You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆரே பகுதி மரங்களை வெட்ட உச்ச நீதிமன்றம் தடை
ஆரே பகுதியில் மரங்களை வெட்ட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மும்பையின் ஆரே பகுதியில் உள்ள மரங்களை வெட்ட மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த விவகாரத்தை தானே முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
ஆரே போராட்டம்
மும்பையில் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் அமைப்பதற்காக ஆரே எனும் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை வெட்டும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை முழுவதிலும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்றன.
போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர். ஆரே மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு சனிக்கிழமை பிறப்பிக்கப்பட்டது.
ஆரே காலனியில் உள்ள 2,600 மரங்களை வெட்டக்கூடாது என தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆர்வலர்கள் தாக்கல் செய்திருந்த 4 மனுக்களை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
போராட்டத்தில் இறங்கிய அரசியல் கட்சிகள்
மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்துக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவளித்தன.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா, ஆம் ஆத்மி, சமாஜ்வாடி கட்சி இந்த ஆரேவை காப்போம் ஆகிய கட்சிகள் போராட்டத்தில் களம் இறங்கின.
பா.ஜ.கவுக்கு எதிராக அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் போராட்டத்தில் பங்கேற்றது.
இதுகுறித்து ஆதித்யா தாக்கரே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தொடர் ட்வீட்களில், "மும்பையின் சுற்றுச்சூழல் அமைப்பை அழித்தொழிக்கும் நடவடிக்கை இழிவானது மற்றும் வெட்கக் கேடானது. இதற்கு ஏன் இத்தனை வேகம் காட்ட வேண்டும்? இந்த அதிகாரிகளைப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி காஷ்மீருக்கு அனுப்பி தீவிரவாத முகாம்களை அழிக்க அனுப்ப வேண்டியதுதானே? " என்று குறிப்பிட்டு இருந்தார்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், டெல்லியில் மெட்ரோ ரயிலுக்காக மரங்கள் வெட்டப்பட்டது போன்றதுதான் இதுவும். இருமடங்காக மரங்கள் அந்தப் பகுதியில் நடப்படும் என்றார்.
மேலும் அவர், "உலகின் சிறந்த மெட்ரோ ரயில் சேவைகளில், டெல்லி மெட்ரோவும் ஒன்று. டெல்லி மெட்ரோவில் ஒரு ஸ்டேஷன் அமைப்பதற்கு 25 - 30 மரங்கள் வெட்டப்பட்டன. ஆனால், அதன் பின் ஐந்து மடங்காக மரங்கள் நட்டோம். இப்போது டெல்லி மெட்ரோ சிறப்பான பொதுப் போக்குவரத்து சேவையாக உள்ளது" என்றார்.
தடை
இப்படியான சூழலில் இந்த விவகாரத்தை தானே முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம் மரங்களை வெட்ட தடைவிதித்துள்ளது.
அரசு தரப்பும் இனி மரங்கள் வெட்டப்படாதென உறுதி அளித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்