வணங்கானை விட்டு சூர்யா விலகல்: என்ன பிரச்னை?

பிரசுரிக்கப்பட்டது

தான் இயக்கும் 'வணங்கான்' படத்தைவிட்டு சூர்யா விலகியிருப்பதாகவும் ஆனாலும் அந்தப் படத்தின் பணிகள் தொடருமென்றும் இயக்குநர் பாலா அறிவித்திருக்கிறார். இந்தப் படத்தில் என்ன பிரச்னை?

 

தான் இயக்கிவரும் 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகுவதாகவும் கதையில் மாற்றம் செய்யப்பட்டதாலேயே இந்த முடிவு என்றும் இயக்குநர் பாலா ஞாயிற்றுக் கிழமையன்று இரவில் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தார்.

இதற்குச் சில நிமிடங்களில் சூர்யாவுக்குச் சொந்தமான 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் அந்தப் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது.

 

"என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ’வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

 

என் மீதும், இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

 

எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.

 

'நந்தா'வில் பார்த்த சூர்யா, 'பிதாமகனி'ல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி 'வணங்கான்' படப்பணிகள் தொடரும்" என பாலா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

  

இதற்கு அடுத்த சில நிமிடங்களில் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் வணங்கானிலிருந்து விலகிக்கொள்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது.

"பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யா  அவர்களும் 2D Entertainment நிறுவனமும் வணங்கானில் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்." என்று அந்த ட்விட்டர் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

சூர்யாவை வைத்து இதற்கு முன்பாக பாலா நந்தா (2001), பிதாமகன் (2003) ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.  கடந்த ஆண்டின் இறுதியில் சூர்யாவை வைத்து மீண்டும் ஒரு படத்தை பாலா இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. சூர்யா - ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தைத் தயாரித்து வந்தது. இந்தப் படத்திற்கு ஜி.வி. ப்ரகாஷ் இசையமைப்பது என்றும் கீர்த்தி ஷெட்டியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரில் துவங்கியது. ஆனால், படப்பிடிப்பு துவங்கியதிலிருந்தே பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையில் வாக்குவாதம்; படப்பிடிப்புத் தளத்திலிருந்து சூர்யா வெளியேறினார் என்பது போன்ற செய்திகள் வெளிவந்தபடியே இருந்தன.

இதற்குப் பிறகு, மே 26ஆம் தேதி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "சூர்யா 41. மீண்டும் செட்டிற்குத் திரும்பக் காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டார். இதன் பிறகு, அது போன்ற வதந்திகள் சற்று ஓய்ந்தன.

குறிப்பாக கடந்த சூலை மாதத்தில் படப்பிடிப்புத் தளத்திலேயே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதனால், சூர்யா கோபித்துக்கொண்டு சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்தத் தகவல்களை மறுக்கும்வகையில், பாலாவின் பிறந்த நாளன்று வணங்கான் படத்தின் ஸ்டில்களுடன் பாலாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார் சூர்யா.

ஆனால், கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று  சிவாவின் இயக்கத்தில் தான் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவது குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் சூர்யா. இதனால், பாலாவின் இயக்கத்தில் அவர் நடித்துவந்த படம் என்னவானது என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

இந்த நிலையில்தான் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக இரு தரப்பும் அறிவித்திருக்கின்றன.

1999ஆம் ஆண்டில் விக்ரம் நடித்த சேது படத்தின் மூலம் தனது திரைவாழ்வைத் துவங்கிய இயக்குநர் பாலா, விக்ரமின் மகன் நடித்த வர்மா வரை ஒன்பது படங்களை இயக்கியுள்ளார்.

வர்மா படத்தைப் பொறுத்தவரை, தான் நினைத்தபடி வரவில்லை என்பதால், அதே கதையை வேறொரு இயக்குரை வைத்து இயக்கச்செய்து வெளியிட்டார் விக்ரம். பிறகு, வர்மா படம் ஓடிடியில் வெளியானது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: