காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் தீவிரம் - இணையம், தகவல் தொடர்பு துண்டிப்பு
காஸா மீது தரைவழியேயும் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால் இது ஏற்கெனவே அறிவித்த தரைவழிப் படையெடுப்பின் தொடக்கமா என்பதை இஸ்ரேல் தெளிவுபடுத்தவில்லை.
காஸாவின் வடக்கு பகுதியில் 150 இலக்குகளை தாக்கி அழித்திருப்பதாகவும் ஹமாஸ் பயன்படுத்திய சுரங்கங்கள், உள்கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் இரவோடு இரவாக நடத்தப்பட்ட தாக்குதலில், இஸ்ரேல் போர் விமானத் தாக்குதலில் ஹமாஸின் வான்வழி கமேண்டரான ஆசிம் அபு ரகபா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியுள்ளது. இவர் ஹமாஸின் டிரோன், பாராகிளைடர், ஆள் இல்லா விமானப்பிரிவின் தலைவர் எனக்கூறும் இஸ்ரேல், அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் பாராகிளைடரில் ஊடுருவி தாக்குதல் நடத்த இவர்தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து, காஸாவில் இணைய மற்றும் தகவல் தொலைதொடர்பு சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் காஸாவில் உள்ள சுமார் 23 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காஸாவில் பொதுமக்களுக்கு உதவி வரும் மருத்துவ உதவி அமைப்புகள், அங்குள்ள இணையம் மற்றும் தொலைபேசி தொடர்புகள் செயலிழந்ததால், களத்தில் உள்ள தங்கள் குழுக்களுடன் பேச முடியவில்லை என்று கூறுகின்றன.
தொலைத்தொடர்பு மொத்தமாக முடக்கப்பட்டிருப்பது ‘மிகப்பெரும் அட்டூழியங்களை’ மறைக்க உதவக்கூடும் என்று மனித உரிமை கண்காணிப்பகம் என்ற அரசு சாரா அமைப்பு எச்சரித்துள்ளது.

பட மூலாதாரம், AFP
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



