கொரோனா வைரஸ்: இந்தியாவில் நோய் தொற்று பரிசோதனை 33 மடங்கு உயர்வு - அண்மைய தகவல்கள்

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் தினசரி நடத்தப்பட்டு வரும் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று (வியாழக்கிழமை) அளிக்கப்பட்ட முக்கிய தகவல்களின் தொகுப்பு இதோ.

  • இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,393ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் இதுவரை மொத்தம் 681 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 1,409 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 4,257 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
  • இன்றைய நிலவரப்படி, நாட்டின் 12 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக ஒருவருக்கு கூட கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்படவில்லை.
  • அதே போன்று, 78 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் ஒருவருக்கு கூட புதிதாக நோய்த்தொற்று உறுதிசெய்யப்படவில்லை.
  • மார்ச் 23ஆம் தேதி வரை, இந்தியா முழுவதும் கோவிட்-19 நோய்த்தொற்றை உறுதிப்படுத்தும் 14,915 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இன்றைய நிலவரப்படி, அது ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது. அதாவது, கடந்த 30 நாட்களில் 33 மடங்கு பரிசோதனைகளை அதிகரித்துள்ளோம். இதை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
Banner image reading 'more about coronavirus'
  • ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி அரசால் நோய்த்தொற்று பரவலை குறைக்கவும், நோய்த்தொற்று இரட்டிப்பாகும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிந்தது. எதிர்காலத்திற்காக நம்மை தயார்படுத்த இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டோம்.
  • கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டால் என்னவாகுமோ என்பது போன்ற அச்சத்தின் காரணமாக கோவிட்-19 நோய்த்தொற்றோ அல்லது வேறு உடல்நல பிரச்சனையோ இருப்பவர்கள் மருத்துவமனைக்கு வருவதற்கு தயங்குவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த நோய்த்தொற்றில் இருந்து குணமானவர்களின் இரத்த பிளாஸ்மாவை கொண்டு சிகிச்சை அளிக்கும் முறைக்கு பலர் தாங்களே முன்வந்து இரத்த தானம் செய்கிறார்கள்.
  • மார்ச் 23ஆம் தேதியன்று இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400. அதே தேதியில், அதே எண்ணிக்கையில் இருந்த தென் கொரியாவை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளும் இந்தியாவை விட மிகப் பெரும் அளவில் பாதிப்பை பதிவு செய்துள்ளன.
  • ஊரடங்கு காலம் முடிவடையும் மே 3ஆம் தேதிக்குள் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதன் உச்ச நிலையை அடையுமா அல்லது அது எப்போது நடக்கும் என்று இப்போதே கணிக்க முடியாது.
  • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு மருத்துவமனைகளின் எண்ணிக்கை 3.5 மடங்கும், தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கான இடவசதி 3.6 மடங்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: