You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுக்ரேன் - ரஷ்யா போர்: போலாந்து நாட்டை அடைந்த பல்லாயிரம் இந்தியர்களின் நிலை என்ன?
- எழுதியவர், திவ்யா ஆர்யா மற்றும் நேஹா ஷர்மா
- பதவி, பிபிசி நிருபர், யுக்ரேன் - போலாந்து எல்லையில் இருந்து
- பிரசுரிக்கப்பட்டது
ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதில், நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த போர் காரணமாக மனிதர்களுக்கு அதிகப்படியான துயரம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பின் கூற்றுப்படி, வெறும் 10 நாட்களில் 15 லட்சம் மக்கள் யுக்ரேனை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இரண்டாம் உலகப் போருக்கு பின் அகதிகள் நெருக்கடியை வேகமாக அதிகரித்த போராக இந்த சூழ்நிலை விவரிக்கப்படுகின்றது. பெரும்பாலான அகதிகள் போலாந்து நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
போலாந்து நாட்டின் எல்லை பாதுகாப்பு படையினரின் தகவல்படி, பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 8 வரை, 9 லட்சத்து 22 ஆயிரத்து 400 அகதிகள் இங்கு வந்தடைந்துள்ளனர்.
இந்த லட்சக்கணக்கான அகதிகளில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களும் உள்ளனர். யுக்ரேன் எல்லையில் இருந்தும், அதனை சுற்றியுள்ள பகுதியிலும் இருந்து, இந்திய மாணவர்களை வெளியேற்றி, தாயகம் அழைத்து வர இந்திய அரசு முயற்சி செய்துவருகிறது. மக்கள் வெளியேற போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா மீண்டும் அறிவித்துள்ளது.
ஆனால், இந்த பயணம் முற்றிலும் அபாயகரமான, வித்தியாசமான அனுபவமாக, யுக்ரேனின் பல்வேறு நகரங்களிலிருந்து போலாந்து எல்லைக்கு செல்லும் இந்திய மாணவர்களுக்கு அமைந்துள்ளது.
யுக்ரேன் - போலாந்து எல்லைக்கு அருகில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாமில், பிபிசி நிருபர்களான திவ்யா ஆர்யாவும், நேஹா ஷர்மாவும் ஓர் இரவையும், ஓர் பகலையும் கழித்தனர். அங்கு இந்த மீட்பு பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்று மாணவர்களும், தன்னார்வலர்களும், அரசு அதிகாரிகளும் அறிந்துகொண்டனர்.
அத்தகைய நிகழ்வுகளில் நடந்த அதிர்ச்சி, அச்சம், நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை கூறுவதே இந்த சிறப்பு செய்தியறிக்கையின் நோக்கம்.
இரவு மூன்று மணியளவில் இந்த சூழ்நிலை எப்படி இருந்தது?
இந்த நிவாரண முகாமில், எப்படியோ யுக்ரேனில் இருந்து போலாந்துக்கு தப்பிச் சென்ற ஒரு மாணவரைச் சந்தித்தோம். ஆனால், இத்தகைய சூழ்நிலை காரணமாக அவர்கள் விவரிக்க முடியாத அளவு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மாணவரின் நிலையும் அப்படித்தான் இருந்தது. நிவாரண முகாமில் இருந்த தன்னார்வலர்கள் அவரிடம் பேச முயன்றனர்.
பாப்ஸ் (BAPS) அமைப்புடன் தொடர்புடைய தன்னார்வலரான அமித் படேல் கூறுகையில், "அவரது உடல் முழுவதும் நடுங்கியது, இரண்டு நிமிடங்களுக்கு என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. தண்ணீர் கொடுத்தோம். அவர் தண்ணீர் குடிக்கும் நிலையில் இல்லை. அவர் உண்மையில் நடுங்கினார். நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம். நானும் விராஜும் மருத்துவக் குழுவை அழைக்கச் சென்றோம். அவர்கள் சில பரிசோதனைகள் செய்தனர். நாங்கள் தொடர்பற்று இருந்தோம். அதனால் தொடர்பை ஏற்படுத்துவதுதான் எங்களின் முதல் முயற்சியாக இருந்தது. நாங்கள் ஒரு பேனாவை அவர் கையில் கொடுத்தோம். ஹை ஃபைவ் செய்தோம். அப்போது அவர் திலளிக்க ஆரம்பித்தார். அப்போது அவருக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது,'' என்று தெரிவித்தார்.
அமித் மற்றும் அவரது சக ஊழியர்களின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, இந்த மாணவர்கள் தங்கள் வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை எழுதும் நிலையை அடைந்தனர்.
இதற்குப் பிறகு, அவரை அவரது சகோதரிடம் பேச வைத்தனர் . இதனுடன், இந்த மாணவர், போரின் அதிர்ச்சியில் இருந்த அவருக்கு ஒரு சிறிய வெற்றி கிடைத்தது. "நாங்கள் இங்கிருந்து செல்லும்போது, எங்களுக்கு திருப்தி கிடைக்கும்... என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது." என்று கூறுகிறார் அமித்.
காலை ஐந்து மணிக்கு நிலைமை எவ்வாறு இருந்தது?
காலை நேரம். இந்திய மாணவர்கள் இரவு முழுவதும் வந்துகொண்டே இருந்தனர். தன்னார்வலர்கள் ஏதாவது ஒரு வகையில் மாணவர்களுக்கு உதவ முயற்சி செய்துகொண்டிருந்தனர்.
போலாந்து நகரமான ஜெஷுஃப்பில் ( Jeshuf) அமைந்துள்ள தங்கும் விடுதியின் கூட்ட அரங்கம், இரவோடு இரவாக நிவாரண முகாமாக மாற்றப்பட்டுள்ளது. குளிரான பகுதியில் கதகதப்பான அறை, நல்ல உணவு மற்றும் சுத்தமான கழிப்பறை வசதிகளும் இருந்தன.
போர் ஆபத்தில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பாதுகாப்பான இடமாக அது இருந்தது.
காலை பத்து மணிக்கு எப்படி இருக்கிறது?
விடிந்ததும் இந்த நிவாரண முகாமில் பணிகளின் வேகம் கணிசமாக அதிகரித்துள்ளது. நிவாரண முகாமாக மாற்றப்பட்டுள்ள இந்த தங்கும் விடுதியின் நீண்ட மேஜைகளில் பலர் மடிக்கணினியுடன் அமர்ந்துள்ளனர்.
இந்த நிவாரண முகாமை நடத்துவதற்காக ஐரோப்பாவின் 11 நாடுகளில் இருந்து தன்னார்வலர்கள் வந்துள்ளனர். இங்கு வசிப்பதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசும், உணவுக்கான செலவை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஏற்றுக் கொள்கின்றன.
இப்படிப் பல முகங்கள் இங்கு உலா வந்து கொண்டிருந்தன. அவர்களின் முகங்கள் வீட்டிற்குச் செல்லும் நம்பிக்கையில் சிரித்தன. ஆனால் இந்தச் சிரித்த முகங்களுக்குப் பின்னால் அச்சமூட்டும் கதைகள் ஒளிந்திருக்கின்றன.
இங்குள்ள மாணவர்களிடம் பேசும்போது பலரும் ஒரு புகாரை தெரிவித்தனர்.
நிவாரண முகாமில் இருக்கும் மாணவி அஸ்வினி கூறும்போது, "நாங்கள் எல்லாரும் சுயமாக வந்துள்ளோம், யாரும் எங்களுக்கு உதவவில்லை. எல்லையில் யாராவது இருந்தால் சரி, இல்லையென்றால், நீங்களே வர வேண்டும். முகவரியை மட்டும் கொடுத்தார். தூதரகம் இருக்கிறது. இதோ விமானம் கிடைத்தது. இங்கே நாங்கள் தூங்க வேண்டும், இங்கே இருக்க வேண்டும். எல்லை வரை எங்களுக்கு எதுவும் இல்லை, எல்லை வரை எங்கும் தூதரகம் இல்லை. எல்லை வரை அது எங்களுக்கு தேவைப்பட்டது," என்கிறார்.
பதுங்கு குழிக்குள் மறைந்திருக்கும் மாணவர்களின் நிலை
இதுபோன்ற பல மாணவர்களும் இந்த நிவாரண முகாமை அடைந்துள்ளனர். அவர்கள் குண்டுவெடிப்பைத் தவிர்க்க பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்தனர். கார்கிவ் குண்டுவெடிப்பில் இருந்து தப்பிக்க பதுங்கு குழிக்குள் பதுங்கியிருந்த மாணவர்களில் கேரளாவைச் சேர்ந்த இந்த மாணவர்களும் அடங்குவர்.
கார்கிவ் நகரில் உள்ள பதுங்கு குழிக்குள் பதுங்கியிருந்த மாணவர் கோபி கிருஷ்ணன் கூறுகையில், "முழுவதுமாக ஏழு நாட்கள் பதுங்கு குழியில் இருந்தோம். பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பதுங்கு குழிகளில் தூசி நிறைந்து இருந்தது. குளிர்காலத்தில் வெப்பம் பெற வழி இல்லை. பனி பெய்து கொண்டிருந்தது. வெளியே வெப்பநிலை மைனஸ் இரண்டு டிகிரியாக இருந்தது," என்கிறார்.
தாக்குதல் நிறுத்தப்பட்டபோது இந்த மாணவர்கள் தங்கள் பதுங்கு குழிகளில் இருந்து வெளியே வந்தனர். ஆனால் அதன் பிறகு நகரத்தை விட்டு வெளியேறுவது அவர்களுக்கு ஒரு புதிய சவாலாக இருந்தது.
கார்கிவை விட்டு வெளியேறும் குறித்து கோபி கிருஷ்ணன் கூறுகையில், "எங்களுக்கு முன் ஐந்து ரயில்கள் சென்றன. ஆனால் எங்களால் உள்ளே செல்ல முடியவில்லை. யுக்ரேனியர்கள் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை" என்கிறார்.
இங்கு வந்திருந்த ஷாஹீன் ஷெரீப் கூறும்போது, "ரயில் காவலர்கள் எங்களை அடிக்கிறார்கள். யாராவது ரயிலுக்குள் நுழைந்தால், அவரை வெளியே எட்டி உதைத்து கொன்று இருப்பார்கள். நாங்கள் ரயில் நிலையத்தில் இருந்தபோது, வெளியில் ஏவுகணைகள் வந்து கொண்டிருந்தன. அது மிகவும் அதிகமாக இருந்தது. பயமாக இருக்கிறது."
கோபி கிருஷ்ணன் கூறுகையில், "எங்களுக்கு பி.டி.எஸ்.டி (அதிர்ச்சிக்கு பிந்தைய மன அழுத்தம்) உள்ளது. சத்தம் கேட்கும் போது, இதயத்துடிப்பு அதிகரித்து, மூச்சு திணறல் ஏற்படுகிறது. பூம் போன்ற ஒலியைக் கேட்டு நாங்கள் மிகவும் அச்சம் அடைந்து இருக்கிறோம் ," என்கிறார் ஷெரீப்.
19 வயதான பால குமார் மேற்கொண்ட நீண்ட பயணம்
யுக்ரேனின் வீவ் நகரிலிருந்து வெளியே வந்த 19 வயது கால்நடை அறிவியல் மாணவர் பால குமார், வீவ் நகரை விட்டு வெளியேறியவுடன் நடந்து கொண்டே இருந்திருக்கிறார்.
அவர் மூன்று வெவ்வேறு எல்லைகளிலிருந்து கால் நடையாக வெளியேற முயன்றார். இதற்குப் பிறகு, யுக்ரேன் அதிகாரிகளின் உதவியுடன் அவர் இறுதியாக வெளியேற முடிந்தது.
"சில ஊடகங்களும் சமூக ஊடகங்களும் அவர்களை இனவெறியர் என்று அழைக்கின்றன. ஆனால் இது முழுவதும் உண்மையல்ல. யுக்ரேன் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி, தங்கள் உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள், ஆனால் நம்பிக்கை உள்ளது."
எங்கள் நாடு இந்தியா. எங்களுக்கு ஒரு பாதுகாப்பான வீடு உள்ளது. அங்கு மக்கள் நமக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்."
யுக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாட்டு அரசுடனும் பேசி வருவதாக இந்தியா கூறுகிறது. இதனால் அவர்கள் தாங்களாகவே அமைதியான அணுகுமுறை அடையாவிட்டாலும், மாணவர்கள் யுக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகளிடமிருந்து உதவி பெற முடியும்.
மாலை நான்கு மணியளவில் திடீரென இங்கு காட்சி மாறிவிட்டது. உற்சாகம் எழுகிறது; புத்துணர்ச்சி பிறக்கிறது, மாணவர்கள் அழைக்கப்படுகிறார்கள், அதனால் அவர்கள் தங்கள் பொருட்களைக் கட்டிக்கொண்டு, அவர்களுக்காக பேருந்துகள் காத்திருக்கும் இடத்திற்குச் செல்கிறார்கள்.
வரிசையில் நிற்கும் இந்த மாணவர்கள் முன்னேறத் துடிக்கிறார்கள். ஆனால் பலரும் தங்கி விட்டனர். யாரோ ஒருவரின் புத்தகங்கள், யாரோ ஒருவரின் கார், அனைவரின் அனைவரது படிப்பின் எதிர்காலம். இப்போது அவர்களின் வாழ்க்கைப் பாதையை எந்த திசையில் திருப்ப வேண்டும்?
திரும்பி வர முடியுமா? இப்படி இன்னும் பல கேள்விகள் இருக்கும். ஆனால் இது அவர்களுக்கான நேரம் இல்லை. இன்று அவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும்.
பிற செய்திகள்:
- யுக்ரேன்: மகப்பேறு, குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா குண்டுவீச்சு
- இஸ்லாமியரின் நிலத்துக்குள் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்க முயற்சி - மக்கள் கடும் எதிர்ப்பு
- ராமேஸ்வரத்தில் டாட்டூ போட வந்ததை போல் நடித்து இளைஞரை கடத்திய கும்பல்: என்ன நடந்தது?
- யுக்ரேன் போரை திரைக்குப் பின்னால் இருந்து இயக்கும் அதிபரின் மனைவி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்