You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆந்திரா மக்களுக்கு வாழ்வளிக்கும் மாம்பழ சீசன் - நூற்றுக்கணக்கான மாம்பழங்கள் ‘மேங்கோ ஜெல்லி’ ஆவது எப்படி?
நீங்கள் மாம்பழ பிரியராக இருந்தால் நிச்சயம் மேங்கோ ஜெல்லிகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். மாம்பழ சீசனில் கலைகட்டும் இந்த இனிப்பு பண்டத்தின் தயாரிப்பு எப்படி நடக்கிறது தெரியுமா?
மேங்கோ ஜெல்லி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கட்டாரி சுரேஷ் இதுகுறித்து கூறும்போது, ”நாங்கள் மாம்பழங்களை வாங்கி அவற்றைப் பழுக்க வைக்கிறோம். பிறகு அதன் முனைப் பகுதிகளை வெட்டிவிட்டு, தண்ணீரில் நன்கு சுத்தம் செய்கிறோம். பின் அதைப் பிழிந்து, சாறு எடுத்து அதில் சர்க்கரையை சேர்க்கிறோம். அதன்பின் இந்த கலவையை அப்படியே எடுத்து, பனை ஓலைகளால் ஆன விரிப்புகளில் பரப்பி, வெயிலில் உலர்த்துகிறோம். இந்த மாம்பழ கலவையை 8 நாள் வரை வெயிலில் உலர்த்த வேண்டும். 9ஆம் நாள் அதைப் பல துண்டுகளாக வெட்டி எடுத்துவிடுவோம்.” என்று விவரிக்கிறார்.
2 -3 மாதங்கள் வரை நீடிக்கும் மாம்பழ சீசன்களின்போது, இந்த மேங்கோ ஜெல்லி தயாரிப்பானது இப்பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களுக்குச் சிறந்த வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்த மேங்கோ ஜெல்லியை ஆந்திர மக்கள் ’பூதரேகுலு’ என்று அழைக்கின்றனர்.
”தயாரிக்கப்படும் மாம்பழ கலவையை 8 நாட்கள் வெயிலில் உலர்த்தி, வெட்டி எடுக்க வேண்டும். அந்தத் துண்டுகளை அடுத்த 3 நாட்களுக்கு மீண்டும் வெயிலில் உலர்த்த வேண்டும். அந்த காய்ந்த மாம்பழ கலவை துண்டுகள்தான் ‘மேங்கோ ஜெல்லி’. இதை நாங்கள் வெவ்வேறு எடை அளவுகளில் விற்பனை செய்கிறோம்.” என்று பிபிசியிடம் குறிப்பிடுகிறார் மேங்கோ ஜெல்லி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மற்றொரு பெண்ணான கட்டாரி அனந்தலக்ஷ்மி.
ஆத்ரேயபுரத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இந்த ‘மேங்கோ ஜெல்லிகள்’ தயாரிக்கப்படுகின்றன. பூதரேகுலு என்று பரவலாக அறியப்படும் இந்தப் பண்டம், கிழக்கு கோதாவரியில் உள்ள பிற கிராமங்களிலும் தயாரிக்கப்படுகிறது. அதேபோல் இந்த மேங்கோ ஜெல்லி பல ஊர்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்