“தமிழகத்தில் டாஸ்மாக் திறப்புக்கு எதிராக போராடும் பாஜக, பெட்ரோல் உயர்வுக்கு அமைதி காப்பது ஏன்?”

உலகம், இந்தியா, தமிழ்நாடு அளவில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் வழங்குகிறோம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் மரணம்

    உலகின் மிகப்பெரிய குடும்பம் என்று கருதப்படும் குடும்பத்தின் தலைவர் ஜியோனா சானா தமது 76ஆம் வயதில் உயிரிழந்துள்ளார் என்று மிசோராம் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

    அவருக்கு 38 மனைவிகள் மற்றும் 89 குழந்தைகள் இருந்ததாக அந்த பதிவில் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் சொரம்தங்கா குறிப்பிட்டுள்ளார்.

    ஜியோனாவின் குடும்பத்தால் மிசோராம் மாநிலமும், அவரது பக்தாங் லாங்னுவாம் கிராமமும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக மாறின என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஆனால், அவருக்கு 39 மனைவிகளும் 94 குழந்தைகளும் உள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்தது ஏன்? – அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்தது ஏன்? – அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்

    பட மூலாதாரம், Getty Images

    தமிழகத்தில் தொற்று குறைந்த காரணத்தினாலேயே மதுபான கடைகளை திறக்க முதல்வர் மு.க ஸ்டாலின் அனுமதி அளித்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதியளித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

    தமிழகத்தில் வரும் 14ஆம் தேதியில் இருந்து தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால், தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி இல்லை என்று செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

    “கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த போதிலும் கர்நாடகாவில் மதுபானகடைகள், தடையின்றி செயல்பட்டது. ஆனால் தமிழகத்தில்ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு தான் இருந்தது .தொற்று குறைந்த காரணத்தினாலேயே மதுபான கடைகளை திறக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மக்களின் நலனில் முதல்வர் அக்கரை செலுத்தி வருகிறார்” என்று அவர் தெரிவித்தார். .

    தமிழகத்தில் 27 மாவட்டங்களிலும் உள்ள மதுபான கடைகளில் கிருமிநாசினி கொடுக்கப்பட்டுகாவல்துறை உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மதுபானம் வாங்க வருவோர், கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் தனிமனித இடைவெளி விட்டு தான் வாங்கிச் செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் இருந்து, தொற்று குறையாமல் உள்ள 11 மாவட்டங்களில் மதுபானங்கள் கடத்தல் மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

    தமிழகத்தில் மதுபான கடை திறப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தும் பாஜக அரசு, பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தாதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    பாஜக அரசியலுக்காகவும், தனது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவும் தான் இந்த போராட்டங்களை நடத்துகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி – மு.க. ஸ்டாலின்

    தமிழகத்தில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி – மு.க. ஸ்டாலின்

    பட மூலாதாரம், Getty Images

    தமிழகத்தில் தேநீர் கடைகளை திறக்கபல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்ததையடுத்து, அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்கலாம்என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்றும் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி என்றும் கூறப்பட்டுள்ளது.

    கடைகளில் நின்று தேநீர் அருந்த அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

  4. இந்தியாவில் கொரோனா நிலவரம்

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80,834 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய் தொற்றால் 3,303 பேர் இறந்துள்ளனர்

    இந்தியாவில் மொத்தம் சுமார் 25 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

  5. ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ – ஜி7 மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோதி பேச்சு

    G7

    பட மூலாதாரம், NARENDRA MODI / TWITTER

    பிரிட்டனில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் காணொளி வாயிலாக கலந்து கொண்டு பேசினார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

    "உலகை மீண்டும் சிறப்பாக கட்டி அமைப்போம்"என்ற முழக்கத்தை ஜி7 நாடுகளின் தலைவர்கள் முன்வைத்துள்ளனர்.

    ‘மீண்டும் வலுவாக கட்டியமைப்போம் – சுகாதாரம்’ என்ற தலைப்பில் கீழ் பேசிய பிரதமர் மோதி, உலகை கொரோனா தொற்றில் இருந்து மீட்டெடுப்பது மற்றும் எதிர்கால பெருந்தொற்றுகளுக்கு எதிரான திறனை வலுப்படுத்துவது ஆகியவற்றில கவனம் செலுத்தி பேசினார்.

    அப்போது இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் உதவி செய்த ஜி7 நாடுகளுக்கும், மற்ற விருந்தனர் நாடுகளுக்கு அவர் தனது பாராட்டை தெரிவித்தார்.

    இந்தியா ‘ஒன்றுபட்ட சமூகமாக’ எப்படி கொரோனாவை எதிர்கொண்டது, அரசாங்கத்தின் படிநிலைகள், தொழிற்சாலைகள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுபட்டு எடுத்த முயற்சிகள் போன்றவற்றை குறித்தும் பிரதமர் மோதி பேசினார்.

    டிஜிட்டல் முறையில் இந்தியா எப்படி கொரோனா தொற்று பரவலை கண்டறிந்தது, தடுப்பூசி மேலாண்மை குறித்து விவரித்த பிரதமர் மோதி, மற்ற வளரும் நாடுகளுக்கு தங்கள் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    “ஒரே பூமி ஒரே சுகாதாரம்” என்ற மந்திரத்தை முன்வைத்த மோதி, வருங்காலத்தில் இது போன்ற பெருந்தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க உலக ஒற்றுமை, தலைமைத்துவத்திற்கு அழைப்பு விடுத்தார்.

  6. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!

    இந்தியா, இலங்கை, தமிழ்நாடு மற்றும் சர்வதேச அளவிலான முக்கியச் செய்திகளை பிபிசி தமிழின் இந்த சிறப்பு நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    கொரோனா தொடர்பான முக்கிய செய்திகளும், கட்டுரைகளும் இந்த நேரலை பக்கத்தில் பகிரப்படும்.