டெல்லியில் வரலாறு காணாத நிகழ்வு - மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக முதல்வர் போராட்டம்

காணொளிக் குறிப்பு, டெல்லியில் வரலாறு காணாத நிகழ்வு - மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக முதல்வர் போராட்டம்
டெல்லியில் வரலாறு காணாத நிகழ்வு - மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக முதல்வர் போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது

கர்நாடகாவுக்கு போதிய நிதி ஆதாரங்களை மத்திய அரசு வழங்கவில்லை எனக்கூறி அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் கர்நாடக அரசு போராட்டம் நடத்தியது. டெல்லி இதுவரை பார்த்திராத சம்பவம் இது. கர்நாடகாவைத் தொடர்ந்து கேரள மாநில அரசும் வியாழக்கிழமை தலைநகர் டெல்லியில் போராட்டம் அறிவித்துள்ளது

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சூழலில் இரு மாநில அரசுகளும் அடுத்தடுத்து போராட்டத்தில் இறங்கியிருப்பது அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

என்ன நடக்கிறது?

டெல்லியில் கர்நாடக முதல்வர் போராட்டம்

வரி வருவாயை பங்கீடு செய்வதில் தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து சலோ டெல்லி – டெல்லி புறப்படுங்கள் என்கிற முழக்கத்துடன் கர்நாடக மாநில காங்கிரஸ் போராட்டத்தை அறிவித்தது. இதற்காக பல்வேறு பிரசாரங்களும் செயப்பட்டன.

புதன்கிழமை டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார், அமைச்சர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பங்கேற்றனர்.  

செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார், கர்நாடகாவுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றார்

முன்னதாக, செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கர்நடக முதலமைச்சர் சித்தராமையா, "வரி விநியோகத்தில் கர்நாடகாவுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துள்ளது. அதிக வரியை வழங்கும் கர்நாடகாவுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் குறைவாக வரி வழங்கும் வட‌ இந்திய மாநிலங்களுக்கு நிதியை வாரி வழங்கியுள்ளது. வட இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, மத்திய அரசு தென்னிந்திய மாநிலங்களை மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. கன்னடியர்களுக்கு எதிராக செயல்படுகிறது" என பங்கிரமாக குற்றம்சாட்டினார்.

கர்நாடக முதல்வர் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

நிதிப் பங்கீட்டில் என்ன பிரச்னை?

 நிதி ஆதாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான விதிமுறைகள் தங்களுக்கு போதுமான நிதி கிடைக்காத வகையில் 14 மற்றும் 15 வது நிதிக் கமிஷன்களில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்கள் கருதுகின்றன.

வருமான வரி, கார்பரேட் வரி, ஜிஎஸ்டி, டீசல், பெட்ரோல், செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் போன்ற வரிகளை மாநிலங்களிடம் இருந்து மத்திய அரசு நேரடியாக வசூலிக்கும் தொகை அதிகமாக இருக்கிறது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் தொகை மிகவும் குறைவு என மாநில அரசுகள் குற்றம்சாட்டுகின்றன. 

இரண்டு நிதிக் கமிஷன்களுக்கு இடையில், மத்திய அரசிடம் இருந்து கர்நாடகா பெறும் நிதியின் பங்கு 4.71 சதவீதத்திலிருந்து 3.64 சதவீதமாகக் குறைந்துள்ளது என கர்நாடக அரசு கூறுகிறது. 

இதுதவிர, கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் திங்கள்கிழமை அம்மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.

மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரியில், 10 வது நிதிக்குழு காலத்தில் கேரளாவின் பங்கு 3.87 சதவீதமாக இருந்தது. இது 14வது நிதிக்குழுவில் 2.5 சதவீதமாகவும், 15வது நிதிக்குழுவில் 1.925 சதவீதமாகவும் குறைந்துள்ளது. அதிக தனிநபர் வருமானம் மற்றும் மக்களின் தொகை வளர்ச்சியை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்காக கேரள மக்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என கூறினார்.

கேரள அரசும் வியாழக்கிமை டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட உள்ளது.

முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)