ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்

பட மூலாதாரம், Getty Images
கோசியாமி தமரா சித்தோல் என்பது அவரது பெயர். ஸ்கேன் செய்து பார்த்தபோது 8 குழந்தைகள் இருப்பது தெரிந்ததாகவும் ஆனால் பிரசவத்தின்போது 10 குழந்தைகள் பிறந்தது தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டதாகவும் அவரது கணவர் டெபோஹோ சோட்டேட்சி கூறுகிறார்.
"பிறந்தவற்றில் 7 ஆண் குழந்தைகள், 3 பெண்குழந்தைகள். நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். உணர்ச்சிவயப்பட்டிருக்கிறேன். என்னால் அதிகம் பேச முடியாது " என்றார் சோட்டேட்சி.
10 குழந்தைகள் பிறந்திருப்பதை தென்னாப்பிரிக்க அதிகாரி ஒருவர் உறுதி செய்திருக்கிறார்.
10 குழந்தைகளில் 5 குழந்தைகள் இயற்கையான முறையிலும் 5 குழந்தைகள் சிசேரியன் மூலமாகவும் பிறந்திருப்பதாகவும் பெயர்கூற விரும்பாத உறவினர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு தெரிவித்துள்ளது.





