விஜயகாந்த் உடலுக்கு விஜய் அஞ்சலி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் நேற்று காலை சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் விஜயகாந்தின் உடல், நேற்று கோயம்பேட்டில் உள்ள அவரது தேமுதிக கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.
காலையில் இருந்தே திரையுலக பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நேற்று இரவு 10:40 மணியளவில், விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கோயம்பேடு தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு வந்தார் நடிகர் விஜய்.
விஜயகாந்தின் உடலருகே வந்த விஜய், அஞ்சலி செலுத்திய பிறகு, உடல் இருக்கும் பெட்டியின் மீது கைவைத்தவாறு சற்று நேரம் கலங்கி நின்றார். பின்னர் பிரேமலதா விஜயகாந்திடம் பேசியவர், அங்கிருந்து கிளம்பும் முன் மீண்டும் சில நொடிகள் நின்று விஜயகாந்தின் உடலைப் பார்த்துவிட்டு சென்றார்.
விஜயகாந்த்- விஜய் இடையேயான பந்தம்
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 1993இல் வெளியான திரைப்படம் 'செந்தூரப் பாண்டி'. இந்த படத்தில் விஜய்க்கு அண்ணனாக, கவுரவ வேடத்தில் தோன்றியிருப்பர் நடிகர் விஜயகாந்த். விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் வேண்டுகோளை ஏற்று அதில் கவுரவ தோற்றத்தில் நடித்திருப்பார் நடிகர் விஜயகாந்த்.
விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய 'சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படத்தை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



