காணொளி: கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் மக்கள் சந்திப்பு கூட்டம் - விஜய் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, கரூர் சம்பவத்துக்கு பிறகு தவெகவின் முதல் மக்கள் சந்திப்புக் கூட்டம்- விஜய் பேசியது என்ன?
காணொளி: கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் மக்கள் சந்திப்பு கூட்டம் - விஜய் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) நடைபெற்றது. இதில் பேசிய விஜய், தாங்கள் ஆட்சிக்கு வரும்போது செய்ய விரும்பும் விஷயங்கள் என்ன என்பதைக் குறிப்பிட்டார். மேலும், தங்கள் ஆதரவாளர்கள் மீதான விமர்சனத்துக்கும் அவர் பதிலளித்துள்ளார்.

மேலும், திமுக மீது பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். அதுகுறித்து பதிலளித்த திமுக மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், "திமுகவை குறை சொல்வதற்கு விஜய்க்கு தகுதி இல்லை" என்றார். விஜயின் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு டிசம்பர் 4 அன்று சேலம் மாவட்டத்தில் விஜய் பங்கேற்கும் பரப்புரைக் கூட்டத்திற்கு அனுமதி கோரி காவல்துறையில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தவெக தரப்பில் அளிக்கப்பட்ட மனுவை கவனமாகப் பரிசீலித்ததாகக் கூறியுள்ள டவுன் சரக காவல் உதவி ஆணையாளர் சரவணன், சில காரணங்களால் அனுமதி மறுக்கப்படுவதாக கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுமார் 2,000 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில் மக்களை சந்தித்த விஜய், காஞ்சி மக்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேசி தன் உரையைத் தொடங்கினார்.

"வாலாஜாபத் அருகே உள்ள அவலூர் ஏரி பாலாறை விட உயரமாக இருப்பதால் ஆற்றுத் தண்ணீர் ஏரிக்குப் போக முடியவில்லை. தடுப்பணை கட்டுவதன் மூலம் விவசாயம் சிறப்பாக நடக்கும். இதற்காக எத்தனை ஆண்டு மக்கள் போராட வேண்டும்?" என்று விஜய் கேள்வியெழுப்பினார்.

மேலும், "பரந்தூர் விமான நிலையப் பிரச்னையில் நாங்கள் விவசாயிகளின் பக்கம் மட்டுமே நிற்போம்" என்று கூறிய அவர், புகழ்பெற்ற காஞ்சிப் பட்டு நெய்பவர்களின் நிலை மோசமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

60 ஆண்டுகளாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதையும் விமர்சித்த அவர், அரசால் அதற்கு ஒரு இடத்தை ஒதுக்க முடியாதா என்ற கேள்வியையும் எழுப்பினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு