புயல் உருவாகிறதா? - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை?

பட மூலாதாரம், imd.gov.in
வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 27ஆம் தேதி) வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
''தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்று மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால், தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியுள்ளது.'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
''மேற்கு-வடமேற்கு திசையில் இது மெதுவாக நகர்ந்து, நாளை (25-10-2025) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பிறகு, வருகின்ற 26-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகின்ற 27-ம் தேதி காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக்கூடும்'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வரும் 27ம் தேதி சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது என்றும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் (தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும்) மழை பெய்துள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 15 செ.மீ மழை பதிவாகியது.
நெல்லையில் நாலுமுக்கு பகுதியில் 12 செ.மீ, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 10 செ.மீ மழை பதிவாகியது. கன்னியாகுமரி பேச்சிப்பாறையிலும் சென்னை மேடவாக்கத்திலும் தலா 9 செ.மீ மழை பெய்தது.

பட மூலாதாரம், Getty Images
தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடகிழக்கு திசையில் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று காலை 5.30 மணிக்கு கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் மேல் நிலவுகிறது.
அதாவது லட்சத்தீவிலிருந்து 340 கி.மீ வடமேற்கிலும், கோவாவிலிருந்து 430 கி.மீ தென்மேற்கிலும் கர்நாடகாவிலிருந்து 480 கி.மீ மேற்கிலும் நிலை கொண்டுள்ளது.
இது அரபிக் கடலில் மேலும் வடக்கு வடகிழக்கு திசையில் அடுத்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையிலிருந்து 55 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், இரவு முதல் வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வெளியேற்றப்படும் நீரும் அதிகரித்துள்ளது.
கடந்த 20-ம் தேதி பிற்பகலில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் வரத்து முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
நேற்று மாலை காவிரியில் வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிப்பதால் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர், இரவு 11.00 மணி முதல் 45,000 கன அடியிலிருந்து 55,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 22,500 கன அடியும், எல்லிஸ் உபரி (16 கண் மதகு) வழியாக 32,500 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































