மும்பையில் புழுதிப் புயல், கனமழைக்கு 14 பேர் பலி - என்ன நடந்தது?
மும்பையில் திங்கள்கிழமை அன்று வீசிய புழுதிப் புயல் மற்றும் மழைப்பொழிவு காரணமாக, ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர்.
மும்பை புறநகரில் அமைந்துள்ள காட்கோபர் பகுதியில் உள்ள சம்தா காலனியின் ரயில்வே பெட்ரோல் பம்ப் அருகே ஒரு ராட்சத விளம்பர பேனர் பொருத்தப்பட்டிருந்தது. திங்கள்கிழமை மாலை 4.30 மணியளவில் திடீரென வீசிய பலத்த சூறைக்காற்றால் இது சரிந்து விழுந்தது. 70x50 மீட்டர் என்ற அளவில் இருந்த மிகப்பெரிய பேனர் அது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த விளம்பரப் பேனர் பெட்ரோல் பம்ப் மீது விழுந்துள்ளது. மழை மற்றும் புழுதிப் புயல் காரணமாக ஏராளமான மக்கள் அந்த பெட்ரோல் பம்பில் ஒதுங்கி நின்றுள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் கூறுகையில், மீட்புப் பணி நள்ளிரவு வரை தொடர்ந்ததாகவும், மேலும் சிலர் சிக்கியிருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விபத்தை நேரில் கண்டவர் கூறியது என்ன?
திங்கள்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிய மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் கமிஷனர் பூஷன் கக்ரானி, “காட்கோபரில் ஒரு விளம்பரப் பேனர் சரிந்து விழுந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதுவரை 64 பேர் ராஜாவாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மொத்தம் நான்கு பேர் இறந்துள்ளனர், சம்பவ இடத்திலும் நான்கு பேர் இறந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது."
இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில் , "நான் அங்கு இருந்தேன். மோசமான புயல் வீசிக்கொண்டிருந்தது. கனமழையும் பெய்து கொண்டிருந்ததால் காரை ஓரமாக நிறுத்தி, அங்கேயே சிறிது நேரம் இருந்தோம். திடீரென விளமபரப் பலகை சரிந்து விழுந்தது. இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் உட்பட அங்கு நின்றிருந்த மக்களும் உள்ளே சிக்கிக் கொண்டனர்.” என்று கூறினார்.
முழு விவரம் காணொளியில்...

பட மூலாதாரம், ANI
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



