ஜம்மு காஷ்மீரில் உலகின் உயரமான ரயில்வே மேம்பாலத்தில் ரயிலை இயக்கி சோதனை
காஷ்மீரில் உள்ள உலகின் உயரமான செனாப் ரயில்வே பாலத்தில் சோதனை ரயில் ஓட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
இந்த பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வரும் போது, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியை இந்தியாவின் பிற பகுதிகளுடன் ரயில் வழியாக இணைக்க முடியும்.
குறிப்பாக செயல்பாட்டிலுள்ள பாராமுல்லா - ஸ்ரீநகர் - சங்கல்டான் ரயில் பாதையை உத்தம்பூர் வரை நீட்டிக்க முடியும்.
இதன் மூலமாக இந்தியாவின் தென்முனையிலுள்ள கன்னியாகுமரி முதல் காஷ்மீரின் பாராமுல்லா வரையிலும் ரயில்களை இயக்க முடியும்.
தற்போது கன்னியாகுமரி முதல் ஜம்முவில் உள்ள உத்தம்பூர் வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த இணைப்பை செனாப் ரயில்வே பாலம் சாத்தியமாக்கும் என ரயில்வேதுறை அறிவித்து இருந்தது.
ரயில்வே அமைச்சகத்தின் தரவுகளின்படி, செனாப் நதிக்கு மேல், 359 மீட்டர் உயரத்தில் இந்த ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது பாரிஸிலுள்ள ஈஃபிள் கோபுரத்தை விட உயரமானது என இந்தியன் ரயில்வே அழைக்கிறது.
மேலும் உலகின் மிக உயரமான ரயில்வே மேம்பாலம் என்று இந்த பாலம் அழைக்கப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



