அரசு ஆர்டர் தந்தால்தான் கைத்தறி பிழைக்கும் - புதுவை நெசவாளர்களின் கூக்குரல்
புதுச்சேரியின் பாரம்பரிய தொழில்களுள் ஒன்றான கைத்தறி நெசவு அதன் அடையாளத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கைத்தறி நெசவாளர்களின் வளர்ச்சிக்காக, 1976ம் ஆண்டு பாண்டெக்ஸ் கூட்டுறவு சங்கம் நிறுவப்பட்டது. இதன் கீழ் 14 முதன்மை கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வந்தன. ஒவ்வொரு சங்கத்திலும் 100 முதல் 200 வரை மொத்தம் 2,000 தறிகள் புதுச்சேரியில் இருந்தன.
இதனால் 10,000க்கும் அதிகமான நெசவாளர்கள் மற்றும் சார்புத் தொழில்களைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 30 ஆயிரம் பேருக்கு அதிகமானோர் நெசவுத் தொழில் மூலமாக பயன் பெற்றுவந்தனர். இவர்கள் உற்பத்தி செய்த கைத்தறி ஆடைகள் தனியார் நிறுவனங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டன.
மேலும் புதுச்சேரி அரசு பண்டிகை நாட்களில் சமூக நலத்துறை மற்றும் ஆதிதிராவிட நலத்துறைகளின் மூலமாக மக்களுக்கு இலவசமாக சேலை மற்றும் வேட்டிகள் கொடுப்பதற்காக 3 லட்சம் துணிகளை நெசவு செய்வதற்கு ஆண்டுதோறும் இந்த சங்கங்களுக்கு ஆர்டர்கள் வாங்கப்பட்டு வந்தன. 2005ம் ஆண்டிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கைத்தறி துணிகளுக்கு பதிலாக வெளி மாநிலங்களில் துணிகள் கொள்முதல் செய்யப்பட்டன. இதனால் நெவாளர்கள் உற்பத்தி செய்த கைத்தறி துணிகளை அரசாங்கம் வாங்குவது படிப் படியாக குறைந்து வந்தது.
தற்போது பொதுமக்களுக்கு இலவச துணி வழங்குவதற்கு பதிலாக நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இதனால் புதுச்சேரி கைத்தறி நெசவாளர்களிடமிருந்து துணி கொள்முதல் முழுவதுமாக நின்றுவிட்டது. இதனால் நெசவாளர்களின் குடும்பங்கள் வேலையின்றி தவித்துவருகின்றன.
காணொளி தயாரிப்பு:நடராஜன் சுந்தர்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: