கையை மீறி கிழக்கு ஜெருசலேம் பகுதியில் யூத தேசியவாதிகள் பேரணி நடத்தியதைத் தொடர்ந்து இந்த மோதல் .உருவாகியிருக்கிறது,

  13. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் இந்தப் பகுதியில் வழங்குகிறோம்.