உலகின் கவனத்தை ஈர்த்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு- பாகிஸ்தான் கூறியது என்ன?
சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு உலகின் கவனத்தை ஈர்த்தது.
இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.
குறிப்பாக, இந்தியப் பிரதமர் மோதி சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். இந்தியா 50 சதவிகித அமெரிக்க வரியை எதிர்கொள்ளும் நேரத்தில் இருவரின் சந்திப்பும் நடந்துள்ளது.
கடந்த கால எல்லை மோதல்களைத் தவிர்த்து, இந்தியாவும் சீனாவும் தங்கள் உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியதாக தெரிகிறது.
பிரதமர் மோதியுடனான சந்திப்பில், உலகளாவிய சூழ்நிலை மாறி வருவதாகவும், உலக மக்கள்தொகையை அதிகம் கொண்டுள்ள இந்தியாவும், சீனாவும் குளோபல் சௌத்-இன் முக்கிய அங்கங்கள் என்றும் ஷி ஜின்பிங் பேசினார்.
இரு நாடுகளும் நல்ல நண்பர்களாக இருப்பதும், "ஒருவருக்கொருவர் வெற்றிக்குப் பங்களிக்கும் கூட்டாளிகளாக மாறுவதும் முக்கியம் என கூறிய சீன அதிபர், டிராகனும் யானையும் ஒன்றிணைய வேண்டும்" என்றார்.
பிரதமர் நரேந்திர மோதி, "தனது உறவுகளை மேம்படுத்த இந்தியா உறுதியாக உள்ளது" என்று கூறினார்.
அதேசமயம், எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்றபின் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தியான்ஜின் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார்.
அதில், "பாகிஸ்தான்–சீனா நட்பு அனைத்து சோதனைகளையும் கடந்தது. இது பரஸ்பர நம்பிக்கை, மரியாதை, உண்மையான அன்பை அடிப்படையாகக் கொண்டது" என அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



