'பதிலடிக்குக் காத்திருங்கள்' என இஸ்ரேலை எச்சரித்த ஹெஸ்பொலா தலைவர் - காணொளி
இஸ்ரேல் உடனான தங்களின் போர் புதிய கட்டத்தை அடைந்திருப்பதாக கூறியுள்ள ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, தங்களின் தவிர்க்க முடியாத பதிலடிக்காக எதிரி காத்திருக்க வேண்டும் என இஸ்ரேலை குறிப்பிட்டு கூறியுள்ளார்.
லெபனான் தலைநர் பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹெஸ்பொலா தளபதி ஃபாவுத் ஷுக்கர் கொல்லப்பட்டார். இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் குன்றில் கடந்த ஜூலை 27ஆம் தேதி நிகழ்ந்த ராக்கெட் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் ஃபாவுத் இருப்பதாகவும் அதற்கு பதிலடியாகவே வான்வெளி தாக்குதலை நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
ஹெஸ்பொலா அமைப்பு கடந்த 20 ஆண்டுகளில் சந்தித்த மிகப்பெரிய வீழ்ச்சியாக இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது. உயிரிழந்த ஃபாவுத் ஷுக்கர், ஹெஸ்பொலாவின் தலைவரும் செல்வாக்கு மிகுந்த நபராக அறியப்படுபவருமான சயீத் ஹசன் நஸ்ரல்லாவின் நெருங்கிய ஆலோசகர் என்று கூறப்படுகிறது.
பெய்ரூட்டில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடந்த ஷுக்கரின் இரங்கல் நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். நீண்ட காலமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவரும் ஹசன் நஸ்ரல்லா தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார்.
அப்போது அவர், "நான் உரையாற்ற விரும்பவில்லை. ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் கூற விரும்புகிறேன். எதிரியும் எதிரிக்கு பின்னால் இருப்பவர்களும் எங்களின் தவிர்க்க முடியாத பதிலடிக்காக காத்திருக்க வேண்டும்," என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



