ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் குறித்து செளதி அரேபியா மெளனம் காப்பதன் ரகசியம் என்ன?
1996ல் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்தபோது, செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் தாலிபன்களை முதலில் அங்கீகரித்தன.
இப்போது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபன் கைப்பற்றிய பிறகு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் அடிமை சங்கிலிகளை உடைத்துவிட்டதாக கூறினார்.
மறுபுறம், ஐக்கிய அரபு அமீரகம் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனிக்கு அடைக்கலம் கொடுத்தது. ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம், "மனிதாபிமான அடிப்படையில் அதிபர் கனியையும் அவரது குடும்பத்தினரையும் தங்கள் நாட்டிற்கு வரவேற்றதாக" ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதுதவிர தாலிபனுடன் தொடர்புடைய எந்த ஒரு பெரிய அறிக்கையையும் அது வெளியிடவில்லை.
ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து தூதாண்மை அதிகாரிகளும் பாதுகாப்பாக ரியாத்துக்கு திரும்பியுள்ளதாக செளதி அரேபியா அரசு கூறியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலவும் உறுதியற்ற சூழலை கருத்தில்கொண்டு வெளியுறவு அமைச்சகம் இந்த முடிவை எடுத்ததாக, செளதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ செய்தி முகமையான செளதி பிரஸ் ஏஜென்சி தெரிவிக்கிறது.
ஆனால் இது தவிர, செளதி அரேபியா முழு விஷயத்திலும் மெளனம் காக்கிறது.
ஆப்கன் நிகழ்வுகள் நடந்து சுமார் ஒரு வாரம் கழித்து, திங்களன்று, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, செளதி வெளியுறவு அமைச்சரிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது ஆப்கானிஸ்தான் விவகாரம் விவாதிக்கப்பட்டது. ஆனால் தாலிபன்கள் குறித்து இரு தரப்பிலிருந்தும் எதுவும் கூறப்படவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்