துக்க வீட்டினரின் இன்னலைக் குறைக்கும் நடமாடும் தகன வாகனம்
மழைக்காலம் வந்துவிட்டால் சுடுகாடுகளில் விறகு மூட்டி சடலத்தை எரிப்பது மிகவும் சிரமமாகிவிடும். அதேபோல், மலைவாழ் மக்களும் மின்மயானத்தில் இருந்து தொலை தூரத்தில் உள்ள மக்களும் சடலத்தை மின் மயானத்திற்கு கொண்டு சென்று எரிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை களையும் விதமாக, ஈரோட்டில் நடமாடும் எரியூட்டு வாகனம் இயங்கி வருகிறது.
ஏற்கனவே குடும்பத்தில் ஒருவரை இழந்து தவிக்கும்போது, உறவினர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்து அவர்களை மின்மயானத்துக்கு அழைத்துச் செல்வதற்கு துக்க வீட்டினர் அதிக செலவு செய்ய வேண்டி வரும்.
ஆனால், ஈரோடு மாநகராட்சியுடன் இணைந்து ரோட்டரி கிளப் இந்த நடமாடும் எரியூட்டு வாகன வசதியை 5,000 ரூபாய் கட்டணத்தில் அளித்து வருகிறது. தற்போது ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த சேவை கிடைக்கிறது.
ஈரோட்டில் உள்ள ஆத்மா மின்மயான அலுவலகத்தில் இருந்து 10 கிலோமீட்டர் வரை 5,000 ரூபாயும் அதற்கு மேல் தொலைவு என்றால் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தலா 20 ரூபாய் வசூலிக்கின்றனர்.
எரிவாயு, ஜெனரேட்டர் செட், விளக்கு, இறுதியாக ஒலிக்கும் ”ஜென்மம் நிறைந்தது” பாடல் ஒலிப்பெருக்கி உள்ளிட்ட வசதிகளுடன் இறந்தவரின் தோட்டத்துக்கோ அல்லது கிராமப்புற மின்மயானத்துக்கோ வந்து சடலத்தை எரித்து, ஒரு மணிநேரத்தில் அஸ்தியையும் உறவினர்களின் கைகளில் இவர்கள் கொடுத்து விடுகின்றனர்.
தயாரிப்பு: கலைவாணி பன்னீர்செல்வம்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



