போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு; தூக்க மாத்திரை சாப்பிட்ட பயிற்சியாளர்
சென்னையில் தடகள பயிற்சியாளர் ஒருவர் தன்னிடம் பயிற்சிபெற வந்த வீராங்கனைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததால் அவர் மீது காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்தது. இதனால் அந்த நபர் தூக்க மாத்திரையை சாப்பிட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னையில் தனியார் பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் ஆசிரியர் ஒருவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில், வேறு சில பள்ளிகள், பயிற்சிக் கூடங்களில் இருந்து இதுபோன்ற பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த தடகளப் பயிற்சியாளர் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக தன்னிடம் பயிற்சிபெற வந்த சிறுமியை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிவந்த நிலையில், அந்தப் பெண் தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்படி, தற்போது 19 வயதாகும் இந்தப் பெண் 2013ஆம் ஆண்டில் நாகராஜன் என்பவரிடம் தடகள பயிற்சி பெறுவதற்காக இணைந்துள்ளார். இவர் மத்திய அரசின் ஜிஎஸ்டி துறையில் கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். பயிற்சி முடிந்த பிறகு பிற பெண்களை அனுப்பிவிட்டு, இவருக்கு பிசியோதெரபி தருவதாகக் கூறி வளாகத்தில் உள்ள தனியறைக்கு அழைத்துச் சென்று, பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். தன்னுடன் ஒத்துழைத்தால் போட்டிகளில் சிறப்பாக உயர்த்தி விடுவேன் என்றும் கூறியிருக்கிறார். இந்தப் பெண் மட்டுமல்லாது,வேறு சில பெண்களிடமும் இதேபோல அவர் நடந்துகொண்டதாக புகார் தெரிவித்த பெண் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
இந்தப் பெண் இதற்கு மறுப்புத் தெரிவித்ததால், பயிற்சியை நிறுத்திய நாகராஜன் இதனை யாரிடமாவது சொன்னால் கொலைசெய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணின் பெற்றோர், அந்தப் பெண்ணை வேறு ஊருக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இப்போது அந்தப் பெண் பூக்கடை அனைத்து மகள் காவல் நிலையத்தில், நாகராஜன் மீது புகார் அளித்துள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் மீது போக்சோ சட்டம், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இதனைக் கேள்விப்பட்ட நாகராஜன் தூக்க மாத்திரையைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். அவர் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இந்தப் பயிற்சியாளரால் வேறு யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் புகார் அளிக்கலாம் என காவல்துறை தெரிவித்திருக்கிறது.



