You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரளாவில் கோயில் விழாவில் நேரிட்ட வெடிவிபத்தில் 150 பேர் காயம் - என்ன நடந்தது? (காணொளி)
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் தய்யம் விழாவின் போது ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காசர்கோடு நீலேஸ்வரம் பகுதியில் உள்ள வீரர்காவு கோயிலில் தய்யம் நடன விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று நள்ளிரவு பட்டாசுகள் வெடிக்கப்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் எட்டு பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறுகிறது.
விழா நடைபெற்ற வீரர்காவு கோவிலில் கொண்டாட்டங்களுக்காக பட்டாசுகள் அதிக அளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த இடத்திலிருந்து நள்ளிரவு 12.30 மணியளவில் வெடிச்சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது கோயிலில் இந்த ஆண்டின் களியாட்டம் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.
“நடனத்தை பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென பெரிய வெடி சத்தம் கேட்டது. அதன் பின் நெருப்பு பிழம்பு எழும்பியதை பார்த்தோம். எல்லாரும் வெவ்வேறு திசைகளில் சிதறி சென்றனர்.” என்று விபத்தை நேரில் பார்த்த நபர் உள்ளூர் ஊடகங்களில் பேட்டி அளித்திருந்தார்.
பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது அங்கிருந்து பறந்த தீப்பொறி, பட்டாசு சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டு 30 பேர் Aster MIMS என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த மருத்துவமனையின் அவசர பிரிவுத் தலைமை மருத்துவர் ஜினேஷ் வீட்டிலாகத், “நோயாளிகள் வந்த உடனே அவர்களுக்கு முதலுதவி கொடுக்கப்பட்டதால், அவர்களின் நிலையை சீராக வைக்க முடிந்தது. மேலும் பரிசோதனைகள், சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று ஏன்.என்.ஐ. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
தீவிரமாக காயமடைந்தவர்களுக்கு தீக்காயம் 80% இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சம்பவ இடத்திலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பட்டாசு சேமித்து வைக்கப்பட்டிருந்த இடமும், பட்டாசுகளை வெடித்த இடமும் அருகருகே இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)