வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்?

பட மூலாதாரம், Getty Images
வங்கக்கடலில் நவம்பர் 22-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் நாளை (நவம்பர் 19-ஆம் தேதி) மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்று காலை 08:30 மணி முதல் இரவு 07:30 மணி வரையில் அதிகபட்சமாக தென்காசியில் 6.4 செமீ மழையும் திருநெல்வேலியில் 2.7 செமீ மழையும் திருவாரூரில் 2.6 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
நாளை தென் தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கரையை ஒட்டிய பகுதிகளில் 40 - 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் காற்று 60 கிமீ வரை செல்லக்கூடும் என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் என்ன நிலை?

பட மூலாதாரம், Getty Images
"வருகின்ற 22-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்" என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு, குறிப்பாக கரையோர மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள் எவை?

பட மூலாதாரம், Getty Images
19-11-2025: மயிலாடுதுறை மற்றும் கடலூர்
20-11-2025: மயிலாடுதுறை மற்றும் கடலூர்
21-11-2025: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகபட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால்
22-11-2025: இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மற்றும் காரைக்கால்
23-11-2025: திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுவை மற்றும் காரைக்கால்
24-11-2025: திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுவை மற்றும் காரைக்கால்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































