"ஆதி திராவிடர்களுக்கு தனி காவல் நிலையம் இல்லாதபோது தனி சுடுகாடு ஏன்?" நீதிமன்றம் கேள்வி

வேலூர் விவகாரம்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

வேலூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தில் தலித் ஒருவரின் சடலத்தை பட்டா நிலத்தின் வழியாகக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தனி சுடுகாடு அமைத்துக் கொடுத்திருப்பது அரசே ஜாதியை ஊக்குவிப்பதுபோல இருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த 55 வயதான குப்பன் என்பவர் சாலை விபத்தில் மரணமடைந்தார்.

அவரது உடலை அங்குள்ள மண்ணாற்றங்கரையில் தகனம் செய்யச் செல்லும்போது, தங்களது நிலத்தின் வழியாக எடுத்துச் செல்வதற்கு நிலத்தின் உரிமையாளர் தரப்பு மறுத்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து ஆற்றின் மேல் உள்ள பாலத்திலிருந்து கயிறு கட்டி குப்பனின் சடலத்தை ஆற்றுக்குள் இறக்கினர். கீழே இருந்தவர்கள் சடலத்தைப் பெற்றுக் கொண்டு, மண்ணாற்றங் கரையில் குப்பனுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தனர். குப்பனின் சடலம் இறக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் கடந்த புதன்கிழமையன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின.

ஊடகங்களில் வெளியான இது தொடர்பான செய்திகளை மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வின் முன்பாக கொண்டுவந்தார்.

வேலூர்

இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்காக ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு விளக்கம்கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட நிர்வாகம், நாராயணபுரம் ஊராட்சி பணந்தோப்பு பகுதியில் அரசுக்குச் சொந்தமாக உள்ள 3.16 ஏக்கர் நிலத்தில், 50 சென்ட் நிலத்தை ஆதி திராவிடர்களின் இடுகாட்டிற்காக ஒதுக்கி உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நாராயணபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கென தனி மயானம் அமைக்கப்பட்டுள்ளதாக தாசில்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

தமிழகத்தில் ஆதிதிராவிடர்களுக்கென தனியாக மருத்துவமனைகளோ, அரசு அலுவலகங்களோ, காவல் நிலையங்களோ இல்லாத நிலையில் அவர்களுக்கு என தனியாக மயானம் அமைத்துக் கொடுப்பதென்பது அரசே ஜாதிப் பிரிவினையை ஊக்குவிப்பது போல் உள்ளது என நீதிபதிகள் கூறினர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

தெருக்களில் இருந்த ஜாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கும்போது, 'ஆதிதிராவிடர் நலப்பள்ளி' என்ற பெயர்களை நீக்காதது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பிறகு இந்த விவகாரத்தில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது, அரசு நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பனவற்றை மனுவாகத் தாக்கல்செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: