You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் உங்கள் காதல் வாழ்க்கையை எப்படி மாற்றப் போகிறது?
- எழுதியவர், சிங்கி சின்ஹா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
வைரஸை விட காதல் பெரியது என்பார்கள். காதலின் எதிர்காலமும் அதுதான். காதல், எத்தனை வைரஸ்கள் வந்தாலும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
மற்ற பல துறைகளைபோல அல்லாமல், காதலின் எதிர்காலம் மெய்யியலை சார்ந்து இருக்கிறது. "செல்போன், கணிணி என்று இணையம் வழியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும்தான் இனி காதலிக்க முடியும்" என்கிறார் டெல்லியை சேர்ந்த தொழில் நெறிஞரான பப்பி ராய். சிகிச்சை இல்லாமல் தீர்வு கொடுப்பவர் என்று அவர் தன்னைக் கூறிக் கொள்கிறார்.
இப்போது காதலும், காமமும் வெவ்வேறாகிவிட்டது என்று அவர் மேலும் கூறுகிறார்.
மக்களும் அதற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமான டேட்டிங் ஆப்கள், கொரோனா ஊரடங்குக்கு பிறகு டேட்டிங் செய்யும் விதம் அடுத்த தலைமுறை மாற்றத்திற்கான உந்துதலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு காலத்தில் eHarmony, OKCupid மற்றும் Match ஆகிய டேட்டிங் தளங்கள், வீடியோ வழியாக டேட் செய்வது மிகவும் அதிகமாகியிருப்பதை பதிவு செய்துள்ளன.
பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்திவர, உணவகங்களும், கஃபேக்களும் வாடிக்கையாளர்களை மீண்டும் கடைகளுக்கு வரவழைக்க புதிய புதிய உத்திகளை கையாளத் தொடங்கிவிட்டன. குறிப்பாக காதலர்களை ஈர்க்க. டேட் நைட்ஸ், அதாவது வெளியில் ஓர் ஆணும் பெண்ணும் சந்தித்து கொள்வது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும். ஆனால் அவர்களுக்குள் ஓர் இடைவெளியும் சில சமயம் முகக்கவசங்களும் தேவைப்படலாம்.
தனது வீட்டில் தனது செல்ஃபோனில் ஆழ்ந்திருக்கிறார் ராய். காதலும் எங்கேயோ இருக்கிறது.
ஆனால், இதுவரை எப்படி காதலித்தோம் என்பதை நாம் மறந்துவிட வேண்டும் என்கிறார் அவர்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கு சற்று முன்புதான் தான் காதலிப்பதாக நினைக்கும் ஒரு நபருடன் மலைப்பிரதேசம் ஒன்றுக்கு வார இறுதியில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் ராய். ஆனால், அது நிறைவேறவில்லை. அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. மீண்டும் ஏப்ரல் மாதத்தில் டெல்லிக்கே திரும்பிவிட்டார். டெல்லியில் அவருக்கு பல காதலர்கள் இருக்கிறார்கள். அடிக்கடி குறுஞ்செய்திகளை பகிர்ந்து கொள்வார்கள். அவ்வப்போது வீடியோ கால் வழியே காதலிப்பதும் உண்டு.
மதம், சுற்றுலா ஆகியவற்றின் எதிர்காலத்தை பார்க்கும் போது, தெளிவான ஒரு கண்ணோட்டத்துடன் கூற முடிந்தது. ஆலயங்கள் திறக்கப்பட்டுவிட்டன. பள்ளிகளும் திறக்கப்படும். பயணங்களும் ஒருசில விதிமுறைகளோடு அனுமதிக்கப்படும்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
ஆனால், காதல்? இது முற்றிலும் வேறு.
பிரிட்டனில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து கொரோனா தொற்று பரவலை தடுக்க காதலர்கள் ஒருவர் மற்றொருவர் வீட்டிற்கு சென்றுவர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
மேலும், நெதர்லாந்தில் திருமணமாகாதவர்கள் அல்லது துணையில்லாதவர்கள் (சிங்கிள்ஸ்) ஒரு சிறந்த பாலியல் துணையைக் கண்டுபிடிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியது.
அப்படி துணையைத் தேர்வு செய்யும்போது அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால், அவர்கள் பாலியல் உறவில் ஈடுபடக்கூடாது எனவும் அப்போது கேட்டுக்கொள்ளப்பட்டது.
தங்களது துணைக்கு கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில், சுய இன்பம் காண்பதே சிறந்த வழி எனவும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியது.
தற்போது வீடியோ கால் வழியே காதல் செய்வது சாதாரணமாகிவிட்டது. செல்ஃபோன்கள் வழியே பாலியல் உறவு வைத்துக் கொள்வதும்தான்.
உணவகங்கள் எல்லாம் மூடப்பட்டிருப்பதால், நேரில் பார்த்துக் கொள்வது சாத்தியமற்றதாக இருக்கிறது. திருமணங்கள், பாலியல் உறவு என அனைத்தும் மெய்நிகர் நிலையை அடைந்துவிட்டது. அது சற்று கவலைப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால், எதிர்காலத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம்.
***
பெங்களூரில் தனது வீட்டு பால்கனியில் ஒயின் மற்றும் மெழுகுவர்த்தியுடன் ஒரு மேஜையை அமைக்கிறார் 33 வயதான கேலிப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அன்று அவருக்கு டேட்டிங் ஆப்பான பம்பிளில் வீடியோ கால் மூலம் டேட் செய்வதாக திட்டம்.
பல டேட்டிங் ஆப்களை இதற்கு முன்பு கேலிப் பயன்படுத்தி இருந்தாலும், அதில் அவர் அதிக நேரம் செலவழித்தது கிடையாது. அவர் தொடங்கிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் எப்போதும் அதிக வேலை இருந்து வந்தது. இந்த நிலையில், ஊரடங்கிற்கு பிறகு, தனக்கு ஒரு துணையை தேடிக் கொள்ள அவர் முடிவெடுத்தார். பலரிடம் பேசியதில், தனக்கான ஒரு துணையை அவர் தேடிக் கொண்டார்.
கேலிப் அவர் பால்கனியில் இருக்க, அந்தப் பெண் அவருடைய பால்கனியில் இருந்தவாறே வீடியோ கால் வழியாக சந்தித்துக் கொண்டனர். அது 40 நிமிடங்கள் நீடித்தது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து, அவர்கள் நேரில் சந்தித்துக் கொண்டனர். கேலிப் வீட்டு மாடியில் அந்த சந்திப்பு நடந்தது. அந்த பெண் முகக்கவசம் அணிந்து கொண்டு வந்தார். லேசாக அணைத்துக் கொண்டனர். சரியாக அணைத்துக் கொள்ளவில்லை என்றாலும், அது போதுமானதாக இருந்தது என்கிறார் கேலிப்
"அனைவரும் ஒரு துணையை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் பேச விரும்புகிறார்கள். வைரஸ் குறித்து பேசக்கூடாது என்று நினைத்தாலும், இந்த பெருந்தொற்று காலத்தில் தங்கள் நிலை எப்படி இருக்கிறது, என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது குறித்து பேசுகிறார்கள். தற்போது எந்த மாதிரியான மனநிலை இருக்கிறது என்பதை நன்கு அறிவேன். ஆனால், நான் அவசரப்பட்டு தவறு செய்யவில்லை. நன்கு சிந்தித்தே முடிவை எடுக்கிறேன்" என்று கேலிப் கூறுகிறார்.
மகிழ்ச்சி இல்லாத இணைகளிடம் இருந்து தனக்கு பல அழைப்புகள் வருவதாக கூறுகிறார் டெல்லியை சேர்ந்த வாழ்க்கைமுறை பயிற்சியாளர் ஆஷிஷ் சேகல்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட ஓரிரு வாரங்களுக்கு ஏதுமில்லை; பின்னர் தொடர்ந்து பல அழைப்புகள்.
தங்கள் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருப்பதாக ஜோடிகள் கூறுகின்றன.
பெருந்தொற்றால் ஏற்பட்ட பதற்றத்தால், காதலின் எதிர்காலத்தில் மாற்றங்கள் இருக்கும்.
"காதல் என்பது ஒரு கருத்தின் அடிப்படையில் வலுவானதாக இருக்கும்", என்கிறார் சேகல்.
"பயத்தில்தான் காதல் வளரும்"
காதல் என்று வரும்போது அவர் ஒருசில விஷயங்களை கணிக்கிறார். திருமணங்கள், விவாகரத்துகள் மற்றும் குழந்தை பிறப்பது என அனைத்துமே அதிகரிக்கும். நீங்கள் கூர்ந்து கவனித்தால், இவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று முரணானது. காதலின் எதிர்காலம் அவ்வளவு குழப்பமானதாக இருக்கும்.
பலர் தனிமையாக உணர்வதும் அதிகரிக்கும் என்கிறார் சேகல்.
இதற்கெல்லாம் அரசுகளோ, மருத்துவர்களோ எந்த கொள்கைகளையும் விதிகளையும் வகுக்க முடியாது.
"எச்ஐவி, எய்ட்ஸ் போன்ற நோய்களால் மனிதர்கள் காதல் செய்வதை நிறுத்திவிட முடியாது. முன்பைவிட அதிக காதலை மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்" என்கிறார் அவர்.
நெருக்கமான உறவு என்பதும் ஒருவர் மனதில் இருக்கும். இந்தியா போன்ற ஒரு நாட்டில் மேற்கத்திய நாடுகளை போல பாலியல் உறவுக்கான துணையை தேடிக் கொள்ளலாம் என்ற முன்மொழிவும் சாத்தியமில்லை.
எச்ஐசி, எய்ட்ஸ் பரவாமல் இருக்க ஆணுறை அணிந்து கொள்ள முடியும். ஆனால், முகக்கவசம் அணிந்து கொண்டு பாலியல் உறவு வைத்துக் கொள்வது சரியாக இருக்காது.
மும்பை காமாதிபுரா பகுதியை சேர்ந்த ஒரு பாலியல் தொழிலாளி கூறுகையில், பல வாடிக்கையாளர்களும் வீடியோ காலில் உறவு கொள்ள முன்வருகிறார்கள் என்கிறார். ஆனால், அவருக்கு அதில் விருப்பமில்லை.
"எய்ட்ஸ் பரவாமல் இருக்க ஆணுறை போதுமானது. ஆனால், கொரோனா வைரஸ் தொட்டாலே பரவும் என்கிறார்கள். செல்போனில் உறவு வைத்துக்கொள்வது, ஒருவரை தொடுவது போல் இருக்காது" என்கிறார் அந்த பாலியல் தொழிலாளி.
"வாடிக்கையாளரைப் பற்றி தெரிந்து கொள்ளவோ, அல்லது அவர்களிடம் மனம் திறந்து பேசவோ எங்களுக்கு விருப்பமில்லை" என்கிறார் நேஹா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
அவர்களது வேலை பாலியல் உறவு வைத்துக் கொள்வது. தற்போது அது முடியவில்லை
***
பிற மனிதர்களை பார்க்க முடியாத நிலை இருப்பதால், பலருக்கும் ஆன்லைன் டேட்டிங் ஒரு சிறந்த வழியாக இருக்கிறது. ஆனால், தற்போது அதுவும் மாறி வருகிறது.
பிப்ரவரி 2019இல் Filter Off என்ற செயலியை சர்க் ஸ்க்லீன் அறிமுகப்படுத்தினார். பின்னர் 2020 பிப்ரவரியில் அது மேம்படுத்தப்பட்டது.
Filter Off செயலியில் முதலில் ஒருவரை வீடியோவில் பார்த்து பேசலாம். 90 விநாடி வீடியோ காலில் மற்றவரை உங்களுக்கு பிடித்திருந்தால், பின்னர் குறுஞ்செய்திகளையும் காணொளிகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
"வேண்டுமென்றால் ஊரடங்கு முடிந்த பிறகு ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொள்ளலாம்" என்கிறார் சர்க்.
இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் பம்பிள் டேட்டிங் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
"தொலைவில் இருந்தும் நெருங்கி இருங்கள்" என்ற பிரசாரம் ஒன்றை சமீபத்தில் பம்பிள் வெளியிட்டது.
டிண்டர் உள்ளிட்ட பல டேட்டிங் செயலிகளின் பயன்பாடு கடந்த சில வாரங்களில் அதிகரித்திருக்கின்றன.
***
ஆனால் பலரும் இந்த பெருந்தொற்று காலத்தில் டேட்டிங் செயலிகள் பயன்படுத்துவதை விரும்புவதில்லை.
மும்பையை சேர்ந்த 39 வயதான கரண் அமின் கூறுகையில், பலரும் தங்களுக்கு வேலையில்லை என்ற காரணத்தினால் என்ன செய்வது என்று தெரியாமல் டேட்டிங் செயலிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டதை காண முடிகிறது என்கிறார்.
"ஒரு நாளுக்கான பாலியல் உறவைத் தேடிக் கொள்ள பலரும் டிண்டர் செயலியை பயன்படுத்தினார்கள். ஆனால், தற்போது நீங்கள் வெளியில் போக முடியாது."
கரண் ஒரு பெண்ணிடம் டிண்டரில் பேசிக்கொண்டிருக்கும் போது, அடுத்த ஆறு மாதங்களுக்கு யாரையும் தொடுவதாக இல்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
"ஒருவரை பார்க்க செல்லும்போது, எனக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழையா எடுத்து செல்ல முடியும்? வெறுமனே பேசிக்கொண்டிருப்பதற்காக மட்டும் நான் டேட்டிங் செயலிகளை வைத்திருக்கவில்லை" என்கிறார் கரண்.
ஒருபாலுறவினர் தங்கள் துணையை தேடிக் கொள்ள உதவும் Grindr செயலி 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
"இந்த சூழல் பயத்தை தருகிறது. ஏற்கனவே எங்களுக்கு எய்ட்ஸ் குறித்த அச்சம் உண்டு. தற்போது கொரோனாவும் அதில் சேர்ந்துள்ளது" என்று கூறுகிறார் நொய்டாவை சேர்ந்த ஒருபாலினத்தவர் ஒருவர்.
கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர நீண்ட காலமாகும். அதுவரை ஒருவரை கட்டிப்பிடிக்க கூட மக்கள் யோசிப்பார்கள்.
காதல், காமம் போன்றவற்றின் எதிர்காலம் பல கோணங்களில் நிரந்தர மாற்றத்தை சந்திக்கும்.
***
திருமணமானவர்களுக்கு மேலும் கடினமான சூழல் இருக்கும்.
"தம்பதிகள் எப்போது ஒன்று சேர்ந்தே இருப்பதால், தேவைக்கு அதிகமான நேரத்தை ஒன்றாக செலவிடும் சூழல் இருக்கிறது. வேலைக்கு போகும் நேரத்தில் ஒரு பிரிவு வரும். தற்போது அது இல்லை. மக்கள் இந்த மாற்றத்தை இதுவரை கண்டதில்லை" என்று சேகல் கூறுகிறார்.
விவாகரத்து விகிதம் அதிகமாகி உள்ளது. குடும்ப வன்முறை வழக்குகளும் அதிகமாகி இருக்கிறது.
***
கொரோனா காலத்தில் நெருங்கிப்பழகுவது அதிகரித்ததை அடுத்து, ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகளின் விற்பனையும் அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில் கொரோனா தொற்று இந்த ஆண்டு டிசம்பரில் உச்சமடையும் என்று வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
நியூயார்க் மாகாணத்தில் Zoom செயலியில் திருமணம் செய்வதுகூட சட்டப்பூர்வமாக்கப்பட்டுவிட்டது.
இந்தியாவில் சில திருமணங்கள், பிற கொண்டாட்டங்கள் எல்லாம் Zoom ஆப்பில் நடக்கின்றன. சமூக இடைவெளியை பின்பற்றி மிகக் குறைந்த அளவிலான விருந்தினர்களுடன் வழக்கமான திருமணங்கள் சாதாரணமாகிவிட்டன.
சொல்லப்போனால் இதுதான் எதிர்காலம். நாம் அதற்கு ஏற்றவாறு ஏற்கனவே நம்மை மாற்றிக் கொண்டு விட்டோம். சிலர் மீண்டும் "சாதாரண நிலை" திரும்பும் என்று காத்துக் கொண்டிருக்க, பலரும் இணையம் வழியே காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெருந்தொற்று ஏற்பட்ட பிறகு, வழக்கத்துக்கு மாறான உறவுகளை பலரும் வைத்துக் கொள்ளலாம். காதல் என்ற ஒன்றை நாம் நம்ப வேண்டும். அவ்வளவுதான்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :