`கூட்டுறவு வங்கியில் சேமித்த பணம் கிடைக்கவில்லை` - 90 பாட்டியின் அவலநிலை

பிரசுரிக்கப்பட்டது

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள பொறையூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இங்கே சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். அருகே உள்ள தமிழகப் பகுதியான வாழப்பட்டாம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மனைவி 90 வயதுடைய கிருஷ்ணவேணி என்ற மூதாட்டிக் குப்பை சேகரித்தும், வெளிநாட்டவர் தோட்டத்தில் 50 ரூபாய் தினக்கூலிக்குப் பாதுகாவலராக பணிபுரிந்தும், அதில் கிடைக்கும் பணத்தை இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் சேமித்து வந்துள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளாக அவர் சேமிப்பில் 10,576 ரூபாய் இருந்துள்ளது.

தற்போது வயது முதிர்வு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், கடன் சங்கத்தில் பணத்தை எடுத்து மருத்துவச் செலவிற்கும், வரும் நாட்களில் தனது சொந்த செலவினங்களுக்குப் பயன்படுத்த முடிவு செய்தார். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூட்டுறவு கடன் சங்கத்திற்குச் சென்று மூதாட்டி தனது சேமிப்பு பணத்தைக் கேட்டுள்ளார். அதற்கு ஊழியர்கள் வங்கியிருப்பில் பணம் இல்லை என்று கூறி அலைக்கழித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒரு மாதத்திற்குப் பிறகு நேற்று (ஜூலை 9) கிருஷ்ணவேணி மூதாட்டி தனது சேமிப்பு பணத்தை மீண்டும் கேட்கக் கூட்டுறவு கடன் சங்கத்திற்குச் சென்றுள்ளார். அப்போதும் ஊழியர்கள் பணம் இல்லை கூறியுள்ளனர். இதனால், சேமித்த பணம் இல்லை என்று ஊழியர்கள் கூறியதால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மூதாட்டி அழுது தன்னுடைய பணத்தைத் தரும்படி கோரியுள்ளார்.

காணொளி தயாரிப்பு: நடராஜன் சுந்தர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :