மாரடோனா உடலுடன் 'தம்ஸ் அப்' படம்: மன்னிப்பு கேட்ட இறுதிச்சடங்கு ஊழியர்

Two people walk past a mural of Maradona

பட மூலாதாரம், Reuters

பிரசுரிக்கப்பட்டது

மறைந்த கால்பந்தாட்ட வீரர் டியேகோ மாரடோனா உடலைக் கையாண்ட, இறுதிச் சடங்கு ஊழியர்களில் ஒருவர், மாரடோனா உடல் வைக்கப்பட்டிருந்த சவப் பெட்டி திறந்தநிலையில் இருக்கும்போது, தன் மகன் 'தம்ஸ் அப்' சமிக்ஞையைக் காட்டி புகைப்படம் எடுத்ததற்கு மாரடோனாவின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

க்ளாடியோ ஃபெர்னாண்டஸ் எனும் அந்த ஊழியர் மற்றும் அவரது மகன் மாரடோனாவின் இறந்த உடலுடன் எடுத்த படமும், இன்னொரு இறுதிச்சடங்கு ஊழியர் மாரடோனாவின் உடலுடன் தனியாக எடுத்த படமும் இணையத்தில் வைரலாகப் பரவின.

கடந்த புதன்கிழமை, அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் டியேகோ மாரடோனா, பியூனஸ் அயர்ஸ் நகரத்துக்கு அருகில், டிக்ரே என்னும் இடத்தில் உள்ள தன் வீட்டிலேயே காலமானார்.

மாரடோனா, கடுமையான இதய செயலிழப்பால் இறந்ததாக, அர்ஜென்டினா ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த நவம்பர் மாதத்திலேயே, மாரடோனாவுக்கு மூளையில் ஒரு ரத்தக் கட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

அதோடு மது பழக்கத்தைக் குறைப்பதற்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்தார். மது மற்றும் போதைப் பழக்கங்களால், மாரடோனாவுக்கு உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மாரடோனாவின் உடலை நல்ல முறையில் அடக்கம் செய்யும் வேலையை, செபிலியோஸ் பினிபர் என்கிற இறுதிச்சடங்கு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது.

இந்த நிறுவனமோ, மாரடோனாவின் உடலைக் கையாள, அவர்கள் நிறுவனத்தைச் சேராத மூன்று வெளி ஊழியர்களை அழைத்து வந்தது.

மாரடோனாவின் உடலைக் கையாண்டவர்களில் ஒருவரான க்ளாடியோ ஃபெர்னாண்டஸ், மாரடோனாவின் உடலுக்கு அருகில் நின்றுகொண்டு, தன் மகனோடு ஒரு படம் எடுத்துக் கொண்டார். இவரின் மகன் புகைப்படத்தில் 'தம்ஸ் அப்' சமிக்ஞையைக் காட்டுகிறார்.

மாரடோனாவின் உடல், அர்ஜென்டினா அதிபர் மாளிகையில், மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டிருந்த அதே நேரத்தில், க்ளாடியோ ஃபெர்னாண்டஸ், தன் மகனோடு தம்ஸ் அப் சமிக்ஞையோடு இருக்கும் படம் இணையதளத்தில் வைரலானது.

இதைப் பார்த்தபின், "மக்கள் கொதித்துப் போகிறார்கள். இந்தப் படத்துக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்," என்றார் மாரடோனாவின் வழக்கறிஞர் மடியால் மார்லா.

பிரச்சனையைப் புரிந்து கொண்ட க்ளாடியா ஃபெர்னாண்டஸ், ரேடியோ-10 என்ற வானொலியிடம் வெள்ளிக்கிழமை பேசினார்.

The casket of Argentinean football legend Diego Maradona

பட மூலாதாரம், EPA

ஏதோ சட்டெனத் தோன்றியதால் படம் எடுத்தேன், எல்லா குழந்தைகளைப் போல என் மகன், தம்ஸ் அப் சமிக்ஞையைக் காட்டிவிட்டான். அதைப் படமும் எடுத்துவிட்டார்கள். பலரையும் இந்த படம் பாதித்து இருக்கிறது. அவர்கள் இதை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் எனக் கூறினார் க்ளாடியா ஃபெர்னாண்டஸ்.

தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் கூறியிருக்கிறார் க்ளாடியா.

இந்த புகைப்படம் இணைய தளத்தில் வைரலானதால், எங்கள் நிறுவனம் பெரிதும் வருத்தத்துக்கு உள்ளாகி இருக்கிறது என செபிலியோஸ் பினிபர் நிறுவனத்தின் மேலாளர், மடியஸ் பிகான், டிஎன் செய்தி நிறுவனத்திடம் கூறி இருக்கிறார்.

அதோடு, மாரடோனா குடும்பத்தில் பலரின் இறுதிச் சடங்கை, தங்கள் நிறுவனம் ஏற்று நடத்தி இருப்பதாகவும், மாரடோனா குடும்பம் தங்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாகவும், ஆகையால்தான் தங்களை இந்தப் புகைப்படம் அதிகம் பாதிக்கிறது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :