You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

பாலியல் புகார்கள்: விசாரணைக்கு ஆஜராகாத தனியார் பள்ளி முதல்வர்

சென்னையில் உள்ள தனியார் பள்ளியொன்றின் பிளஸ் டூ வகுப்பு ஆசிரியர் மீது முன்னாள் மாணவிகள் சுமத்திய பாலியல் புகார்கள் தொடர்பான வழக்கில் அந்த ஆசிரியர் கைதாகியுள்ளனர். அந்த சம்பவத்துக்கு பிறகு வேறு சில பள்ளிகளின் மாணவிகள் தரப்பில் இருந்தும் காவல்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இந்த நிலையில், தனியார் பள்ளி முதல்வர் ஒருவரை மாநில குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் விசாரணைக்கு அழைத்தபோதும் அவர் விசாரணைக்கு வராமல் தவிர்த்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைந்தது

    நேயர்களுக்கு வணக்கம்,பிபிசி தமிழ் சேவையின் இன்றைய நேரலை தகவல்களை இத்துடன் நிறைவு செய்கிறோம். மீண்டும் நாளை (01 ஜூன் 2021, செவ்வாய்க்கிழமை) சந்திப்போம். உலக மற்றும் தேசிய செய்திகளுக்கு பிபிசி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள்.

    நன்றி.

  2. இபிஎப் கணக்கிலிருந்து முன்பணம் எடுக்க அனுமதி

    கோவிட்-19 இரண்டாவது அலையின் தாக்கத்தை கருத்திற்கொண்டு, வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் இருந்து 2வது முறையாக முன்பணம் எடுத்துக் கொள்ள தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி கழகம் (இபிஎப்ஓ) அனுமதித்துள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதன்படி, 3 மாத அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி (டி.ஏ) அல்லது இபிஎப் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில் 75 சதவீதம், இதில் எது குறைவோ, அதை திருப்பிச் செலுத்த தேவையில்லாத முன்பணமாக இபிஎப் சந்தாதாரர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே முதல் முன்பணம் எடுத்த இபிஎப் உறுப்பினர்கள், தற்போது, 2வது முறையாகவும் முன் பணம் எடுக்கலாம் என்றும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  3. மேற்கு வங்க அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்

    மேற்கு வங்க மாநிலத்தில் அரசு தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாயவை மத்திய அரசுப் பணிக்காக விடுவிக்க வேண்டும் என்று இந்திய அரசு அழுத்தம் கொடுத்த விவகாரத்தில் புதிய திருப்பமாக, தமது அரசுப் பதவியில் இருந்து அந்த ஐஏஎஸ் உயரதிகாரி விலகியிருக்கிறார். மேலும், அவரை தமது தலைமை ஆலோசகராக நியமித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.

  4. தமிழகத்தில் மேலும் 27,936 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 27,936 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதித்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,96,516ஆக உயர்ந்துள்ளது.

    அதேபோன்று, கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 478 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 24,232ஆக உயர்ந்துள்ளது.

  5. வியட்நாமில் புதிய கொரோனா திரிபு: திரள் பரிசோதனைக்கு நடவடிக்கை

    வியட்நாமில் புதிய கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளதால், அதை சமாளிக்கும் விதமாக மிகப்பெரிய அளவில் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இங்குள்ள ஹோ ச்சீ மின் நகரின் மையப்பகுதியில் கிறிஸ்துவ மிஷன் இயங்கி வருகிறது. அங்கு மட்டும் 125க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படுவதால், அந்த இடத்தை முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறது வியட்நாம் அரசு.

    இதன் தொடர்ச்சியாக தினமும் ஒரு லட்சம் பேருக்கு வைரஸ் பரிசோதனை நடத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதிக பாதிப்புக்குள்ளானவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கும் நோக்குடன் இந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இது தவிர மே 31 முதல் 15 நாட்களுக்கு வியட்நாமில் புதிய சமூக இடைவெளி வழிகாட்டுதல்களை அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

    அதன்படி கடைகள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவை தற்காலிகமாக மூடப்படும். பொது இடங்களில் 10 பேர் கூட விதிக்கப்பட்ட தடை, ஐந்து பேராக கட்டுப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அங்கு வார இறுதியில் மிகவும் ஆபத்தான ஹைபிரிட் திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    இந்த புதிய திரிபு, இந்தியா மற்றும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட வைரஸ் அம்சங்களின் கலவையாக உள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

    கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வியட்நாம் வெற்றி பெற்றிருந்தாலும், அங்கு சமீப நாட்களாக வைரஸ் பாதிப்பு அளவு உயர்ந்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 7,000க்கும் அதிகமான பாதிப்புகளும் 47 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. அதில் பாதிக்கும் மேற்பட்ட பாதிப்புகள், புதிய வகை திரிபுவால் ஏற்பட்டுள்ளது அதிகாரிகளை கவலை கொள்ளச் செய்துள்ளது.

    சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டபோது, துரிதமாக செயல்பட்ட வியட்நாம், உடனடியாக தமது எல்லைகளை மூடியது. மேலும், உள்நாட்டில் இருந்த அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் வெளியேற்றியது. பிறகு நாட்டுக்குள் வந்த மக்களை தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தியது.

    அதைத்தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் புதிதாக வைரஸ் திரிபு கண்டறியப்பட்டுள்ளதால் தமது தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்த வேண்டிய அழுத்தம் வியட்நாம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு பத்து லட்சம் பேரில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர்.

  6. இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தி 7.3% வீழ்ச்சி

    இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை சவால்களை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த ஆண்டு அதன் உள்நாட்டு மொத்த உற்பத்தி சதவீதம் -7.3 ஆக பதிவாகியிருக்கிறது.

    இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான நிலையாகும்.

    இந்தியாவின் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை இந்திய புள்ளியல் துறை அமைச்சகம் கணக்கிட்டு அதன் அறிக்கையை திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2020-21 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1.6 சதவீதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி -24.38 ஆக பதிவானது. பிறகு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 7.5 சதவீத வீழ்ச்சியை நாடு சந்தித்தது.

    மூன்றாவது காலாண்டில் 0.5 சதவீத அளவுக்கு வளர்ச்சியை நாடு சந்தித்தது. இந்த சரிவுக்கு நாடு தழுவிய பொது முடக்கம், பொது முடக்க கட்டுப்பாடுகள், கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளே முக்கிய காரணம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு சுமார் மூன்று முதல் ஐந்து மாதங்களை பல மாநிலங்கள் முழு முடக்கமாக எதிர்கொண்டதால் விநியோகச்சங்கிலி பாதிப்படைந்தது. பொதுமக்களின் நுகர்வுத்திறனும் பாதித்தது. பணப்புழக்கம் குறைந்து, நுகர்வோர் தைவையும் குறைந்தது. இது தவிர கொரோனா தடுப்பூசி இல்லாததால் இந்தியாவில் அன்னிய முதலீடுகள் குறைந்தன. இவை அனைத்தும் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி சரிவுக்கான காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

  7. சென்னை தனியார் பள்ளிகள் மீது குவியும் பாலியல் துன்புறுத்தல் புகார்கள்

    சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் வந்ததைஅடுத்து, விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பியபோதும், பள்ளி நிர்வாகத்தினர் ஆஜராகவில்லை என தெரிய வந்துள்ளது.

    கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளிடம் மோசமாக நடந்துகொண்டது, மாணவிகளுக்கு தகாத குறுஞ்செய்தியை அனுப்பியது தொடர்பான புகார்கள் குவிந்தன.

    விசாரணைக்காக நேரில் அந்த பள்ளிக்கு சென்ற போது, பள்ளி நிர்வாகத்தினர் சென்னை மாவட்ட குழந்தைகள் நல குழு அதிகாரிகளை அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பி, இன்று (மே 31)ஆஜராகவேண்டும் என தெரிவித்தபோதும், அவர்கள் ஆஜராகவில்லை என்று குழந்தை நல குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    என்ன விவகாரம்?

    கடந்த வாரம் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், ஆன்லைன் வகுப்பு நடத்தும்போது மோசமாக நடந்து கொண்டதாகவும், மாணவிகளுக்கு தகாத முறையில் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் ட்விட்டர் தளத்தில் புகார்கள் பதிவாகின.

    பாடகி சின்மயி, அரசியல் தலைவர்கள் பலரும் சமூக வலைதளங்களில் மாணவிகளில் முன்வைக்கப்பட்டுள்ள புகார்கள் விசாரிக்கப்பட்டு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் நடந்துகொண்ட விதம் பற்றிய விவாதம் பெரிதாக தொடங்கியவுடன், சென்னை காவல்துறையினர் அந்த ஆசிரியரை கைதுசெய்தனர்.

    அவர் பணிபுரிந்த பள்ளி நிர்வாகம் இதுவரை தங்களுக்கு புகார்கள் வந்ததில்லை என்றும் இனி அந்த புகாரை விசாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தது. ஜூன் 4ஆம்தேதி அந்த பள்ளி அதிகாரிகள் விசரணைக்கு ஆஜராகவேண்டும் என அறிவிக்கப்பட்டவுடன், மீண்டும் பிற மூன்று பள்ளிகளைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள் உள்ளிட்ட பலரும் தாங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றிய விவரங்களை ஆணையத்திற்கு அனுப்பிவைத்தனர்.

    தற்போதுவரை மாணவர்களிடம் இருந்து பெற்ற புகார்களை விசாரிக்க முடிவுசெய்துள்ள ஆணையம், ஈமெயில் வாயிலாக புகார்களை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.ஆணையத்தின் தலைவி சரஸ்வதி ரங்கசாமி, மாணவர்களின் புகார்கள் விசாரிக்கப்பட்டு விரிவான அறிக்கை ஒன்றை அரசிடம் அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் பலரும் தற்போது பயிலும் மாணவர்கள் புகார்களை தெரிவிக்க ஊக்கமூட்டிவருகின்றனர். தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர், கூகுள் படிவம் ஒன்றை உருவாக்கி, பாதிக்கப்பட்ட மாணவ,மாணவியர் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை பெயர் குறிப்பிடாமல் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளார்.

    தமிழ்நாடு குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் என்ற தொண்டு நிறுவனம் பாதிக்கப்பட்ட மாணவ,மாணவிகளுக்கு இலவச சட்ட உதவி மற்றும் மன நல ஆலோசனை வழங்க உதவி எண்களை வெளியிட்டுள்ளது.

    ''பல தனியார் பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிகிறது. குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அச்சமின்றி எங்களிடம் புகார்களை வழங்கலாம். அவர்களின் தகவல்களை வெளியிடமாட்டோம். காவல்துறையிடம் புகார் கொடுக்க தயங்கினால், நாங்கள் சட்ட உதவி பெற்று தர தயாராக இருக்கிறோம். 8925274527,8056003486 ஆகிய அலைபேசி எண்ணில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகாரை தரலாம்,'' என குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர் ஆண்ட்ரு ஜேசுராஜ் தெரிவித்துள்ளார்.

  8. கொரோனா தடுப்பூசி கொள்முதல், விற்பனை விலை குறித்து அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

    கொரோனா தடுப்பூசி மருந்து கொள்முதல் விவகாரத்திலும் அவற்றை ஒரே சீரான விலையில் நாடு முழுதும் விற்பனை செய்யும் நடவடிக்கையிலும் காணப்படும் முரண்பாடுகள் குறித்து அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் விநியோகம், மருந்து விற்பனை, தடுப்பூசி மருந்து கொள்கை தொடர்பாக தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தை நீதிபதிகள் தனஞ்ஜெய ஒய். சந்திரசூட், எல். நாகேஸ்வர ராவ், ஸ்ரீபதி ரவீந்திர பட் அடங்கிய அமர்வு திங்கட்கிழமை விசாரித்தது.

    இந்த வழக்கில் அரசுக்கு நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் மற்றும் விசாரணையின்போது தெரிவித்த கருத்துகளில் முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

    அதிக அளவில் கொரோனா தடுப்பூசி வாங்குவதாக மத்திய அரசு கூறுகிறது.பிறகு ஏன் மாநிலங்களில் அதே தடுப்பூசி அதிக விலைக்கு விற்கப்படுகிறது? இந்த பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் ஒரே சீரான விலையில் தடுப்பூசி மருந்து கிடைக்க வேண்டும்.

    தடுப்பூசி மருந்து போடுவதில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மருந்தை பெற பொறுப்பேற்றுக் கொள்ளும் மத்திய அரசு, ஏன் 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான தடுப்பூசி மருந்துகளை பெறும் பொறுப்பை மாநிலங்களிடம் விடுகிறது? அப்படியென்றால் இந்த விஷயத்தில் யார் நலிவற்றவர்கள், யார் பொருளாதார ரீதியாக பலவீனமானவர்கள் என்ற தரம் எவ்வாறு கண்டறியப்படுகிறது? இதை மத்திய அரசு எவ்வாறு நியாயப்படுத்துகிறது?

    கோவின் செயலி மூலம் 18 வயதை கடந்தவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு செய்வது கட்டாயம் என்ற அரசின் நடைமுறை குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒரு கிராமவாசியிடம் செல்பேசி இல்லையென்றால் அவரால் எப்படி தடுப்பூசி மையத்துக்கு சென்று பதிவு செய்ய முடியும்?

    குடியேறி தொழிலாளர்கள் தடுப்பூசி பெறுவதை எப்படி அரசு உறுதிப்படுத்துகிறது என்று நீதிபதிகள் கேட்டனர். இதற்கு பதிலளித்த இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "கோவில் செயலி அல்லது இணையதளம் மூலம் தடுப்பூசி பதிவு செய்யலாம். பஞ்சாயத்துகள் மூலம் பதிவு செய்ய வசதி உள்ளது. இன்டர்நெட் வசதி இல்லாதவர்கள் நண்பர்கள், உறவினர்கள் மூலம் தடுப்பூசி பெறலாம். நேரடியாக தடுப்பூசி மையத்துக்கு வந்து ஊசி போட்டுக் கொள்வதென்றால் கூட்ட நெரிசல் ஏற்படும். அதனாலேயே ஆன்லைன் பதிவை அறிமுகப்படுத்தினோம்," என்று கூறினார்.

    அரசை பொறுத்தவரை தடுப்பூசி திட்டத்தை பணியிடங்களில் செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட முடியாது என்பதால் குடியிருப்போர் நலச்சங்கம், அவசர ஊர்தி வாகனங்கள் மூலம் தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று துஷார் மேத்தா தெரிவித்தார்.

    இந்த வழக்கில் நீதிமன்றதத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, "தடுப்பூசி விவகாரத்தில் அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவின் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 45 வயதை கடந்தவர்கள் தடுப்பூசி மையத்துக்கு சென்று தடுப்பூசி போடும் நிலை நீடிக்கிறது," என்று கூறினார்.

    இதையடுத்து நீதிபதி பட், நாட்டின் பல்வேறு நகரங்களில் தடுப்பூசி பெற முன்பதிவு செய்ய ஆன்லைனில் நுழைந்த இரண்டு, மூன்று நிமிடங்களிலேயே அந்த பதிவு முடிந்து விடுவதாக பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள் என்று கூறினார்.

    நீதிபதி நாகேஸ்வர ராவ், "தற்போதைக்கு அரசு நடைமுறைப்படுத்தும் தடுப்பூசி திட்டம் கிராமப்புறங்களை உள்ளடக்கியதாக தோன்றவில்லை. அத்தகைய பகுதிகளையும் சேர்க்காதவரை இந்த விவகாரத்தில் எடுக்கப்படும் முடிவு தன்னிச்சையானதாக இருக்கும்.

    எனவே, கொள்கையில் திருத்தம் தேவை," என்று கூறினார். நீதிபதி சந்திரசூட், "தடுப்பூசி மருந்து கொள்முதல் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் அமெரிக்கா சென்று பேசியதில் இருந்தே இந்த விவகாரத்தின் தீவிரத்தை நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த விஷயத்தில் தேசத்தின் கரங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்," என்று கூறினார்.

    இந்த வழக்கு விசாரணையின்போது கங்கையில் தூக்கி வீசப்படும் சடலங்களின் காட்சிகள் தொடர்பான ஊடக செய்திகள் குறித்தும் நீதிபதிகள் தெரிவித்து தங்களுடைய கவலைகளை வெளிப்படுத்தினர்.

  9. சீனாவில் தம்பதி மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அரசு அனுமதி

    சீனாவில் ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

    சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களுடனான கூட்டத்துக்குப் பிறகு இந்த கொள்கை மாற்றத்துக்கு அதிபர் ஷி ஜின்பிங் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த நாட்டின் அரசு ஊடகமான ஷின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

    சீனாவின் மக்கள்தொகை பெருக்கம் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் குறைந்துள்ளதாக சமீபத்தில் வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்தது.

    அந்த தரவு ஏற்படுத்திய அழுத்தத்தின் காரணமாக, சீன அரசு அந்நாட்டு மக்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவித்து, மக்கள் தொகை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

    அதாவது, சீனாவில் குழந்தைகளின் பிறப்பு குறைவதால், நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை இளம் வயதினரை விட அதிகமாகும் கவலை எழுந்தது.

    இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், எதிர்காலத்தில் வயதானவர்களுக்கு ஆதரவளிக்க தேவையான பணியாளர்கள் இல்லாமல், நாடுமுழுவதும் மருத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அளவில் தேவை ஏற்படும் என்று வல்லுநர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

  10. சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு எதிரான வழக்கு: மனுதாரருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

    புதிய நாடாளுமன்ற கட்டடம் உள்ளிட்ட பிற கட்டடப்பணிகள் அடங்கிய சென்ரல் விஸ்டா திட்டத்துக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

    இந்த விவகாரத்தில் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ள உயர் நீதிமன்றம், இந்தத் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாவசியமான ஒன்று என கருத்து தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் மனுதாரர் உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  11. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ +2 தேர்வு: ஜூன் 3க்குள் கொள்கை முடிவெடுக்க உத்தரவு

    சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கில், வரும் ஜூன் 3ஆம் தேதிக்குள் கொள்கை முடிவெடுக்க மத்திய அரசுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு

  12. வியட்நாம் அதிரடி: நகரத்திலுள்ள 13 மில்லியன் மக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டம்

    இந்தியாவில் பரவிய கொரோனா திரிபு மற்றும் பிரிட்டனில் பரவிய கொரோனா வைரஸ் திரிபு கலந்த ஒரு புதிய கோவிட் திரிபு வியட்நாமில் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த வகை திரிபு காற்றில் வேகமாகப் பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த புதிய திரிபு "மிக ஆபத்தானது" என வியட்நாமின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    ஒட்டுமொத்தமாக வியட்நாமில் 7,000 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சமீபத்தைய புதிய கொரோனா திரிபு பரவலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கொரோனா பரவலைத் தடுக்க ஹோ சி மின் நகரத்தில் உள்ள 13 மில்லியன் மக்களையும் பரிசோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள்.

    நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் கூட, நகரத்தில் உள்ள எல்லோரையும் பரிசோதனை செய்து முடிக்க 4 மாதங்களுக்கு மேல் ஆகலாம் என கூறப்படுகிறது.

    பரிசோதனை மட்டுமின்றி, மே 31ஆம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு புதிய சமூக இடைவெளி விதிகளையும் வியட்நாம் அரசு அறிவித்திருக்கிறது.

    கடைகள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன. மதம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

    “10 பேருக்கு மேல் கூடும் அனைத்து பொது நிகழ்வுகளும் நகரத்தில் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இதை ஐந்தாக குறைக்க ஆலோசித்து வருகிறோம்” என வியட்நாம் அரசு தரப்பு கூறியுள்ளது.

    வியட்நாமின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இதுவரை சுமார் 1 சதவீதம் பேர் (1 மில்லியன் பேர்) மட்டுமே தடுப்பூசியில் ஒரு டோஸையாவது செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட தொடக்க காலத்தில், வியட்நாம் மிக சிறப்பாக செயல்பட்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியது.

    தங்கள் நாட்டு மக்களைத் தவிர மற்றவர்களுக்கு எல்லைகளை மூடியது. புதிதாக நாட்டுக்குள் வந்தவர்களை பரிசோதித்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தியது. மேலும் அவர்களோடு தொடர்பில் வந்தவர்களை தடமரிந்து அவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தியது.

    இதனால் வியட்நாமில் கொரோனா தொற்று பெரிய அளவில் கட்டுப்பாட்டிலேயே இருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

  13. தலைமைச் செயலரை டெல்லிக்கு அனுப்ப முடியாது - பிரதமருக்கு மே.வங்க முதல்வர் கடிதம்

    மேற்கு வங்கத்தின் முதல்வர் மமதா பானர்ஜி, தன் மாநிலத்தின் தலைமைச் செயலர் அலபன் பந்தோபாத்யாயை டெல்லிக்கு அனுப்ப முடியாது என கடிதம் மூலம், பிரதமர் நரேந்திர மோதிக்கு தெரிவித்திருக்கிறார்.

    இந்த முக்கியமான காலகட்டத்தில் மேற்கு வங்க அரசு, தன் தலைமைச் செயலரை விடுவிக்க முடியாது என அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். எனவே பிரதமர் மோதி இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும், முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார் மமதா.

    இந்த விவகாரம் பிரதமர் மோதிக்கும், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும் இடையில் ஒரு பிரச்சனையாக உருமாறிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில், யஷ் புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமரின் கூட்டத்தில், முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் தலைமைச் செயலர் அலபன் பந்தோபாத்யாய் பங்கெடுக்கவில்லை.

    இதற்குப் பிறகு தான் தலைமைச் செயலர் அலபன் பந்தோபாத்யாயை டெல்லிக்கு மத்திய அரசுப் பணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்த பிறகு, தன் அரசுக்கு பாஜக தொல்லை கொடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் மம்தா.

  14. கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் இருந்து வெளியாகி இருக்கலாம் - பிரிட்டிஷ் உளவுத்துறை

    அமெரிக்காவைத் தொடர்ந்து, தற்போது பிரிட்டனின் உளவு அமைப்புகளும், கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து கசிந்திருக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளது.

    இந்த செய்தி ‘தி சன்டே டைம்ஸ்’ என்கிற பிரிட்டன் பத்திரிகையில் வெளியான பிறகு, கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதை உலக சுகாதார அமைப்பு முழுமையாக விசாரிக்க வேண்டும் என பிரிட்டனின் தடுப்பூசி அமைச்சர் நதீம் சஹாவி கூறியுள்ளார்.

    “வூஹானின் அமைதி பிரச்சனைக்குரியதாக இருக்கிறது. வருங்காலத்தில் நம்மை நாமே காத்துக் கொள்ளவும், என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளவும் வெளிப்படையாக இருக்க வேண்டும்” என பிரிட்டனின் மக்களவை உறுப்பினரான டாம் டக்கெட் கூறியுள்ளார்.

    கொரோனா பரவுவதற்கு முன்பே மூன்று வூஹான் பரிசோதனைக் கூட ஆராய்ச்சியாளர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அது கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகளோடு ஒத்து இருந்ததாகவும், சில தினங்களுக்கு முன்பு தான் அமெரிக்க உளவுத் துறை அறிக்கை கூறியது.

    இந்த அறிக்கைக்குப் பிறகு, கொரோனா வைரஸ் எப்படி மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது என அமெரிக்க உளவு அமைப்புகள் அடுத்த 90 நாட்களுக்குள் கண்டு பிடிக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். சீனா ஆய்வகங்களில் இருந்து தான் கொரோனா பரவியது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என, உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு இவ்வாண்டின் தொடக்கத்தில் கூறியது நினைவுகூரத்தக்கது.

  15. ஊடகங்களைச் சந்திக்காவிட்டால் தடை - டென்னிஸ் வீராங்கனை ஓசாகாவுக்கு எச்சரிக்கை

    ஊடகங்களைச் சந்திக்காவிட்டால் பிரெஞ்ச் ஓபன் போட்டிகளிலும், வருங்கால கிராண்ஸ்லாம் போட்டிகளிலும் பங்கேற்க டென்னிஸ் இரண்டாம் நிலை வீராங்கனை நவோமி ஒசாகாவுக்கு தடை விதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

    ஜப்பானைச் சேர்ந்த ஒசாகா பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளின்போது செய்தியாளர்களைச் சந்திக்கப் போவதில்லை என்று கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

    தனது மனநிலையைக் காக்கும் பொருட்டு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

    ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் ருமேனியா நாட்டைச் சர்ந்த பேட்ரிசியாவை 6-4 7-6(7-4) என்ற புள்ளிகள் கணக்கில் ஒசாகா வென்றார் ஆனால் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்திக்காததால் அவருக்கு 15,000 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் முடிந்துவிடவில்லை. "கூடுதலாக அபராதமும் வருங்கால கிராண்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்கத் தடையும் விதிக்கப்படலாம்" என கிராண்ஸ்லாம் போட்டி நடத்தும் அமைப்புகள் வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    "கிராண்ஸ்லாம் போட்டிகளின் அடிப்படையான விதிமுறைகளில் ஒன்று ஊடகங்களைச் சந்திப்பது" என்றும் அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ஒசாகா "மாற்றம் சிலரை சங்கடப்படுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    செய்தியாளர்களைச் சந்திக்க முடியாது என ஒசாகா அறிவித்தபோது அதை மறுபரிசீலனை செய்யுமாறு பிரெஞ்ச் ஒபன் போட்டிகளை நடத்தும் அமைப்பு கோரியிருந்தது.

    ஆனால் தனது முடிவில் ஒசாகா பிடிவாதமாக இருந்தார். ஏன் இந்த நிலை? வீரர்களின் மனநிலையைப் பாதிக்கும் வகையில் இருப்பதால் போட்டிகளுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்திக்க இயலாது என கடந்த புதன்கிழமையன்று ஒசாகா அறிவித்திருந்தார்.

    ஒரு தோல்விக்குப் பிறகு வீரர்களிடம் கேள்வி கேட்பது, "வீழ்ந்து கிடப்பவரை எட்டி உதைப்பதற்குச் சமம்" என்று அவர் கூறியிருந்தார். "வீரர்களின் மன நலத்தை யாரும் பொருட்டாக மதிப்பதில்லை" என்றும் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    கிராண்ஸ்லாம் விதிகளின்படி ஊடகங்களை சந்திப்பதைத் தவிர்த்தால் வீரர்களுக்கு 20,000 அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் விதிக்கலாம்.

    ஒசாகாவின் நிலைப்பாட்டுக்கு கிராண்ஸ்லாம் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தாலும், டென்னிஸ் உலகத்திலும் அதற்கு வெளியிலும் அவருக்கு கணிசமான ஆதரவு கிடைத்திருக்கிறது.

  16. கொரோனா வைரஸ்: 24 மணி நேரத்தில் 3,128 பேர் பலி

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,52,734 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    ஒரே நாளில் 3,128 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சிகிச்சைக்குப் பிறகு 2,38,022 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியிருப்பதாகவும் இந்திய சுகாதாரத்துறை அமைச்சசகம் தெரிவித்துள்ளது.

    சுகாதார அமைச்சக தரவுகளின்படி இந்தியாவில் வைரஸ் தொற்று பரவலின் வேகம் குறைந்து வந்தாலும், உயிரிழப்பு விகிதம் சரிந்ததாகத் தெரியவில்லை. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16 லட்சத்து 83 ஆயிரத்து 135 பேரிடம் இருந்து கொரோனா வைரஸ் பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

  17. பிபிசி தமிழ் நேரலை செய்திகள் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்

    நேயர்களுக்கு வணக்கம். இந்த நேரலை பக்கத்தில் இன்றைய நாளில் உலக அளவிலும் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை தொகுத்து வழங்குகிறோம்.