இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடிய தேசிய விருதை திருப்பி தந்து மன்னிப்பு கேட்ட திருடர்கள் - காணொளி
இயக்குனர் மணிகண்டன் வீட்டில் தேசியவிருதை திருடிச் சென்ற மர்ம நபர்கள், அதை மன்னிப்பு கடிதத்துடன் மீண்டும் வாசலில் தொங்கவிட்டுச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மணிகண்டனுக்குச் சொந்தமான மதுரை உசிலம்பட்டி வீட்டை நரேஷ்குமார் என்பவர் பராமரித்து வருகிறார். கடந்த 8ஆம் தேதி வீட்டில் கொள்ளைச் சம்பவம் நடந்ததாகவும், பூட்டிய வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஒரு லட்சம் பணம், 5 பவுன் தங்க நகை, ஒரு செல்போன் மற்றும் கடைசி விவசாயி படத்துக்கு கிடைத்த தேசிய விருது ஆகியவற்றை திருடிச் சென்றனர் என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் குறித்து உசிலம்பட்டி போலீஸார் விசாரித்து வரும் நிலையில், திருடிய தேசிய விருதை மட்டும் மன்னிப்பு கடிதத்துடன் மர்ம நபர்கள் மணிகண்டன் வீட்டு வாசலில் பிப்ரவரி 13-ம் தேதி தொங்கவிட்டுச் சென்றுள்ளனர்.
அந்த மன்னிப்பு கடிதத்தில், ஐயா எங்களை மன்னித்துவிடுங்கள், உங்கள் உழைப்பு உங்களுக்கு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



