ஜக்கி வாசுதேவின் பாம்புப்பிடி செயலால் தொடரும் சர்ச்சை - என்ன சொல்கிறது ஈஷா?

பட மூலாதாரம், Isha Foundation
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ஈஷா யோகா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மீது கர்நாடகாவிலுள்ள சிக்கபல்லபூரில் காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தை மீறி சாரைப் பாம்பு ஒன்றை தன்னுடைய நிகழ்ச்சியில் பயன்படுத்தியதாக அம்மாவட்ட வனத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாக பூஜையின்போது அந்த இடத்திற்குள் நுழைந்த பாம்பை, அதன் பாதுகாப்பு மற்றும் அங்கிருந்த மக்களின் பாதுகாப்பு கருதி, அதை மீட்டு அருகிலிருந்த காட்டிற்குள் விட்டதாகத் தெரிவித்துள்ளது.
ஆனால், இதற்கு முன்பும் அவர் மேடைகளில் பூஜையின்போது, உரையாற்றும்போது என்று பல முறை பாம்பை கையில் வைத்து, காட்சிபடுத்திக் கொண்டே செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஈஷாவின் சில காணொளிகளும் அதைக் காட்டுகின்றன.
கர்நாடகாவிலுள்ள எஸ்பிசிஏ (SPCA) என்ற அமைப்பின் உறுப்பினர் பிருத்விராஜ் அளித்துள்ள இந்தப் புகாரில், "சத்குரு சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட சாரைப் பாம்பு ஒன்றை பொருத்தமற்ற முறையில் வைத்திருந்தார். அதை பிரகாசமான ஒளிகளுக்கு நடுவே அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் அவர் மக்கள் கூட்டத்தின் முன்பாக மேடையில் காட்சிப்படுத்தினார். அந்தப் பாம்பு இன்னமும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை," என்று கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், NAmmachikkaballapur/instagram
மேலும், "இது குறித்து வழக்குப் பதிவு செய்து உடனடியாக ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு மீது நடவடிக்கை எடுத்து, காட்டுயிர் மற்றும் இயற்கையை அழிக்கும் நிறுவனரைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று கோருகிறோம். இல்லையென்றால், அவரைப் பின்பற்றுபவர்களும் இதையே செய்யக்கூடும்," என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் அளித்துள்ள பிருத்விராஜிடம் இது குறித்துக் கேட்டபோது, "பொது இடங்களில் பாம்புகளை இதுபோல் காட்டுவது 1972ஆம் ஆண்டின் காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றம். அவர் பூஜையின்போது சாரைப் பாம்பை காட்சிப் பொருள் போலக் காட்டிக் கொண்டிருந்தார். அது சட்டத்திற்குப் புறம்பானது. ஆகவே அதன்மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளோம்," என்று கூறினார்.
"கடந்த 30 ஆண்டுகளாக கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சட்டவிரோத காட்டுயிர் வேட்டை மற்றும் கடத்தலுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் காட்டுயிர் நிபுணர் ஷரத் பாபு, "ஈஷா அறக்கட்டளை, காடுகள் மற்றும் காட்டுயிர் விஷயத்தில் தமிழ்நாட்டில் செய்வதைப் போல் இங்கு செய்யக் கூடாது என்பதற்காக எச்சரிக்கையாகவே இந்த முயற்சிகளை எடுத்துள்ளோம்," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Isha Foundation


ஜக்கி வாசுதேவ் தரப்பில் இந்தப் புகார் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "தவறான தகவலோடு சிக்கபல்லபூர் மாவட்ட வனத்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில், அந்தப் பாம்பு அக்டோபர் 9ஆம் தேதியன்று நாக பூஜை நிகழ்வு நடந்து கொண்டிருந்தபோது அந்த இடத்திற்குள் வந்து விட்டது.
அப்படி அங்கு வந்த பாம்பு குறித்து தன்னார்வலர் ஒருவர் சத்குருவின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். சத்குரு, அந்தப் பாம்பை மென்மையாகக் கையாண்டு, பாதுகாப்பாக அருகில் இருந்த காட்டிற்குள் விட்டுவிட்டார். புகாரில் சொல்லப்பட்டிருப்பதைப் போல் பாம்பு எந்த வகையிலும் காயப்படுத்தப்படவோ, அடைத்து வைக்கப்படவோ இல்லை. நிகழ்வின்போது அங்கிருந்த போலீசாருக்கும் இது குறித்து தெரியும்.

பட மூலாதாரம், Isha Foundation
பாம்புகள் குறித்து இருக்கக்கூடிய தவறான புரிதல்களை நீக்கவும் அவற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதை நிகழ்வின்போது அவர் குறிப்பிட்டுப் பேசினார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது புதிய சம்பவம் அல்ல
ஜக்கி வாசுதேவ் பாம்பைக் கையாளும் விவகாரம் இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. அவர் தன் கைகளில் பாம்பை வைத்துக் கொண்டு நீண்ட நேரம் நிகழ்வுகளில் பேசிய காணொளிகளும் சமூக ஊடகங்களில் உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆன்மிகத்தில் பாம்புகளின் முக்கியத்துவம் என்ற உரையின்போது சுமார் இருபது நிமிடங்களுக்கும் மேலாக கையில் சாரைப் பாம்பு ஒன்றை வைத்துக்கொண்டே பேசிய காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
தன் கைகளில் பாம்பின் உடலைச் சுற்றி வைத்துக் கொண்டு, அவ்வப்போது அதைத் தடவிக் கொண்டே, ஆன்மிகத்தில் பாம்புகள் குறித்து நீண்ட நேரம் ஜக்கி வாசுதேவ் பேசுவதாக காட்சி இருக்கும். அந்த நிகழ்வு ஈஷா அறக்கட்டளை வளாகத்திற்குள்ளாக அமைந்திருக்கும் லிங்க பைரவி சந்நிதானத்தின் முன்பாக நடந்தது.
வேறு சில சூழலில் ஜக்கி வாசுதேவ், இப்படியாக பாம்புகளை தன் கையில் வைத்துக் கொண்டே உரையாற்றுவது, வாகனம் ஓட்டுவது போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

பட மூலாதாரம், Isha Sadhguru Youtube
ஒரு காணொளியில், ஈஷா வளாகத்திற்குள் ஒருவர் ஜக்கி வாசுதேவிடம் கொண்டு வந்து கொடுக்கும் சாரைப் பாம்பை ஒரு கையில் பிடித்தபடி தனது இருசக்கர வாகனத்தை ஓட்டுவார்.
ஊர்வன ஆராய்ச்சியாளர் மா.ரமேஸ்வரன், "இந்த மாதிரியான செயல்கள் பாம்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். சாரைப் பாம்பு தரையில் வாழக் கூடியது. அதை இதுபோல் கையாள்வது அதன் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்," என்கிறார்.

பட மூலாதாரம், Isha Foundation
வேறொரு காணொளியில், தனது தோளில் ஓர் ஆபரணத்தைப் போல் மலைப்பாம்பு போன்ற பாம்பு வகையை போட்டுக்கொண்டு அவர் எடுத்துள்ள ஒளிப்படங்களும் ஈஷா இணையதளத்தில் காணப்படுகின்றன.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
ஈஷா அறக்கட்டளையில் நடந்த நாக பூஜை ஒன்றின்போது, அவர் பாம்பு நஞ்சை குடிப்பதாகக் கூறி, மக்களின் முன்பாக பாம்பு நஞ்சு எனத் தெரிவித்து ஒரு திரவத்தைப் பருகுகிறார். இந்த விவகாரம் பரவலான கவனத்தை ஈர்த்தது.

பட மூலாதாரம், IShaa Sadhguru Youtube
இது குறித்து கருத்து தெரிவித்த பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பான யுஎஸ்இஆர்-இன் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் ந.ச.மனோஜ். "இந்தியாவில் பாம்பின் நஞ்சைப் பெறுவது சட்டபூர்வமாக அவ்வளவு எளிதான காரியமில்லை," என்கிறார்.
"இந்தியாவில், நஞ்சுமுறி மருந்து தயாரித்தல் போன்ற மருத்துவ பயன்பாடுகள், பாம்பின் நஞ்சு மற்றும் அது மூலம் தயாரிக்கப்படும் மருந்துகள் குறித்த ஆராய்ச்சிகள் ஆகிய இரண்டே காரணங்களுக்காக மட்டுமே பாம்பின் நஞ்சு கிடைக்கும். இந்தியாவில் ஏழு நஞ்சுமுறி நிறுவனங்கள் மட்டுமே உள்ளன.

பட மூலாதாரம், Isha Foundation
"பாம்பு நஞ்சுகளைச் சேகரித்து, அந்த நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் உரிமம் இந்தியாவிலேயே சென்னை அருகே மகாபலிபுரத்தில் சென்னை முதலைகள் பண்ணைக்குள் செயல்படும் இருளர் கூட்டுறவுக்கு மட்டுமே உண்டு. ஆராய்ச்சி காரணங்களுக்காக வாங்குவதாக இருந்தாலும் அதற்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. தலைமை வன அலுவலரின் அனுமதி வேண்டும். அதற்கு பல செயல்முறைகள் உண்டு, கைக்குக் கிடைக்க பல மாதங்கள் ஆகலாம். அவ்வளவு சாதாரணமாக ஒருவரால் அதைப் பெற்றுவிட முடியாது. இவற்றைத் தாண்டி வேறு காரணங்களுக்காக, வேறு வழிகளில் உரிய அனுமதியின்றி நஞ்சைப் பெறுவது சட்டப்படி குற்றம்," என்று கூறுகிறார் முனைவர் ந.ச.மனோஜ்.
பாம்பை பூஜையின்போது பயன்படுத்தியது, வாகனத்தில் தொங்கப்போட்டபடி பிடித்துக்கொண்டே ஓட்டியது, பாம்பின் நஞ்சைக் குடித்தது போன்றவை குறித்து ஈஷா அறக்கட்டளையிடம் பிபிசி தமிழ் கடந்த 17ஆம் தேதியன்று விளக்கம் கேட்டிருந்தது. அதற்கு விரிவாகவே அந்த மையத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.
ஈஷா அறக்கட்டளை விளக்கம்
ஒரு பூஜையின்போது 20 நிமிடங்களுக்கும் மேலாக கையில் சாரைப் பாம்பை வைத்துக் கொண்டிருந்தது குறித்துக் கேட்டபோது, "அந்தக் காணொளியில் சத்குரு பாம்பை மிக மென்மையாகக் கையாளுவதைக் காண முடியும். இந்தப் பாம்பு வலுக்கட்டாயமாகப் பிடித்து வரப்படவில்லை. அதேநேரத்தில் வேட்டையாடப்படவும் இல்லை.
மிகவும் சக்தி வாய்ந்த பிரதிஷ்டை நடைபெற்ற கோவில் வளாகத்தினுள் அது தானாகவே வந்தது. அங்கிருந்த பெரும்பாலான மக்கள் பாம்பைக் கண்டு அஞ்சியதால் பாம்பு உயிரிழக்ககூடிய வகையில் உருவாக இருந்த சூழலைத் தவிர்க்க, சத்குரு பாம்பை மென்மையாகப் பிடித்து நமது கலாசாரத்தில் இருக்கும் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.
நீங்கள் குறிப்பிடும் காணொளியில் பாம்பு முழு நேரமும் எந்தவித அச்சுறுத்தலையும் வெளிப்படுத்தவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது. அதன்பிறகு அது காட்டுப்பகுதியிலேயே விடப்பட்டது. இதில் எந்த சட்டமும் மீறபடவில்லை," என்று தெரிவித்தனர்.

பட மூலாதாரம், ISHA
வாகனத்தில் செல்லும்போது கையில் பாம்பைப் பிடித்துக்கொண்டே சென்றது குறித்த கேள்விக்கு, "சத்குரு பயணத்தின் நடுவில் பாம்பைக் கண்டபோது, அதை மீட்டெடுத்து காட்டில் விடுவித்தார். பாம்பு மிக மென்மையாகக் கையாளப்பட்டு, அதீத அக்கறையுடன் எந்த பாதிப்புமின்றி காட்டில் விடுவிக்கப்பட்டது. அந்தப் பாம்பு எந்தவித அச்சுறுத்தலையோ, பதற்றத்தையோ வெளிப்படுத்தவில்லை. இதில் எந்த சட்டமும் மீறப்படவில்லை," என்று ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
மேலும் பாம்புகளை காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு, "அப்படி எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. எதையும் விளம்பரத்திற்காக பயன்படுத்துவதில் சத்குரு ஆர்வம் காட்டியதில்லை. அத்தகைய படங்கள் எடுப்பதற்காக அவர் எந்த திட்டத்தோடும் கேமராக்கள் முன்பு நிற்பதில்லை. இந்தியாவில் ஏராளமான பழங்குடிகளும் சமூகங்களும் பல தலைமுறைகளாக பாம்புகளுடன் சிறப்பான உறவைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அப்படியான மக்கள் பாம்புகளைக் கையில் வைத்திருப்பதைப் போல் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை விளம்பரத்திற்காக பாம்புகள் பயன்படுத்தப்பட்டன எனச் சொல்வீர்களா?" என்று பதில் அளிக்கப்பட்டது.
பாம்பின் நஞ்சைக் குடித்ததாகச் சொல்லப்படுவது குறித்துக் கேட்டபோது, "சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தில் பாம்பின் நஞ்சு, மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது பரவலாக அறியப்படும் உண்மை. ஏன் இன்றைய நவீன மருத்துவத்தில் கூட பாம்பின் நஞ்சு பல்வேறு மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை," என்று ஈஷா அறக்கட்டளை பதில் கூறியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்

























